Saturday, July 31, 2010

போலி பத்திரம் மூலம் மோசடி

 நிலத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அதோடு சேர்ந்து, நிலம் தொடர்பான தகராறு, கொலை, மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. போலி பத்திரம், ஆள் மாறாட்ட மோசடிகளை தடுக்க தமிழகத்தில் மின்னணு கருவி மூலம் பத்திரப் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் மின்னணு கருவி மூலம் பத்திரப் பதிவு முறை அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி பத்திரம் மூலம் மோசடி நடப்பது உடனடியாக பாதியாகக் குறையும். நிலத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியதில் இருந்தே, இது தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது. உரிமையாளருக்குத் தெரியாமல் போலி பத்திரம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் விற்பனை செய்வது, உரிமையாளர்கள் இருக்கும்போதே, அவர்கள் வீட்டில் 30, 40 பேராக நுழைந்து அதிரடியாக உரிமையாளர்களை வெளியேற்றுவது, மிரட்டி, குறைந்த விலைக்கு பேசி முடிப்பது என பல மோசடிகள் நடக்கின்றன. வெப் கேமரா மூலம் படம் எடுப்பது, கை ரேகைகளை பதிவு செய்வது போன்ற கட்டுப்பாடுகள் அமலாவதால், மோசடிகள் பெரிதும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் வெப் கேமரா மூலம் எடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் சேகரிக்கப்படும். அடுத்து இரு தரப்பின் கை ரேகைகளும் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். ஒரு முறை இதுபோல் சேமித்துவைத்து விட்டால், அடுத்து அதே நிலம் கைமாறும்போது, கம்ப்யூட்டர் ஆவணங்களுடன் ஒப்பிடப்பட்டு, சரி பார்க்கப்படும் என்பதால் மோசடி நடக்காது. மேலும் கை ரேகையும் புகைப்படமும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால், அவை தெளிவாக இருக்கும். மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் இல்லாமல் தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.
நவீன தொழில்நுட்பத்தை வில்லங்கம் நிறைந்த பத்திரப் பதிவு போன்ற துறைகளில் பயன்படுத்த தொடங்கும்போது, ஊழல், மோசடிகளுக்கு இடமிருக்காது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி ஆசாமிகளிடம் அப்பாவி பொதுமக்கள் இழப்பது தடுக்கப்படும். அதே போல், காலியாகக் கிடக்கும் நிலங்களில் திடீரென குடிசை போட்டு, தன்னோட இடம்தான் இது என போலி பத்திரத்தைக் காட்டி அப்பாவிகளிடம் ஏரியா ரவுடிகள் அடாவடி செய்வதும் அடங்கும்.

இங்கிலாந்தில் குடியேற இனி, ஆங்கில தேர்வு

 ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்தில் செட்டில் ஆகும் எண்ணம் இருந்தால் 3 மாதங்களுக்குள் அதை முடித்து விடுங்கள். ஏனெனில், அதன் பிறகு அந்நாட்டில் குடியேற அவர்கள் வைக்கும் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது.
இங்கிலாந்தில் வசிப்பவரை திருமணம் செய்யவோ, அங்கு நிரந்தரமாக தங்கவோ விரும்பும் ஐரோப்பிய நாடு அல்லாத வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறையை பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குறுகிய கால வேலை, தற்காலிக பணி, சுற்றுலா ஆகிய காரணங்களில் இங்கிலாந்து வரும் எந்நாட்டினருக்கும் எந்த நிபந்தனையும் இல்லை.
ஆனால், இங்கிலாந்திலேயே செட்டில் ஆவது, அந்நாட்டு வாழ்க்கை துணையுடன் இணைவது, நிரந்தர பணியாக தங்குவது ஆகிய காரணங்களில் வருவோர், ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. அதற்காக தேர்வு நடத்தி அனுமதி வழங்க இங்கிலாந்து எல்லை முகாமை (யுகேபிஏ) என்ற ஏஜென்சிக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிரடி மாற்றம், நவம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக யுகேபிஏ அறிவித்துள்ளது.
இப்போது இங்கிலாந்தில் தங்கியுள்ள ஐரோப்பா அல்லாத வெளிநாட்டினர், இங்கிலாந்து குடிமகன்/மகளை திருமணம் செய்யவும் இந்த விதிமுறை பொருந்தும். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு செட்டில் ஆகி விட்டாலும், 2 ஆண்டுகள் தற்காலிக குடியுரிமை மட்டுமே கிடைக்கும்.

Thursday, July 29, 2010

புற்றுநோய்க்கு மருந்தாகிறது ஆக்டோபஸ் நஞ்சு

 ஜோசியத்தால் பிரபலமடைந்த ஆக்டோபஸ் இப்போது மருத்துவத் துறையை கலக்கத் தொடங்கியிருக்கிறது. புற்றுநோய், உடல்வலி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க ஆக்டோபசின் நஞ்சை மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மெல்பர்ன் பல்கலைக்கழகம், நார்வே அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், மற்றும் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மருத்துவர் பிரையன் பிரை தலைமையில் கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ், கட்டில் பிஷ் எனப்படும் சிப்பி மீன் மற்றும் இதர ஆழ்கடல் மீன்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் போது ஆக்டோபசில் மேலும் 4 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் இதில் கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அன்டார்ட்டிகா கடல் பகுதியில் வாழும் ஆக்டோபசின் நஞ்சு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்பதையும் இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக விலங்குகளின் நஞ்சு மனித இனத்துக்கு மருந்தாக பயன்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மருத்துவம் சார்ந்த கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டோபசின் நஞ்சில் மிகக் குறைந்த அளவில் சத்து மிக்க புரதச் சத்து இருப்பதும், அது மனிதனுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அன்டார்டிக் கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 203 ஆக்டோபஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இரட்டை வேட கபட நாடகம்

 
 
 விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய விவகாரத்தின் பரபரப்பு பல திசைகளில் நீடிக்கிறது. ஆப்கனில் தலிபான்களை ஒழிக்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால் அவர்களை ஒடுக்குவது சவாலாகவே இருந்து வருகிறது. தலிபான்களை ஒடுக்க, பாகிஸ்தான் துணையை அமெரிக்கா நாடியது. இதற்காக பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால் இந்த உதவியையும் பெற்றுக்கொண்டு, தலிபான் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பாகிஸ்தான் அளித்து வருகிறது. இதைத்தான் இணையதளம் அம்பலப்படுத்தியது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தலிபான் தீவிரவாதிகளுடன் உள்ள உறவை 90 ஆயிரம் ஆவணங்களுடன் இந்த இணையதளம் ஆணித்தரமாக நிறுவியுள்ளது. பாகிஸ்தானின் இரட்டை வேட கபட நாடகம் இதனால் உலக அரங்கில் வெட்டவெளிச்சமானது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடுதான் ஆச்சர்யமளிக்கிறது. இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களை அமெரிக்கா தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விஷயம் எல்லாம் அவ்வளவு முக்கியமானதல்ல என்பதைப் போல அமெரிக்கா பேசுகிறது. இணையதளம் அம்பலப்படுத்தியதன் தர்மசங்கடம் மட்டுமே அதற்கு இருக்கிறது. விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய புலனாய்வு ரகசிய தகவல்களில் புதிய விஷயங்கள் ஏதும் இல்லை. அதில் உள்ள பல அம்சங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். போர்க்களத்தில் திரட்டப்பட்ட ரகசிய புலனாய்வு தகவல்கள் அம்பலமானது குறித்து தனது கவலையையும் அவர் தெரிவித்திருக்கிறார். போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இந்த தகவல்கள் மனச்சோர்வை ஏற்படுத்தி விடும் என்ற கவலைதான் அது.
தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிறது. அதிநவீன வசதிகளுடன் உள்ள அமெரிக்க படையால், மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாத குழுவை ஏன் ஒடுக்க முடியவில்லை என்பதை யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் உளவு அமைப்பு தலிபான்களுக்கு கொடுக்கும் சகலவிதமான உதவிகள்தான் இதற்கு காரணம். இது மிக வலுவான வகையில் நிரூபிக்கப்பட்ட பிறகும், பாகிஸ்தானுக்கு இணக்கமான போக்கை அமெரிக்கா கையாண்டு வருவது சரியல்ல. ராஜதந்திரம் என்றெல்லாம் சொல்லி, பாகிஸ்தானை கண்டிக்காமல் இருப்பது சரியல்ல. தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும் என்று அமெரிக்கா எடுக்கும் முயற்சி இதனால் பாதிக்கப்படவே செய்யும்

Wednesday, July 28, 2010

குழந்தைகளை ரொம்ப பொத்தி வளர்க்காதீங்க

 சிறு வலி, வேதனைகூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை பொத்தி வளர்க்காதீர்கள் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளிடம் தைரியத்தை வளர்ப்பது பற்றி இங்கிலாந்தில் உள்ள விபத்து தடுப்பு ராயல் சொசைட்டி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளது. குழந்தை வளர்ப்பு பற்றி அவர்கள் கூறியிருக்கும் ஆலோசனைகள்:
குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடினமான வேலைகளை பெற்றோர் தருவதில்லை. அவர்களால் செய்ய முடியாது என்று இவர்களே நினைக்கின்றனர். இன்னொரு காரணம், அந்த வேலைகளை செய்யும்போது குழந்தைகள் அடிபட்டு, இடித்துக் கொண்டுவிடக் கூடாதே என்ற அதிக அக்கறை. சம்மர் லீவில்கூட இசை, நடனம், எளிய விளையாட்டுகள் என்று உடலை வருத்தாத பயிற்சிகளிலேயே சேர்க்கின்றனர். வீட்டுக்குள் பொம்மையை வைத்துக்கொண்டோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுவது மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் பெற்றோரிடம் இந்த மனநிலை இருக்கிறது.
குழந்தைகள் கஷ்டப்படுவார்கள், தெரியாத வேலையில் ஈடுபட்டு அடிபட்டுக் கொள்வார்கள் என்று பெற்றோர் கருதக்கூடாது. ஆபத்து ஏற்படாத வகையில் அந்த செயலை எப்படி செய்ய வேண்டும் என்று பெற்றோர் அருகில் இருந்து சொல்லித்தர வேண்டும்.
அப்போதுதான், எந்த செயலையும் நம்மாலும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை குழந்தைகளிடம் அதிகரிக்கும். செயல்களை கவனமாக, பாதுகாப்பாக, ஆபத்து ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்படும். வாழ்வில் சிக்கலான சூழ்நிலைகளை சிறப்பாக சமாளிக்கும் திறமையை இது வளர்க்கும்.
இவ்வாறு ராயல் சொசைட்டி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கல்வி முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவது குறித்தும் நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். கட்டையில் ஆணி அடிப்பது, சிறிய மரம் ஏறுவது, மரத்தில் கயிறு கட்டி டயரில் தொங்குவது போன்ற பயிற்சிகளை நர்சரி பள்ளிகளிலேயே கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பல் வலியில் தப்பிக்க ஜெல் போதும்

 உயிர் போகிற சொத்தைப் பல் வலியில் இருந்து தப்பிக்க புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெல் சொத்தைப் பல்லை கீழே விழச் செய்வதுடன், பல் விழுந்த இடத்தில் 4 வாரங்களில் புதிய பல் முளைக்கவும் வகை செய்கிறது.
பாரீசில் உள்ள தேசிய உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல் குறித்து நடத்திய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பாக இந்த புதிய ஜெல் வெளியாகியுள்ளது. பாலி எல் க்ளூடாமிக் ஆசிட் என்ற ரசாயனக் கலவையுடன் மெலனோசைட்டிஸ் கலந்து இந்த ஜெல் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்தைப் பல் அல்லது பல் விழுந்த இடங்களில் இந்த ஜெல்லைத் தடவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்த ஜெல் உலகம் முழுவதும் கிடைக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் இவர்கள் தரப்புத் தகவல். இடுக்கி போன்ற ஆயுதங்கள் துணையோடு அளிக்கப்படும் சிகிச்சை வலியில் இருந்து விடுதலை பெற இந்த புதிய ஜெல் கைகொடுக்கும் என்று நம்பலாம். வாய் துர்நாற்றம், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் பிரத்யேக ஜெல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது கூடுதல் தகவல்.

பாகிஸ்தானில் விமான விபத்து - 100 பேர் பலி

 பாகிஸ்தானின் உள்நாட்டு விமானம் ஒன்று இஸ்லாமாபாத் அருகே இன்று காலை மலையில் மோதி நொறுங்கியது. 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்ப்ளு ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று, இன்று காலை 146 பயணிகளுடன் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டது. விமானத்தில் இரண்டு பைலட்கள் உள்பட 6 ஊழியர்கள் இருந்தனர். இஸ்லாமாபாத்தை ஒட்டிய மர்கல்லா மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் விமானத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்ட விமானம் வழி தெரியாமல் மலையில் மோதி நொறுங்கியது.
தகவல் அறிந்ததும் மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. விமானம் நொறுங்கிய பகுதியிலிருந்து வான் அளவுக்கு கரும் புகை எழுந்தது. மழை மற்றும் புகை மூட்டம் காரணமாக மீட்பு படையினர் விபத்து பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 45 பேர் மீட்கப்பட்டனர். 100 க்கும் அதிகமானோர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 20 உடல்கள் மீட்கப்பட்டன.

Tuesday, July 27, 2010

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர்

 பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு உள்பட பல பிரச்னைகளை எழுப்ப பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் விலைவாசி உயர்வை எதிர்த்து கடுமையாக குரல் கொடுக்க முடிவெடுத்துள்ளன.
நாட்டின் அதிமுக்கிய பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கு நல்ல தீர்வு காண வேண்டியது முக்கியம். எதிர்க்கட்சிகளின் கடமை அது. ஆனால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு பிரச்னை கிடைத்தது என்ற ஒரே கோணத்தில் இதை எதிர்க்கட்சிகள் அணுகுவது தவறு. விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி, பார்லிமென்டை முடக்க பா.ஜ. திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
கடந்தகாலங்களிலும் பார்லிமென்ட்டை முழுமையாக செயல்பட முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கியிருக்கின்றன. அமளி செய்த கட்சிக்கு ஒரு மலிவான விளம்பரம் கிடைக்கும். அதை தவிர இதனால் எந்த பயனும் இல்லை. விலைவாசி உயர்வு பிரச்னையை சரியான விவாதத்துக்கு கொண்டு செல்லாமல், சபை நடவடிக்கையை முடக்க நினைப்பதால் என்ன சாதித்து விட முடியும். இப் பிரச்னையை தீர்ப்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதைத்தான் அது காட்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் விவாதம் நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபட தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பும் எந்த விஷயத்திலும் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
எனவே பார்லிமென்ட் சுமுகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்து, முக்கிய பிரச்னைகளுக்கு ஆரோக்கியமான விவாதத்தின் வழியாக தீர்வு காண வேண்டும்.

Monday, July 26, 2010

ரயில்வேயில் அதிரடி

 
 
 ரயில்களில் வழங்கப்படும் உணவை சாப்பிடுவது போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது. அதிக கட்டணம் கொடுத்து வாங்கும் இந்த உணவு கைப்பிடி அளவுக்கு அவ்வளவு குறைவாக இருக்கும். தரத்தை பற்றி கேட்கவே வேண்டாம். பரிமாறும் முறை அதைவிட பயங்கரம். டாய்லெட் பக்கத்தில் எல்லாம் சாப்பாட்டு தட்டை அடுக்கி வைத்திருப்பார்கள். ரயில் உணவு குறித்து பல காலமாக பயணிகள் புகார் தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் டெல்லியில் இருந்து எர்ணாகுளம் வரும் துரந்தோ ரயிலில் உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தரமற்ற உணவு குறித்த பயணிகளின் குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் இப்போது காது கொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டது. பயணிகளின் குறைகளை போக்கும் வகையில், புதிய உணவு வினியோகிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ரயில்களில் சமையல் அறை மற்றும் சப்ளை செய்யும் முறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. உணவு பரிமாற பயன்படுத்தப்படும் தட்டு, பாத்திரம் போன்றவற்றை நடைபாதையிலும் கழிப்பறை அருகிலும் அடுக்கி வைப்பதை தடுக்கவும், பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது என அனைத்திலும் மிகுந்த கண்காணிப்புடன் தரத்தை மேம்படுத்தவும் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ரயில்களில் இப்போது இருக்கும் உணவு சமைக்கும் அறை சிறிதாக உள்ளது. இதனால் குறுகிய இடத்திலேயே எச்சில் பாத்திரங்களை வைப்பது, அதன் அருகிலேயே சமைத்த உணவை வைப்பது போன்ற சுகாதாரக் கேடுகள் இருந்தன. இப்போது இந்த அறையை பெரிதுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடப்பற்றாக்குறை நீங்கும். சமைக்கும் அறையும் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்கும். மேலும் பயணிகளுக்கு உணவு பரிமாற குறைந்த எடை கொண்ட தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பாதையில் உணவுப் பொருள் சிந்துதல் உள்ளிட்ட குறைகள் நீக்கப்படும். விரைவாகவும் பரிமாற உதவும்.
புதிய உணவு வினியோக திட்டத்தின்படி, ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் நவீன உபகரணங்களுடன் கூடிய சிறிய சமையல் அறை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தானியங்கி உணவு வழங்கும் மையங்களை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
ரயில் பயணிகளின் நெடுநாள் குறையை தீர்க்க ரயில்வே நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. 
தட்கல் டிக்கெட் முறையிலும் பல மாற்றங்கள் செய்து வரும் ரயில்வே துறையை 
பாராட்டாமல் இருக்க முடியாது.
அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பில் இன்னும் அக்கறை செலுத்தினால்,
சமிப காலமாக தொடந்து  நடைபெற்று வரும் ரயில் விபத்துக்களை தடுக்கலாம்.
ரயில் சிக்னல்களை இன்னும் நவீன படுத்தலாம் அல்லவா?

Saturday, July 24, 2010

அரசு பள்ளி சுவர்களும் இனி பாடம் சொல்லும்

 
 
 அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி என்று குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்க வைப்பதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தற்போது செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை நடைபெறும் வகுப்பறைகளின் சூழலை மாற்றும் வகையில், ‘கட்டிடத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்’(பில்டிங் அஸ் லேர்னிங் எய்டு) என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளின் சுவர்களும், மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம். இதன்மூலம், வகுப்பறை கதவை திறந்தவுடன் அதன் கீழ்பகுதியில் கோண அளவீடுகள் வரையப்பட்டிருக்கும். கதவு இத்தனை டிகிரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மாணவர்களால் அறிய முடியும்.
வகுப்பறை சுவர்களில் தமிழகம், இந்தியா மற்றும் உலக வரைபடங்கள் வரைதல், காலண்டர்கள் எழுத செய்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படும். தரை பகுதிகளில் கணித கற்றல் வடிவங்கள் ஏற்படுத்தப்படும். இதுபோன்று பல்வேறு கற்றல் செயல்பாடுகள் கட்டிடங்களையும், அது சார்ந்த பகுதிகளையும் மையப்படுத்தி இருக்கும்.
இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் பொற்றையடி அரசு நடுநிலைபள்ளி, மத்திக்கோடு அரசு தொடக்க பள்ளி, கேசவபுரம், ஆலன்கோட்டை, அண்டுகோடு அரசு நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்று அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, July 23, 2010

ஊழலில் கல்வித்துறை

 
 
 போலிமார்க்சீட்  ஊழலில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை. சென்னையில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கின்போதுதான் பல மாணவ, மாணவிகள் போலி பிளஸ்2 மார்க் பட்டியல் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் போலி மார்க்சீட்  தயாரித்து கொடுத்ததாக திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர். இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை ஊழியர் ஒருவரும் கைதாகியிருக்கிறார்.
இந்த கும்பல் கடந்த 8 ஆண்டுகளாக இந்த போலி வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறது. ‘அதிக மார்க் வேண்டுமா’ என்று டிபிஐ வளாகத்தில் கூவிக்கூவி அழைத்து வியாபாரம் நடத்தியிருக்கிறார்கள். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம்தான் அதிகளவில் போலி மார்க் ஷீட் கொடுத்துள்ளனர். பிள்ளையை டாக்டராக்கி விட வேண்டும், இன்ஜினியராக்கி விட வேண்டும் என்ற வெறியில் இருக்கும் பெற்றோர் இவர்களிடம் போலியாக மார்க் பெற்று இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். இவர்களது பேராசைக்கு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. டாக்டரும் இன்ஜினியரும் ஆக்க இவர்கள் துடிப்பது பணத்தை அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்தில்தான். அதற்காக இத்தகைய பெற்றோர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைத்தான் இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது.
இதே பணம் குவிக்கும் ஆசைதான், புனிதமான ஆசிரியர் தொழிலில் உள்ளவர்களையும் இதுபோன்ற கீழ்த்தரமான வேலையில் இறங்க வைத்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் ஊழலில் சாம்ராஜ்யம் படைத்து கோடிகோடியாக குவித்தார். உத்தமர் காந்தி விருது பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கிறார். திறமையை கணக்கீடாகக் கொண்டுதான் துறையின் உயர் பதவி ஒருவருக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த பதவியை பயன்படுத்திக்கொண்டே திருட்டுத்தனமாக ஊழலிலும் லஞ்சத்திலும் திளைப்பது பொறுத்துக்கொள்ள முடியாதது. எல்லோர் மீதும் தொடர் கண்காணிப்பு இருந்தால்தான் இதை கட்டுப்படுத்த முடியும் போலிருக்கிறது.
போலி மார்க்ஷீட் ஊழலில் கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட திருவேங்கடம் கூறியிருக்கிறார். இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க மாட்டோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. விசாரணையை இன்னும் துரிதப்படுத்தி கல்வித்துறையில் கலந்துள்ள போலிகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

Thursday, July 22, 2010

எலக்ட்ரானிக் டாய்லெட்டுக்கு போலந்தில் 2வது பரிசு

 சென்னை மாணவர்கள் கண்டு பிடித்த எலக்ட்ரானிக் டாய்லெட்டுக்கு போலந்தில் நடந்த விழாவில் 2வது பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோ சாப்ட் நிறுவனம் ‘இமேஜின் கப்  2010‘ என்ற விருது வழங்கும் விழாவை போலந்து நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தியது. விழாவில் உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 25,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில், பூந்தமல்லி , திருவள்ளூர் நெடுஞ்சாலை அரண்மனைவாயில் குப்பத்தில் உள்ள பிரதியுஷா தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் கவுசிக், கிரண் குமார், லலிதா அசோக் ஆகியோர் பங்கேற்றனர். எலக்ட்ரானிக் டாய்லெட் வடிவமைப்பு வரைவு திட்டத்தை சமர்ப்பித்தனர். இதற்கு 2வது பரிசு கிடைத்தது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
எங்களது வரைவு திட்டத்தின்படி எலக்ட்ரானிக் டாய்லெட் அமைக்க ரூ.15,000 செலவாகும். இதில், 7 லிட்டருக்கு பதிலாக 1 லிட்டர் தண்ணீர் பயன்டுத்தினால் போதும். இதனால், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. டாய்லெட்டுக்குள் போகும் கழிவு எவ்வளவு என்பதை துல்லியமாக அளவிட முடியும். கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். கிராம மக்களுக்கு இது ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தோம்.

பூவரசி அழகான பெயர்

 பூவரசி அழகான பெயர். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் ஒரே நாளில் பிரபலமாகி கிடக்கிறது. நான்கு வயது பாலகனை துடிக்கத் துடிக்க கொலை செய்து சூட்கேசில் அடைத்து சுமந்து சென்றவரை பெண்ணுலகம் சபிக்கிறது.
நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீய வழிக்கு திரும்பாது என்பார்கள். பாசம், பரிவு தெரியாமல் நரக சூழலில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் சமுதாய வில்லன்களாக தலையெடுக்கும் என்பார்கள். அந்த மாதிரியான நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்திருக்கிறது பூவரசியின் நடவடிக்கை. குடும்ப பின்னணியோ, வளர்ப்போ, படிப்போ குழந்தையை கொல்லும் அளவுக்கு அவர் மனதில் விஷம் ஊற்றெடுக்க தடையாக இல்லை என்பது அனைத்து பெற்றோரையும் கவலைப்பட வைக்கும் உண்மை.
அதே சமயம், எந்த செயலுக்கும் ஒரு எதிர்வினை இருந்தாக வேண்டும் என்கிற அறிவியல் வாதம் இந்த நிகழ்வில் உறுதிப்பட்டுள்ளது. மணமான ஆண்கள் சம்பிரதாயமாக விரிக்கும் சுய பச்சாதாப வலையில் இந்த பெண்ணும் சிக்கியுள்ளார். காமத்தை காதலென நினைத்து இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கிறார். வழக்கம்போல் ஏமாந்த பிறகு சுயநினைவு திரும்பி கோபம் கொப்பளித்திருக்கிறது. ஏமாற்றியவனை தண்டிக்க முடியாத கையாலாகத்தனம் எதிர்த்து நிற்க முடியாத குழந்தை மீது கொலைவெறியாக படர்ந்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்துக்கு மிகப் பெரிய தண்டனையை அனுபவிக்கிறார் குழந்தையின் தந்தை.
குற்றத்தின் தன்மை எத்தகையதாக இருந்தாலும் அதற்கான தண்டனையை தீர்மானிக்கும் உரிமை குற்றவாளிக்கு கிடையாது. கள்ளக் காதலின் எதிரொலி என்ற பெயரில் வரம்பு மீறிய காம லீலைகள், அதன் விளைவுகள் பற்றி செய்தி வராத நாள் கிடையாது. வஞ்சிக்கப்பட்ட பெண்கள் சமூக அவமானத்துக்கு பயந்து மவுனத்தில் புதையுண்டு போவது பெரும்பாலும் வாடிக்கை. நியாயம் கேட்டு நீதிமன்ற படியேறும் பெண்களை பார்க்க தொடங்கியிருக்கிறோம். அதில் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு சிந்தனை சிதறும்போது கற்பனையை மிஞ்சும் கொடூரம் நேர்கிறது.
நியாயப்படுத்தவே முடியாத குற்றம் என்றாலும், மாதவி தீயிட்டாலும் மதுரை எரிந்திருக்கும்தானே.

Tuesday, July 20, 2010

மீண்டும் ஒரு இரயில் விபத்து

 மேற்கு வங்க மாநிலம் சைந்தியாவில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய விபத்தில் 62 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து தேசிய பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்த மீட்புப் படையினர், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல உடல்கள் ரத்த வெள்ளத்தில் சின்னாபின்னமாக கிடந்தன.
ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து கிடந்த பெட்டிகளை கேஸ் கட்டர்கள் மூலம் வெட்டி உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டனர். இந்தக் காட்சிகளை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கதறி அழுதனர். இந்த காட்சிகள் காண்போர் மனதை உருக்குவதாய் இருந்தது.
விபத்து நடந்த போது தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர் நடப்பது என்னவென்று தெரியாமலேயே இறந்துள்ளனர். ரயில் மோதி சிதைந்த வேகத்தில் அவர்களது உடல்கள் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா ரயில் மோதியதில் வனாஞ்சல் எக்ஸ்பிரசின் கார்டு பலியானார். அவரது ரயிலுக்குப் பின் உத்தர்பங்கா ரயில் மோத வருவதைப் பார்த்து ரயில் நிலையத்தில் இருந்த சிலர் கூச்சலிட்டு கார்டை எச்சரித்தனர். எனினும், பின்னால் ரயில் வருவதைப் பார்த்த கார்டு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றார். விபத்து நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டிருந்தபோதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார். 
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில் விபத்துக்களில் 259 பேர் பலியாகியுள்ளனர். 2009 மே மாதத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் நேற்று மோதிய விபத்தில் 62 பேர் பலியாயினர். மேற்கு வங்கத்தில் 51 நாள் இடைவெளியில் நடந்துள்ள இரண்டாவது துயர சம்பவம் இது.
கடந்த மே 28ம் தேதி மிட்னாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தண்டவாளத்தை தகர்த்ததில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அந்த பெட்டிகள் மீது அதே பாதையில் எதிர் திசையில் வந்த சரக்கு ரயில் மோதியதில் 148 பேர் பலியாயினர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி, மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதியதில் 22 பேர் இறந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கடந்த நவம்பர் 14ம் தேதி மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 7 பேர் பலியாயினர். உ.பி.யில் கடந்த ஜனவரி 2ம் தேதி பனி மூட்டம் காரணமாக 2 இடங்களில் ரயில்கள் மோதிக் கொண்டன. அதே நாளில் உ.பி.யில் மற்றொரு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்துக்களில் 15 பேர் பலியாயினர்.

