Wednesday, July 28, 2010

பாகிஸ்தானில் விமான விபத்து - 100 பேர் பலி

 பாகிஸ்தானின் உள்நாட்டு விமானம் ஒன்று இஸ்லாமாபாத் அருகே இன்று காலை மலையில் மோதி நொறுங்கியது. 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்ப்ளு ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று, இன்று காலை 146 பயணிகளுடன் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டது. விமானத்தில் இரண்டு பைலட்கள் உள்பட 6 ஊழியர்கள் இருந்தனர். இஸ்லாமாபாத்தை ஒட்டிய மர்கல்லா மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் விமானத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்ட விமானம் வழி தெரியாமல் மலையில் மோதி நொறுங்கியது.
தகவல் அறிந்ததும் மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. விமானம் நொறுங்கிய பகுதியிலிருந்து வான் அளவுக்கு கரும் புகை எழுந்தது. மழை மற்றும் புகை மூட்டம் காரணமாக மீட்பு படையினர் விபத்து பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 45 பேர் மீட்கப்பட்டனர். 100 க்கும் அதிகமானோர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 20 உடல்கள் மீட்கப்பட்டன.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger