Monday, May 17, 2010

வைகாசி மாத ராசி பலன்கள்

மேஷ ராசி
ராசிநாதன் செவ்வாய் இதுநாள் வரை நீச்சமாக இருந்ததால் தடை, சங்கடம், இடையூறு என நிம்மதியற்ற நிலை இருந்தது. வைகாசி 10ம் தேதிக்கு மேல் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால் ஏற்றங்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். உடல்நலம் சீராகும். முகத்தில் தெளிவு உண்டாகும். யோகாதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால் வேலை சம்பந்தமாக ஆர்டர் கிடைக்கும். பள்ளி, கல்லூரியில் சேரும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் நிதானமாக இருந்தால் டென்ஷன், எரிச்சலை தவிர்க்கலாம். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். தடைபட்ட குலதெய்வ நேர்த்திக் கடன், பரிகார பூஜைகள் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் வீடு, நிலம், பிளாட், வாகனம் வாங்குவீர்கள். வங்கி, இன்சூரன்ஸ் சம்பந்தமாக சாதகமான பதில் வரும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும். தொழில், வியாபாரத்தில் புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்:
கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வாங்கித் தரலாம். ஏழை மாணவர் படிப்புக்கு உதவலாம்.

ரிஷப ராசி
சாதக, பாதகங்கள், ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள் கலந்து இருக்கும் மாதம். தன குடும்ப ஸ்தானத்தில் கேது, விரய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் எதிலும் முன்யோசனை, நிதானம் தேவை. அவசிய தேவைகளுக்காக வைகாசி 15ம் தேதிக்கு மேல் கடன் வாங்க நேரலாம். சகோதர உறவுகளிடையே இருந்த உரசல்கள், மனஸ்தாபங்கள் மாறும். சுபகாரிய விஷயமாக முக்கிய சந்திப்புகள் நடக்கும். இழுபறியில் இருந்த நில விவகாரங்கள் நல்லபடியாக முடியும். தாய் உடல்நலம் சீராகும். வேலை சம்பந்தமாக நல்ல தகவல் கிடைக்கும். இடமாற்றம் சம்பந்தமாக நல்ல முடிவு எடுப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கான கடிதம் சாதகமாக வந்து சேரும். வெளிநாடுகளில் வேலையில் இருந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவர். உத்யோகத்தில் பொறுப்பு கூடும். இடமாற்றம் வரலாம். தொழில், வியாபாரம் லாபகரமாக போகும். எதிலும் அகலக்கால் வேண்டாம். எதிர்பார்த்திருக்கும் வங்கி உதவி கிடைக்கும்.

பரிகாரம்:
அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம். ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழி படலாம். ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் செய்யலாம்.

மிதுன ராசி
வாக்கு ஸ்தானத்தில் இருந்து இடையூறு, அலைச்சல், குழப்பத்தை ஏற்படுத்திவந்த செவ்வாய் இந்த மாதம் சிம்ம ராசிக்கு செல்கிறார். எல்லாவற்றிலும் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் வீசிய அக்னிப்புயல் அடங்கும். மகன், மகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. சகோதர உறவுகள் அனுசரணையாக இருப்பார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். கல்வி செலவு உண்டாகும். நிலம் விற்பது, வாங்குவதில் அவசரப்பட்டு முடிவு எடுப்பது நல்லதல்ல. பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து ஆதரவு, ஆதாயம் உண்டு. குரு பார்வை பலம் காரணமாக மருத்துவ செலவுகள் குறையும். எதிர்ப்புகள் மறையும். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். வேலை சம்பந்தமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வெளியூரில் இருந்து சுப செய்தி எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் சம்பள உயர்வு, லோன் விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் குவியும்.
பரிகாரம்:
ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி வழிபடலாம். ஸ்ரீரமணாய என்று தினசரி 108 முறை சொல்லலாம். முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.