Monday, July 19, 2010

உதைபட்ட கால்பந்து ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

 தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மோதின. இதில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. பைனல் மேட்சில் பயன்படுத்தப்பட்ட அடிடாஸ் கால்பந்து, இங்கிலாந்தின் லாபரோ பல்கலைக்கழகத்தில் சிறப்பான தொழில்நுட்பம் மற்றும் ஏரோடைனமிக்ஸ் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த பந்தை உதைக்கும்போது அது காற்றில் செல்லும் விதத்தை யூகிக்க முடியவில்லை என்று வீரர்களும், பயிற்சியாளர்களும் விமர்சனம் செய்தனர். பைனலில் வீரர்களிடம் உதை வாங்கிய இந்த பந்து இன்டர்நெட்டில் ஏலம் விடப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே விலை தாறுமாறாக ஏறியது. முதலில் 99 பவுண்டில் ஆரம்பித்த ஏலம் முடிவில் 48 ஆயிரத்து 200 பவுண்டில் (ரூ.34 லட்சத்து 70 ஆயிரம்) முடிந்தது. இந்தப் பணம் தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நடத்தும் அறக்கட்டளைக்கும், ஆப்ரிக்காவின் ஏழ்மை மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு ஆராய்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்திய தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியா, சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உள்நாட்டில் உள்ளவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது எனக் காரணம் கூறியுள்ளன.
இந்த ஆண்டுக்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி என இங்கிலாந¢தும் 20 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் அனுமதி என கனடாவும் அறிவித்துள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் தெரிந்திருக்க வேண்டும் என்கிறது ஆஸ்திரேலியா. டாக்டர், கட்டடக் கலைஞர்கள் வரலாம் என்கிறது கனடா. ஆங்கிலத் தேர்வில் பாஸ் செய்திருக்க வேண்டும் என்கிறது இங்கிலாந்து. இப்படி பல வகையிலும் பல கட்டுப்பாடுகள்.
இங்கிலாந்தில் இந்தியர்களுக்கும் வங்கதேசத்தவர்களுக்கும் சொந்தமாக உள்ள ஓட்டல்களின் எண்ணிக்கை மட்டுமே 25 ஆயிரத்தை தாண்டும். இங்கு சமையல் செய்ய, பரிமாற உள்ளூர்க்காரர்களா வருவார்கள்? அவர்கள் சமைத்தால் சாப்பிடுவது யார்? உலகம் முழுவதும் 189 நாடுகளில் 2.5 கோடி இந்தியர்கள் தொழிலாளர்களாக, தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். உலக பொருளாதாரமே கஷ்டத்தை சந்தித்தபோதும், இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய சம்பளப்பணம் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
வயதானவர்களை தாதி போல் பார்த்துக் கொள்வது, டாய்லெட் சுத்தம் செய்வது, டிரைவர், பிளம்பர், கட்டுமானத் தொழிலாளர் என உள்நாட்டில் இருப்பவர்கள் செய்யத் தயங்கும் வேலைகளைத்தான் வெளிநாட்டினர் செய்கின்றனர். இதனால் வேலை பறிபோகிறது என்ற வாதம் பொய்யாகிறது. உண்மையான காரணம் அரசியல். கட்சிகளும் தொழிலாளர் யூனியன்களும் எழுப்பும் கோஷங்களுக்கு பயந்து அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எந்த நாட்டில் இருந்தும் எத்தனை கோடிகளில் வேண்டுமானாலும் முதலீடு வரலாம். தொழிலாளர்கள் வரக் கூடாது என்பது என்ன நியாயம்?
இந்தியாவிலும் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது பலருக்குத் தெரியாத உண்மை.

Friday, July 16, 2010

மகளிர் சுய உதவிக்குழுவினரின் சாதனை

 சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் குடிச்சு குடிச்சே ஆண்கள் அழிக்கிறாங்க... ஆனா, அவங்க குடிச்சுட்டு வீசுற பாட்டிலை சுத்தம் செய்து, பெண்கள் கைநிறைய காசு சம்பாதிக்கிறாங்க.
கோவை கூடலூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சோனா மகளிர் சுய உதவிக்குழுவினர் டாஸ்மாக் பார்களில் காலி மது பாட்டில்களை விலைக்கு வாங்கி சுத்தம் செய்து மது உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கும் பணியை துவக்கியுள்ளனர். இதற்காக பாட்டில்கள் சுத்தம் செய்யும் கூடம் நேற்று திறக்கப்பட்டது.
இதுபற்றி மகளிர் குழு கூட்டமைப்பு தலைவி சரோஜினி கூறியதாவது:
ஆண்கள் மதுவில் பணத்தை இழக்கிறார்கள். அதே மதுபாட்டிலை சுத்தம் செய்து நாங்கள் காசு சம்பாதிக்கிறோம். இந்த தொழிலுக்காக வங்கி ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளது.
குழுவில் உள்ள 10 பேரும் தலா 100 பாட்டில் வீதம் சுத்தம் செய்து தினமும் ஆயிரம் பாட்டில்களை விற்பனைக்கு அனுப்புகிறோம். முதல்நாள் இரவு பாட்டில்களை சோப்பு தண்ணீரில் ஊற வைத்து லேபிள்களை அகற்றுவோம். பின்னர் பாட்டிலின் உள்ளே பிரஷ் மூலம் சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, பெட்டிகளில் அடுக்கி மது ஆலைகளுக்கு அனுப்புகிறோம். காலி பாட்டில்களை குறைந்த விலைக்கு எடுத்து வருகிறோம். பார்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 50 பெண்களை சேர்த்து, தினமும் 60 ஆயிரம் பாட்டில்களை மது ஆலைக்கு சப்ளை செய்ய உள்ளோம்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது. கூடுதல் முதலீட்டுடன் காலி மதுபாட்டில் சுத்தம் செய்யும் ஆலையை அடுத்த ஆண்டில் துவங்குவோம். கோவை மாவட்டத்தில் உள்ள எல்லா பார்களிலும் கிடைக்கும் பாட்டில்களை விலைக்கு வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்வோம்

மெக்சிகோ வளைகுடா - எண்ணெய் கசிவு அடைப்பு

மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கசிந்து கொண்டிருந்த கச்சா எண்ணெயை, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன இன்ஜினியர்கள் போராடி அடைத்து விட்டனர். இதனால் அமெரிக்காவில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ வளைகுடா பகுதியில் அமைந்திருந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய (பி.பி) நிறுவன எண்ணெய் கிணற்றில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 11 ஊழியர்கள் பலியாயினர். உடைந்த எண்ணெய் கிணற்றின் ஆழ்குழாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதனால் அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ், மிசிசிபி, அலபாமா மற்றும் புளோரிடா கடற்கரை பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடற்கரைகளில் எண்ணெய் அலைகள் அடித்தன. இப்பகுதியில் உள்ள பெலிகன் நாரைகள் உயிருக்கு போராடின. மீனவர்களின் தொழில் முற்றிலும் பாதிப்படைந்தது. கடலில் மிதந்த எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் எண்ணெய் ஒன்றாக திரட்டப்பட்டு, நடுக்கடலிலேயே தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்ததால், எண்ணெய் ஊற்றை அடைக்கும் பணியில் முழுவீச்சில் செயல்படும்படி பிரிட்டிஷ் பெட்ரோலிய(பி.பி) நிறுவனத்தை வற்புறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடலின் மேல்மட்டத்திலிருந்து ஒரு மைல் ஆழத்துக்கு கீழே உள்ள ஊற்றை அடைக்க பி.பி.நிறுவன இன்ஜினியர்கள் போராடினர். நீர்மூழ்கி ரோபோக்களின் உதவியுடன் எண்ணெய் கிணறு குழாயின் வால்வுகளை அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுக்கமான அடைப்பானை கொண்டு எண்ணெய் கிணறு குழாயின் மூன்று வால்வுகள் வெற்றிகரமாக நேற்று இரவு அடைக்கப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.பி. நிறுவன துணை தலைவர் கென்ட் வெல்ஸ், ‘‘மெக்சிகோ வளைகுடா பகுதியில் தற்போது எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டு விட்டது. இதை 2 நாட்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது’’ என்றார். இத்தகவல் அமெரிக்க மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது

ஆடி மாதத்தின் அற்புதங்கள்

 பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வரும் சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு நிச்சயமாக ஏதாவது காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால பருவ சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரதங்களையும், வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
நாளை ஆடி மாதம் பிறக்கிறது. மற்ற மாதங்களைவிட ஆடிக்கு அதிக சிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் வரும் அமாவாசை, பூரம், கிருத்திகை, ஆடிப்பெருக்கு என பல வைபவங்களும் சிறப்பானதாகும். அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். .
ஆடி மாதம்தான் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருவதையே தட்சிணாயன புண்ணிய காலம் என்கிறோம். இந்த மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். காற்றின் வேகம் அசுரத்தனமாக இருக்கும். அதனால்தான் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வழக்கு மொழி ஏற்பட்டது. ஆடி பிறந்தாலே வீடுகளிலும் கோயில்களிலும் ஆன்மீக விழாக்கள் களைகட்டிவிடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் கோலாகல விழா, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.
இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி, அதாவது, விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல பாக்யங்களும் கிடைக்கும். கல்யாண வைபோகம் கூடிவரும். புத்திர பேறு உண்டாகும் என்பது தலைமுறை தலைமுறையாக உள்ள நம்பிக்கை.
பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்த உகந்த காலமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்து, வாயிற்படிகளுக்கு மஞ்சள் பூசி, தோரணம் மற்றும் வேப்பிலை கட்டி தர்ம புண்ணிய காரியங்களில் ஈடுபடுவர். அலகு குத்தி பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்தி வலம் வருதல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் ஊற்றுதல், பொங்கலிடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருதல் என்று மாதம் முழுவதும் பக்தி காரியங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமானது. அன்று நதிகள் மற்றும் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் அன்னதானம் செய்வதும் புண்ணிய பலன்களை சேர்க்கும். அதேபோல இந்த மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு மற்றொரு சிறப்புமிக்க விழாவாகும். நீர்நிலைகள், நதிகள் கடல் போன்ற இயற்கை செல்வங்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். ஆடி 18&ம் நாள் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குடும்பம் குடும்பமாக கூடி உணவு உண்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் மரபாகும். புதுமணத் தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி புதுக்கயிறு அணிவார்கள். கன்னிப் பெண்கள் திருமணம் நடக்க வேண்டி, நூல் போன்ற மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
அம்பாள் காமாட்சி, சிவனை நோக்கி கடுந்தவம் இருந்து ஈசனை அடைந்த மாதம் இது. திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் நடக்கும் ஆடித் தபசு விழா பிரசித்தி பெற்றது. கோமதி அம்மன் தவத்துக்கு இரங்கி புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார் சிவபெருமான். இதேபோல் ஆடிப்பூரமும் சிறப்புமிக்க நாளாகும். கோதை ஆண்டாள் பூமி பிராட்டியாக அவதாரம் செய்த தினமே திருவாடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலிலும், நாடெங்கிலும் உள்ள பெருமாள் ஆலயங்களிலும் பிரமோற்சவம் போல விழா நடக்கும்

திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........

 திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர் வேறொரு நபரை காதலிக்கிறார்களாம். இதில் ஆண், பெண் வித்தியாசம் அதிகமில்லை என்கிறது ஒரு ஆய்வு. 29 சதவீத ஆண்களும் 19 சதவீத பெண்களும் இந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றனர் என்று அதிர வைக்கிறது மேற்படி ஆய்வு.
குடும்ப கட்டமைப்பும், உறவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. கலாசாரத்துக்கு தகுந்தபடி வேறுபடுகின்றன. மேலைநாடுகளில் கணவன் , மனைவி பந்தம் என்பது பாசக்கயிறு போல் வலுவானதில்லை. எதையும்விட தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் பாரம்பரியம். எனவே ஒருவரின் உரிமையில் மற்றவர் தலையிடுவது கிடையாது. பரஸ்பர வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை ஓட்டுவதும், வேறுபாடுகள் முற்றும்போது பேசி பிரிந்து அவரவர் பாதையில் தனியாக பயணம் தொடர்வதும் அங்கே நடைமுறை. அத்தகைய சூழல் இருந்தும் மண முறிவு சதவீதம் குபீரென அதிகரித்துள்ளது. சமூக, மன இயல் நிபுணர்களை கவலைப்பட வைத்திருக்கிறது இந்த போக்கு.
நமக்கும் இது அந்நியமான விஷயமல்ல. புராண இதிகாசங்களில் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை சின்னவீடும், கள்ளக்காதலும் தொடர்ந்துவரும் நிதர்சனம். அதன் விளைவுகள் தினசரி செய்தியாக பத்திரிகைகளை நிரப்புகிறது. உளவியல் நிபுணர்கள் இதற்கு சுலபமான விளக்கம் தருகின்றனர். கிடைத்ததைவிட கிடைக்காததை  தன்னிடம் உள்ளதைவிட அடுத்தவரிடம் உள்ளதை  இருப்பதைவிட பறப்பதை விரும்புவதுதான் மனித புத்தியின் இயல்பு என்கிறார்கள். அது மரத்துக்கு மரம் தாவுவதில் முரண்பாடு கிடையாது. உறவுக்கு வெளியே துணை தேடுவதற்கு காதல் மீது பழி போடுவது அபத்தம் என அவர்கள் வர்ணிப்பது சுவாரசியம்.
கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.

இன்றைய ராசிபலன் - 16.07.2010(பொதுபலன்)

 மேஷம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
 
ரிஷபம்:
நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
மிதுனம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
கடகம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திடீர் பணவரவு உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
சிம்மம்:
மாலை 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
 
கன்னி:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வாகனம் பழுதாகும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப் பீர்கள். மாலை 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
 
துலாம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சிந்தனை திறன் பெருகும் நாள்.
 
விருச்சிகம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.
 
தனுசு:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
மகரம்:
மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
 
கும்பம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
மீனம்:
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.
                                                                    16.7.2010,
                                                          விக்ருதி வருடம்,
                                  ஆனி மாதம் 32ம் நாள், வெள்ளிக் கிழமை,
வளர்பிறை. பஞ்சமி திதி மதியம் மணி 2.17 வரை; பிறகு, சஷ்டி திதி. கீழ்நோக்குள்ள பூரம் நட்சத்திரம் காலை மணி 9.33 வரை; பிறகு மேல்நோக்குள்ள உத்திரம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். 
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்:சதயம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
புது வாகனம் வாங்க, பழைய வாகனம் விற்க, புது வேலைக்கு விண்ணப்பிக்க, சொத்து பத்திரம் பதிவு செய்ய நன்று.

Thursday, July 15, 2010

கோழியில இருந்து தான் முட்டை வந்துச்சு

 முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா’ன்னு கேட்டு போடுவாங்களே ஒரு புதிரு.. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மிக நீண்..ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘கோழிதான் முதலில் உருவானது.. அதன் பிறகே முட்டை’ என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முதலில் வந்தது முட்டையா அல்லது கோழியா என்ற குழப்பம் உலக அளவில் இன்று வரை அனைவருக்கும் உள்ளது. இந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டனர் கோலின்ஃப்ரீமென் தலைமையிலான, ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இக்குழுவினர் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கோழிதான் முதலில் வந்தது என்ற உண்மையை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இவர்களின் ஆராய்ச்சி உண்மை கணினி மூலம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹெக்டார் என்ற மிக உயர்தொழில் நுட்ப கணினி இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முட்டை ஓட்டில் உள்ள ஓவோஸ்லீடின் என்ற மிகக் கடினத் தன்மையுடைய புரதச்சத்து கொண்ட மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது தனது வேதியியல் பண்பில் இருந்து மாறவில்லை. மாறாக, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே முட்டை போடும் நிலையில் உள்ள கோழியின் உடலில் இருக்கும் சத்துக்கள் மூலம்தான் முட்டை ஓட்டுக்குத் தேவையான புரதப் பொருள் உருவாவது கண்டறியப்பட்டது. முட்டை ஓட்டில் உள்ள புரதம், கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு தன்னுள் இருக்கும் திரவங்களில் உள்ள கால்சியம் கார்போனேட்டை கருவில் உள்ள கோழிக்குஞ்சின் உடலில் கால்சைட் அதாவது சுண்ணாம்புப் படிமங்களாக மாற்றுவதும் தெரியவந்தது.
முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
இனி, சிறுவர்களுக்கு புதிர் போடுபவர்கள் விடையையும் சொல்லுங்கள். ‘கோழியில இருந்துதான்டா முட்டை வந்துச்சு’னு!

இந்தியர்களுக்குஎதிரான இனவெறி

 இந்தியர்களுக்குஎதிரான இனவெறி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தியர்களை முட்டாள்கள் என்றும் பொட்டுத் தலையர்கள் என்றும் வர்ணித்த டைம் பத்திரிகை சமீபத்தில்தான் வருத்தம் தெரிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில், கடையில் பகுதி நேர காசாளராக பணிபுரிந்த இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவை பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய மாணவர்கள் அங்கு தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஆட்களை விட்டு வாகனங்களை அடித்து நொறுக்குவதை வாடிக்கையாக்கி உள்ளனர். அடிலெய்ட் நகரில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. பைக்குகளில் கும்பலாக வந்த ஆஸ்திரேலிய இளைஞர்கள் இந்தியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கான இடத்தை இந்திய இளைஞர்கள் பறித்துக்கொள்வதாக ஆஸ்திரேலிய இளைய சமூகம் எண்ணுகிறது. அதன் விளைவே இத் தாக்குதல் என்கின்றனர். இதனால் இனரீதியாக பல வகைகளிலும் இந்திய மாணவர்கள் தொல்லைக்கு உள்ளாகின்றனர். வீட்டு வாசலில் உள்ள கடிதப் பெட்டியில் இருந்து கடிதங்களை திருடுவது, தங்கியிருக்கும் வீட்டுச் சுவர்களில் ஆபாச படம் வரைவது, இனவெறி வாசகத்தை எழுதுவது என ஆஸ்திரேலிய இளைஞர்கள் இவர்களை மனோரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் என பல நாடுகளிலும் இருந்து வந்தவர்கள். இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம். ஆஸ்திரேலியர்களின் வெறுப்புக்கு வடஇந்திய மாணவர்களின் செயலும் காரணம் என சொல்லப்படுகிறது. பொது இடங்கள், ரயில், மதுவிடுதி போன்ற இடங்களில் உரக்க பேசுவது, சத்தமாக பாட்டுக் கேட்பது, ஆஸ்திரேலியர்களிடமே உங்கள் கலாசாரம் மோசமானது என விவாதிப்பது போன்ற செயல்களால் வெறுப்புக்கு ஆளாகின்றனர். மிகக் குறைந்த கூலியில் பகுதி நேர வேலைக்கும் போகத் தயாராகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த பின்னணிகள் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைகிறது.
தொடர் தாக்குதல் சம்பவம் அதிகரித்தபோதும் ஆஸ்திரேலிய அரசு அதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய மாணவர்கள் பாதுகாப்பான புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்வது நல்லது என யோசனை சொன்னது. வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கணிசமான அளவு அன்னிய செலாவணியும் அறிவுசார் மனிதவளமும் கிடைக்கிறது. எனவே இந்திய மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆஸ்திரேலிய அரசின் கடமை.

இன்றைய ராசிபலன் - 15.07.2010(பொதுபலன்)

மேஷம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த&பந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
 
ரிஷபம்:
மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
மிதுனம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கடகம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
சிம்மம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
 
கன்னி:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
துலாம்:
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்
 
விருச்சிகம்:
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
 
தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தடைபட்ட வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நிம்மதியான நாள்.
 
மகரம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
கும்பம்:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
மீனம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இந்த நாள் இனிய நாள் - 15.07.2010

                                                                 15.7.2010
                                                        விக்ருதி வருடம்,
                                  ஆனி மாதம் 31ம் நாள், வியாழக்கிழமை,
வளர்பிறை. சதுர்த்தி திதி மாலை மணி 4.40 வரை; பிறகு, பஞ்சமி திதி. அமிர்தயோகமுடைய மகம் நட்சத்திரம் காலை மணி 11.10 வரை; பிறகு சித்தயோகமுடைய பூரம் நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள். 
ராகுகாலம் :1.30 to 3.00
எமகண்டம் : 6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும் 
சந்திராஷ்டமம்: அவிட்டம் , சதயம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும் ,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

Wednesday, July 14, 2010

ஆக்டோபஸ் கொடூர கொலை

 தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்இறுதியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா உதை வாங்கும் என்று ஆக்டோபஸ் கணித்தது அப்படியே நடந்ததால் அந்நாட்டு ரசிகர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில், அர்ஜென்டினா டிவி சேனல் ஒன்றில் ‘எ பர்பெக்ட் வேர்ல்டு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ராபர்டோ என்பவர், நேரடி ஒளிபரப்பில் ஒரு ஆக்டோபஸை வெறித்தனமாக கொலை செய்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார். ‘நம் அணியை தோற்கடித்த ஆக்டோபஸ் பால் அல்ல இது. ஆனாலும், அதுவாகவே இதை நினைத்துக் கொள்ளுங்கள். இதை கொடூரமாக கொல்லப் போகிறேன். இப்போது கழுத்தை திருகுகிறேன். தலையை வெட்டி துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு அரைக்கிறேன்’ என்று நேர்முக வர்ணனை கொடுத்தபடியே அந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். அர்ஜென்டினா ரசிகர்கள் ஏராளமானோர் இதை கைதட்டி ரசித்தனர்.
இந்த கொடூர கொலைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கணிப்பு என்பது சுவாரசியத்துக்காக நடத்தப்பட்டது. அதற்காக அப்பாவி ஜீவன் ஆக்டோபஸ் மீது ஆத்திரத்தை காட்டுவதா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். டிவி சேனல் மீது வழக்கு தொடர்வது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  
ஆச்சரிய ஆக்டோபஸ்:ஆக்டோபஸ் ஆச்சரியமான உயிரினம். கதைகள், திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதுபோல ராட்சத ஆக்டோபஸ்கள் இருப்பதாக தெரியவில்லை. நன்கு வளர்ந்த ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். அதிகபட்சமாக 71 கிலோ எடை கொண்ட ஆக்டோபஸ் ஒருமுறை பிடிபட்டுள்ளது. ஆக்டோபஸ் உடலை பாதியாக வெட்டினால், 2 பக்கமும் ஒன்றுபோல இருக்கும். ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலி. எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளும். நம்மை போலவே குறுகியகால, நீண்டகால நினைவாற்றல் கொண்டது. இரண்டு வெவ்வேறு வடிவங்கள், டிசைன்களை வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்டவை. ஒரே நிறம் அல்லது டிசைனை காட்டிக் காட்டி பழக்கப்படுத்தினால் அதை மீண்டும் தேடி கண்டுபிடித்துவிடும். கால்பந்து போட்டியின்போது அணிகளின் கொடிகளை கண்டுபிடித்ததுகூட இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது. ஆக்டோபஸுக்கு எலும்புக் கூடு கிடையாது. எல்லா ஆக்டோபஸ்களுமே விஷத் தன்மை கொண்டவை என்றாலும், நீல நிற வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷமுடையது. 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழும். செக்ஸ் உறவு கொண்ட ஆண் ஆக்டோபஸ் அடுத்த சில மாதங்களில் இறந்துவிடும். முட்டைகள் பொறித்த கொஞ்ச நாளில் பெண் ஆக்டோபஸும் அவுட். ஆக்டோபஸ் 3 இதயம் கொண்டது. ஹீமோசயானின் என்ற ரசாயனம் இருப்பதால் ஆக்டோபஸ் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