கடக ராசி
பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் மாற்றம் அடைந்து சனீஸ்வரரை பார்ப்பதால் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும். மகன், மகள் வேலை விஷயமாக ஆர்டர் கை வந்து சேரும். செவ்வாயால் இருந்த டென்ஷன், முன்கோபம் படிப்படியாக குறையும். சகோதர உறவுகளுடன் இருந்த நெருக்கடிகள் தீரும். சகோதரர்களால் ஆதரவு, ஆதாயம் உண்டு. நிலம் வாங்குவது சம்பந்தமாக முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கும். பூர்வீக சொத்து விற்பதால் காசு, பணம் புரளும். பெண்களுக்கு வயிறு உபாதைகள் வந்து நீங்கும். சுக்கிரன் பலம் காரணமாக ஆடல், பாடல், சங்கீதம், விழா, விருந்து என்று வீடு களை கட்டும். உத்யோகத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் கூடி வரும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன்கள் வசூலாகும். புதிய கிளை தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும்.
பரிகாரம்:
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன், காஞ்சி காமாட்சியம்மனை தரிசிக்க எல்லாம் கூடி வரும். ஏழை கர்ப்பிணிகளின் பிரசவ செலவுக்கு உதவிகள் செய்யலாம்.

சிம்ம ராசி
லாப, நஷ்டங்கள், சாதக, பாதகங்கள் என்ற கிரக அமைப்புடன் மாதம் தொடங்குவதால் எதிலும் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சனியின் தாக்கம் குரு பார்வையால் சற்று குறையும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ராசிநாதன் கேந்திர பலம் பெறுவதால் தடைபட்ட அரசு காரியங்கள் சுமுகமாக நடக்கும். வீண் பிரச்னை ஏற்படலாம் என்பதால் தந்தையுடன் வாக்குவாதம் வேண்டாம். எதிலும் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தம்பதி இடையே அன்யோன்யம் அதிகமாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும். மகன், மகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. கல்வி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உயர்கல்வி சம்பந்தமாக நல்ல தகவல் வரும். அதிக சிரமமின்றி கல்லூரியில் சீட் கிடைக்கும். சொந்த ஊரில் நடக்கும் திருவிழா, விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். வியாபாரத்தில் தொட்டது துலங்கும்.

பரிகாரம்:
நவக்கிரக வழிபாடு நலம் தரும். சனிக்கிழமை சரபேஸ்வரரை வணங்கலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.

கன்னி ராசி
கிரக சஞ்சார அம்சங்கள் காரணமாக சில தடுமாற்றம், நெருக்கடிகள் வரலாம். எதையும் சிந்தித்து முடிவு எடுக்கவும். குரு பார்வை காரணமாக சில மாற்றங்கள் சாதகமாக இருக்கும். நிலம் விற்பதில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் சொந்த ஊர் திரும்பும் வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். பழைய வண்டியை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் அம்சம் காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. இன்டர்வியூ முடித்தவர்களுக்கு வேலை சம்பந்தமாக தகவல் வரும். தடைபட்ட நேர்த்திக் கடன்கள் பவுர்ணமிக்கு பிறகு முடியும். மகள் பிரசவ சம்பந்தமாக செலவு ஏற்படும். உயர் பதவியில் இருக்கும் நண்பர் பணப் பிரச்னையை தீர்த்து வைப்பார். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரம் சுறுசுறுப்படையும். பழைய கடன், பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்:
சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். பவுர்ணமியில் விரதம் இருப்பது தடை, தடங்கல்களை நீக்கும். ஏழை பெண்களுக்கு உதவிகள் செய்யலாம்.