இன்றைய ராசிபலன் - 14.07.2010(பொதுபலன்)



மேஷம்:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.
 
ரிஷபம்:
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பணம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியா­பாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோ­சனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.
 
மிதுனம்:
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அழகு, இளமை கூடும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.
 
கடகம்:
மதியம் 1 மணிவரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் தடைபட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
 
சிம்மம்:
பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். எதிர்பாராத பயணம் உண்டு. அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
 
கன்னி:
பெற்றோர் ஒத்துழைப்பார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நட்பால் ஆதாயமடையும் நாள்.
 
துலாம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
விருச்சிகம்:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
தனுசு:
மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்­டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
கும்பம்:
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
 
மீனம்:
புதியமுயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த&பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமி க்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

இந்த நாள் இனிய நாள் - 14.07.2010





14.7.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 30ம் நாள், புதன்கிழமை,
வளர்பிறை. திருதியை திதி இரவு மணி 7.07 வரை; பிறகு, சதுர்த்தி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மதியம் மணி 12.48 வரை; பிறகு மகம் நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவன் நிறைந்த சித்தயோகமுடைய கீழ்நோக்கு நாள்.
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்
சந்திராஷ்டமம் : திருவோணம் , அவிட்டம்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to 3.00, மாலை 4.00 to 5.00, இரவு 7.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
மரக்கன்றுகள் நட, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று.


Tuesday, July 13, 2010

தீவிரவாதம்

 அப்பாவிமக்களின் உயிர் தீவிரவாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் எதிர்க்கும் அரசுகளை ஒன்றும் செய்யமுடியாது என்பதால், எளிய இலக்குகளான மக்களை குறிவைக்கின்றனர். உலகம் முழுவதும் இதே கதைதான். சமீபத்தில் உகாண்டாவில் நடந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் எந்த அரசியலையுமே அறியாத கால்பந்து ரசிகர்கள். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள எத்தியோப்பிய நாட்டவருக்கு சொந்தமான உணவு விடுதி, ரக்பி விளையாட்டு திடல் ஆகிய இரு இடங்களில் உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை காண பிரமாண்டமான டி.வி.க்கள் வைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டு பயணிகள் உள்பட பலர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டத்தை ரசித்தபடி இருந்தனர். 10.30 மணியளவில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சிக்கி 64 பேர் இறந்தனர். 65 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்கர் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது.
உலகின் படுபயங்கர தீவிரவாத இயக்கமான பின்லேடனின் அல்கய்தா ஆதரவுடன் சோமாலியாவில் செயல்படும் ஷெபப் பயங்கரவாதிகள் இக் கொடூரத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உள்நாட்டு போரில் நிலைகுலைந்து கிடக்கும் சோமாலியாவில் அமைதி நடவடிக்கைகளில் ஆப்ரிக்க யூனியனை சேர்ந்த படைவீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். உகாண்டா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியதுதான் இந்த யூனியன். சோமாலிய தலைநகர் மொகாதிசு நகரில் சமீபத்தில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதற்கு அமைதிப்படையினர்தான் காரணம் என்று ஷெபப் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். அமைதிப்படைக்கு எதிராக போராட சோமாலிய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். படைவீரர்களை வாபஸ் பெறும்படி உகாண்டாவுக்கு இவர்கள் ஏற்கனவே மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது உகாண்டாவில் குண்டுவெடிப்பு நாசவேலையை செய்தது ஷெபப் கும்பலாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் சற்று பொருளாதார செழிப்புள்ளது உகாண்டா. பொருளாதார ரீதியாக ஒரு நாடு வளர்ச்சி பெற்று வருவது தீவிரவாதிகளின் கொள்ளிக் கண்ணுக்கு ஆகாதது. குண்டுவெடிப்பு, நாசவேலைகள் மூலம் அதை நிர்மூலமாக்குவார்கள். அதன் ஒரு பகுதியாகவும் இந்த கொடூர செயல் செய்யப்பட்டிருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் பின்னிப்பிணைந்துள்ள இத்தகைய தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க, வேற்றுமைகள் எல்லாவற்றையும் மறந்து உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

இந்த நாள் இனிய நாள் - 13.07.2010

ஜுலை - 2010 - July
செவ்வாய் நல்ல நேரம் 8-9, 12-1, 7-8
13 எமகண்டம்: மாலை மணி 3.00-4.30
Tuesday, July 13, 2010 இராகு காலம்: காலை மணி 9.00-10.30
சந்திராஷ்டமம் : உத்திராடம் ,திருவோணம்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்
இன்றைய ராசிபலன்
மேஷம் : பொறுப்பு ரிஷபம் : காரியம்
மிதுனம் : கோபம் கடகம் : எண்ணம்
சிம்மம் : செலவு கன்னி : கனவு
துலாம் : ஆசி விருச்சிகம் : அமைதி
தனுசு : வதந்தி மகரம் : தைரியம்
கும்பம் : சாதனை மீனம் : நினைவு


* * விக்ருதி வருடம் ஆனி மாதம் 28ம் தேதி, 12-07-2010 திங்கள் கிழமை, இன்று இரவு 11.43 வரை
* பிரதமை திதி, அதன் பின் துவிதியை திதி. இன்று மாலை 3.45 வரை புனர்பூசம் நட்சத்திரம், அதன் பின் பூசம் நட்சத்திரம். இன்று மாலை 3.45 வரை அமிர்தயோகம், அதன் பின் சித்தயோகம்.
* குளிகை: பகல் 1.30 முதல் 3.00 வரை
* சூலம்: கிழக்கு * பரிகாரம்: தயிர்
* பொது: சமநோக்கு நாள். சங்கரநயினார் கோவில் சங்கரலிங்க பெருமாள் நாகாபரண காட்சி. ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். திருவையாறு சிவபெருமாள் ரிஷப சேவை.

இன்றைய ராசிபலன் - 13.07.2010(பொதுபலன்)


 மேஷம்     

மேஷம்: பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 


ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். வெற்றி பெறும் நாள்.


மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர் பகை நீங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


கன்னி

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 


துலாம்

துலாம்: தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்பு, மரியாதைக் கூடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக உங்களிடம் வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பிரார்த்தனைகளை
குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.
Related Posts with Thumbnails
 

Blogger