துலாம் ராசி
ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் விருந்து, விழா களைகட்டும். மனம் குதூகலமாகும். பெண்களால் ஆதாயம் உண்டு. லாப ஸ்தான சூரியன் தன ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து காசு, பணம் வந்து சேரும். மனைவியால் பண சிக்கல்கள் தீரும். பெண்கள் அநாவசிய விஷயங்களை நினைத்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் உங்களை புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள். நில விஷயங்களை சற்று தள்ளிப் போடலாம். வயிறு, உஷ்ண உபாதைகள் வந்து சரியாகும். பகீரத முயற்சிக்கு பிறகு, பிள்ளைகளுக்கு விரும்பிய பள்ளி, கல்லூரியில் இடம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் குறையும். புதன் பார்வையால் இழுபறியில் இருந்த விஷயங்களை சாதுர்யமாகி பேசி முடிவெடுப்பீர்கள். பாக்ய ஸ்தான கேதுவால் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தர்ம புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் சலுகைகள் எதிர்பார்க்கலாம். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
பரிகாரம்:
தினசரி அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். வியாழன்தோறும் விஷ்ணு துர்க்கையை வழிபடலாம். பக்தர்களுக்கு ஆன்மீக, ஸ்லோக புத்தகங்கள் வாங்கித் தரலாம்.

விருச்சிக ராசி
ராசிநாதன் நீச்ச அம்சத்தில் இருந்து விலகுவதால், மனதில் இருந்த பாரம் குறையும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். ராகு, கேதுக்களால் சில தடைகள், இடையூறுகள் வரலாம். இருந்தாலும் குரு பார்வை பலத்தால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். சகோதரர்களிடையே இருக்கும் பனிப்போர் முடியும். தாய் உதவியால் முக்கிய விஷயம் சாதகமாக முடியும். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். புகழ்பெற்ற கல்லூரியில் இருந்து அட்மிஷனுக்கான கடிதம் வரும். சுபகாரியம் தொடர்பாக வெளியூர் உறவினரிடம் இருந்து முக்கிய செய்தி வரும், அது சம்பந்தமாக வெளியூர் பயணமும் இருக்கும். குரு, சனி பார்வையால் பணப் புழக்கம் அதிகரிக்கும். அவசிய, ஆடம்பரப் பொருள் சேரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். ஜீவன ஸ்தானம் பலமாக இருப்பதால் உத்யோகத்தில் பதவி, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வெளியூர் மாற்றங்களுக்கும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரம் ஜாம் ஜாம் என்று நடக்கும்.

பரிகாரம்: ‘ராம ராம’ என்று தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம். பார்வையற்றோருக்கு உதவலாம்.

தனுசு ராசி
ராசிநாதன் குரு சதுர்த்த கேந்திரத்தில் ஆட்சி பலம் பெற்று சனி பகவானை பார்ப்பதால் உடலிலும் மனதிலும் புது உத்வேகம் பிறக்கும். குடும்ப, தன ஸ்தானாதிபதி சனியை குரு பார்ப்பதால், தடைபட்ட சுபகாரியங்கள் ஜாம் ஜாம் என்று தொடங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். சகோதர உறவுகளால் செலவு, அலைச்சல் இருக்கும். பெண்களுக்கு தலைவலி, நரம்பு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். நில விஷயத்தில் இருந்த முட்டுக்கட்டை விலகும். கல்வி சம்பந்தமாக அலைச்சல், செலவு இருக்கும். மாமியார், நாத்தனார் உறவுகள் அனுசரணையாக இருப்பார்கள். சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வேலைகள் சற்று தாமதமாகும். வழக்கு சம்பந்தமாக மாதக் கடைசியில் அனுகூலமான செய்தி வரும். உத்யோகத்தில் வேலை சுமை, பொறுப்பு அதிகமாகும். வியாபாரம் சம்பந்தமாக அலைச்சல், திரிச்சல் இருக்கும். இரும்பு, எண்ணெய் தொழில்கள் ஏற்றமாக நடக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை பசு மாட்டுக்கு கோதுமை சாதம் தரலாம். பிரதோஷ காலத்தில் நந்தியை 27 முறை வலம் வந்து அருகம்புல் சாற்றி வழிபடலாம். கஷ்டப்படும் முதியோருக்கு உதவலாம்.

மகர ராசி ராசிதான் சனியை குரு பார்ப்பதால் எல்லா செயல்களையும் வேகமாக, விவேகமாக செய்து முடிப்பீர்கள். இனம் புரியாத கவலைகள், பயம் நீங்கும். பணம், கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும். ராசியை பார்த்த செவ்வாய் தற்போது 2ம் இடத்தை பார்ப்பதால் வாக்குவாதம், வாக்குறுதி தவிர்க்கவும். திடீர்திடீரென டென்ஷன், கோபம் தலை தூக்கும். பேச்சு, செயலில் பொறுமை, நிதானம் அவசியம். தந்தையால் ஆதாயம் உண்டு. நில விஷயமாக சிறிது அலைச்சல் இருக்கும். வயிறு, உஷ்ண உபாதைகள் வந்து விலகும். பிள்ளைகள் வேலை விஷயமாக நல்ல தகவல் வரும். உறவுப் பெண்களால் சில தொந்தரவுகள் வந்து விலகும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். பரிகார பூஜைகள் நல்லபடியாக நிறைவேறும். சுக்கிரன், கேதுவுடன் இருப்பதால் உத்யோகத்தில் சில தடுமாற்றங்கள் வரலாம். தொழில், வியாபாரம் சீராக போகும். புதன் அம்சத்தால் திடீர் யோகம் உண்டு.
பரிகாரம்:
வறுமையில் வாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை தோறும் உணவு வழங்கலாம். மற்ற உதவிகள் செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்.

கும்ப ராசி அஷ்டம சனியுடன் 7ம் இடத்தில் இருக்கும் செவ்வாயால் தடுமாற்றம், இடையூறு, டென்ஷன் இருக்கும். ஆனாலும் சனியை குரு பார்ப்பதால் தடைகள் படிப்படியாக விலகும். மகிழ்ச்சி அதிகமாகும். 2ம் இடத்தில் குரு ஆட்சி பலம் பெறுவதால் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு வருவார்கள். சகோதர உறவுகளுடன் இருந்த பனிப்போர் நீங்கும். சகோதரர்களால் கணிசமான ஆதாயங்கள் உண்டு. குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இழுபறியில் இருந்த அரசு விஷயங்கள் சாதகமாக நடக்கும். வழக்கு விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் சுபகாரியத்துக்கான அறிகுறி தெரியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை வணங்கலாம். ‘ஸ்ரீமதே ராமானுஜாய’ என்று தினமும் 108 முறை சொல்லலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவலாம்.

மீன ராசி
ராசிநாதன் குரு விரய ஸ்தானத்தில் இருந்து ஜென்ம ராசியில் வந்து அமர்ந்து இருக்கிறார். ஜென்ம குரு தடைகள், இடையூறு செய்வார் என்பது சாஸ்திர அமைப்பு. இருந்தாலும் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருந்து பார்வை பலம் காரணமாக உங்களுக்கு பல யோகங்களை தர இருக்கிறார். சனியின் பார்வை காரணமாக இருந்த அசதி, சோம்பல், சிடுசிடுப்பு மறையும். மாமன் வகை உறவுகளால் நன்மைகள் குவியும். தடைபட்ட கட்டிட வேலை மளமளவென தொடங்கும். தாய் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் திருமண விஷயமாக நல்ல தகவல் வரும். பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும். உறவுப் பெண்களால் சில சங்கடங்கள் வந்து விலகும். இல்லத்துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். உத்யோகத்தில் நேர்முக, மறைமுக எதிர்ப்புக்கள் மறையும். செல்வாக்கு கூடும். தொழில், வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும்.
பரிகாரம்: வியாழன்தோறும் ஷீர்டி சாய்பாபாவை தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலில் வழிபாடு நடத்தி, கொண்டைக் கடலை சுண்டல் விநியோகம் செய்யலாம். மரக்கன்று நட்டு பராமரிக்கலாம்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger