Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

 இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. புகை பிடிப்பவரைவிட அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு அதிகம். புகை பிடிப்பதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பொது இடங்கள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
“புகையிலைக்கு எதிரான சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்தினால், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது குறையும்”.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் புகை மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், சுயவுதவிக் குழுவினர், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்றி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் பல ஊராட்சிகள் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன. புகைபிடிப்பவர்கள் தாங்களாகவே மனம் மாறி புகையிலை பிடிப்பதை விட வேண்டும். அப்போதுதான் உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
புகை பிடிப்பதால் மற்றும் புகையை அடுத்தவர் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, நிணநீர் திசுக்கட்டி, சைனஸ், வாய் புற்றுநோய், நெஞ்சக நோய்கள், மார்பு புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள், ரத்த புற்று நோய், இனப்பெருக்க பாதிப்புகள், தமணி தடிப்பு இறுக்கம்.
ஓட்டல், விடுதிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், நூலகங்கள், விளையாட்டு அரங்குகள், வியாபார நிறுவனங்கள், கடைகள், மனமகிழ் மன்றங்கள், தேநீர் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நீதிமன்ற வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் இங்கெல்லாம்
புகை பிடிக்க முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.புகை பழக்கத்தால் ஏற்படும் தீய
விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.


பெண்கள் பகுதி

 மாதவிலக்கு நின்ற பெண்கள் எடை குறைந்து ஒல்லியாக சோயா பீன்ஸ் உதவும்.
மாதவிலக்கு நின்ற பெண்கள் பல்வேறு ஹார்மோன் கோளாறுகளால் குண்டாகி விடுகின்றனர். அவர்களது உடலில் கொலஸ்டிரால் அதிகரித்து மனஅழுத்தம், இதய நோய் பாதிப்புகளுக்கு வழி ஏற்படுத்துகிறது. 40ஐ கடந்த பெண்களின் உடலில் சோயா பீன்ஸ் செய்யும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்தது. மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல்நலனுக்கு சோயா பீன்ஸ் பல அற்புதங்களைச் செய்வது அதில் தெரிய வந்துள்ளது. 40ஐ தாண்டிய பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விடுவதே கொலஸ்டிரால் அதிகரிக்கக் காரணமாகிறது.
சோயா பீன்சில் ஈஸ்ட்ரோஜனுக்கு இணையான பொருட்கள் அதிகம் இருப்பதால், அது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவை ஈடுகட்டி விடும். அதனால், கொலஸ்டிரால் குறைந்து உடல் எடை சரியும். 
40ஐ கடந்த பெண்கள் சோயா உணவுகளை அதிகம் சேர்ப்பதால் எடை குறைவதுடன், அதிக கொலஸ்டிரால் காரணமாக ஏற்படக்கூடிய மனஅழுத்தம், இதய நோய்களையும் தவிர்க்க முடியும்.
“சோயா உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண்களிடம் எடுக்கப்பட்ட ஸ்கேன் சோதனையில், அவர்களது அடிவயிற்றுப் பகுதியில் சேர்ந்திருந்த கொழுப்பின் அளவு 7.5% குறைந்திருந்தது. சோயா உணவைச் சாப்பிடாத பெண்களிடம் இது 9% அதிகமாக இருந்தது”  
 
 

பங்கு சந்தை பற்றிய தகவல்கள்

 
visit my blog for trading live tips:www.tradersfirst.blogspot.com
நாட்டின் பொருளாதார வளர்ச்சி:
கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடியின் தொடர்ச்சியாக நமது பொருளாதார வளர்ச்சி வேகம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதி ஆண்டில் அது முற்றிலுமாக மீண்டு விட்டது. சர்வதேச நெருக்கடியை நமது பொருளாதாரம் சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, அடுத்த நிதி ஆண்டில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரம் இன்று வெளியாகிறது. 2010&11ம் ஆண்டில் அது 8.5 சதவீதமாக இருக்கும் . 2011&12ம் ஆண்டில் அது 9 சதவீதமாக உயரும். 2009&10ம் ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இறுதி முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
மருத்துவத் துறையில் கட்டமைப்பு வசதிகள், மனித வளம் இன்னும் பற்றாக்குறையாகவே நீடிக்கிறது. எனவே, மருத்துவத் துறையில் அரசு அதிக கவனம் செலுத்தும.


                                                1.35 லட்சம் கோடி நஷ்டம்:
பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக முன்னணி 10ல் 9 நிறுவன முதலீட்டாளர்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் லாபத்தை வழங்கின.
கிரீஸ் நிதி நெருக்கடி, டாலர் மதிப்பு சர்வதேச சரிவு ஆகிய காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த ஒரு மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளும் சராசரியாக 4 சதவீதம் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் 28 முதல் மே 28 வரை ஒரு மாதத்தில் 640 புள்ளிகள் சரிந்தது. இதனால் சொத்து மதிப்பு அடிப்படையில் முன்னணி 10ல் 9 நிறுவன பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 880 கோடி சரிந்தது. இதில் அதிகபட்சமாக ஐடிசி நிறுவன சொத்து மதிப்பு ரூ.91,139 கோடி குறைந்தது.
எனினும், இரண்டாவது இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் சராசரியாக ரூ.18,009 கோடி உயர்ந்தன. ஏப்ரல் 28ல் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்த அதன் சொத்து மதிப்பு மே 28ல் ரூ.2.41 லட்சம் கோடியானது. அதாவது, கடந்த வெள்ளியன்று 9 சதவீத லாபத்துடன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.1,131 ஆக இருந்தது.
டாப் 10ல் முதல் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.269.71 கோடி சரிந்து ரூ.3.38 லட்சம் கோடியானது. என்டிபிசி சொத்து மதிப்பு ரூ.2,226 கோடி சரிந்து ரூ.1.65 லட்சம் கோடியாகவும், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் சொத்து மதிப்பு 1,799 கோடி சரிந்து ரூ.1.5 லட்சம் கோடியாகவும் இருந்தது.
ரூ.1.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் டிசிஎஸ் 5ம் இடத்திலும், எம்எம்டிசி ரூ.1.43 லட்சம் கோடி மதிப்புடன் 6ம் இடத்திலும் உள்ளன. 
                                     ஒரு நாளில் ரூ.1 லட்சம்:
ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டில் பணம் எடுக்கும் உச்சவரம்பை எச்டிஎப்சி வங்கி உயர்த்தியுள்ளது. ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 மட்டுமே. இதை மற்ற வங்கிகளும் விரைவில் அறிவிக்க உள்ளன.
முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சியின் இந்த புதிய வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, மற்ற தனியார் மற்றும் அரசு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ஓரிரு தினங்களில் உயர்த்தி அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி மற்றொரு தனியார் வங்கியின் உயரதிகாரி நேற்று கூறுகையில், “வங்கித் துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது இயல்பு” என்றார்.
எச்டிஎப்சி வங்கி அறிவிப்பின்படி இம்பீரியா கோல்டு டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள் ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 ஆக இருந்தது. அதேபோல, ஒரு நாளில் ஷாப்பிங் செய்வதற்கான உச்சவரம்பும் ரூ.1.25 லட்சமாக உயர்கிறது. ஈசி ஷாப் ரெகுலர் இன்டர்நேஷனல்/மேஸ்ட்ரோ/என்ஆர்ஓ டெபிட் கார்டு ஆகியவற்றின் உச்சவரம்பு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆகவும் உயர்கிறது. குழந்தைகள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் கார்டில் ஒரு நாளில் ரூ.1,500 ஆக இருந்த உச்சவரம்பு ரூ.2,500 ஆகிறது. பெண்களின் டெபிட் கார்டு உச்சவரம்பு ரூ.20,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது. அவர்களது தினசரி ஷாப்பிங் உச்சவரம்பு ரூ.40,000 ஆகிறது. இது ரூ.10,000 அதிகம்.
இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி எஸ்எம்எஸ், போன், இமெயில் மூலம் தெரிவித்து வருகிறது. 
                                                                       தங்கம்:
இந்த மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்ததால் இறக்குமதி 39 சதவீதம் சரிந்துள்ளது. எனினும் பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் விற்பனை இனி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் இந்த மாதம் உலக பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சவரன் ரூ.14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் விற்பனை குறைந்து, இறக்குமதியும் 39 சதவீதம் குறைந்துள்ளது.
 “இந்த மாதத்தில் 18 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது 28.6 டன்னாக இருந்தது. கடுமையான விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலோ அல்லது இப்போது உள்ள நிலையில் இருந்து பெரிய அளவில் இறங்காமல் போனாலோ இந்த ஆண்டில் இறக்குமதி 50 சதவீதம் வரை குறையும்”.
தங்கம் விலை கடுமையாக உயர்ந்ததால் இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளிலும் நகை விற்பனை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு விலை

 மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் நிவாரண நிதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் நாசவேலையால் உயிர் இழந்த ரயில் பயணிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மனித உயிருக்கு விலை மதிப்பிட முடியாது. என்றாலும், அகாலம் மரணம் அடைந்தவர் யார், என்ன பணி, ஈட்டிக் கொண்டிருந்த வருமானம் எவ்வளவு, சம்பாதிக்கக்கூடிய காலத்தில் இன்னும் எவ்வளவு ஈட்டியிருப்பார் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு முடிவு செய்வது பெரும்பாலான நாடுகளில் நடைமுறையாக இருந்து வருகிறது. எனினும், இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொருத்தே இந்த ஏற்பாட்டின் உண்மையான பலன் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும்.
இந்தியாவில் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்தா வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை பணம் பட்டுவாடா செய்வதில் காட்டுவதில்லை. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை கோர்ட் கோர்ட்டாக அலைக்கழித்து, நீதிபதியால் குட்டு வாங்கிய பிறகே காப்பீட்டு தொகையை வழங்குகின்றன. உயிரையோ பொருளையோ இன்சூர் செய்ய மக்கள் தயங்குவதற்கு இது முக்கிய காரணம்.
விமான பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை சேர்ந்தது. அந்த நிறுவனம் விமானத்துக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் கணிசமான அளவில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திவிடுவதால் அசம்பாவிதம் நேர்ந்த உடனே முதல் கட்டமாக ஒரு தொகையும் விசாரணை முடிவதற்குள் மீதி தொகையும் வாரிசுகளுக்கு கிடைத்துவிடுகிறது. ரயில், பஸ் பயணிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. போக்குவரத்து நிறுவனம், அரசு மனமிறங்கி கொடுப்பதுதான் கிடைக்கிறது.
உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது என்றாலும், வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி நின்றுவிடாது என தெரியும்போது, இழப்பால் வருந்தும் குடும்பம் நிலைகுலையாமல் தன்னை தேற்றிக் கொள்ள வழி பிறக்கும். இந்த அடிப்படையில் உயிர்களுக்கு இழப்பீடு தருவதில் பேதங்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினபலன் -31.05.2010

 மேஷம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பணவரவு திருப்தி தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
 
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடிய வில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர் கள். போராட்டமான நாள்.
 
மிதுனம்:
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
கடகம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 
சிம்மம்:
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
 
கன்னி:
எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர் கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச் சனை தீரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
துலாம்:
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
 
விருச்சிகம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
 
தனுசு:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கணுக்கால் வலிக்கும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.
 
கும்பம்:
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்திப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சொந்தபந்தங்கள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். இனிமையான நாள்.
 
மீனம்:
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வி.ஐ.பிகள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

இந்தநாள் இனியநாள் - 31.05.2010

 31.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 17ம் நாள், திங்கட் கிழமை,
தேய்பிறை. திருதியை திதி காலை மணி 7.01 வரை; பிறகு சதுர்த்தி திதி. சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பூராடம் நட்சத்திரம் மாலை மணி 5.12 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 TO 7.00, 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை.
ராகுகாலம் :7.30 to 9.00
எமகண்டம் :10.30 to 12.௦௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: மிருகசிருஷம்,திருவாதிரை நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

Sunday, May 30, 2010

வணிக செய்திகள்

 ரிசர்வ் வங்கி அட்வைஸ்:
வெளிநாட்டு, உள்நாட்டு பண மோசடி பேர்வழிகளிடம் முதலீட்டாளர்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, வங்கிகளையும் அது கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இ&மெயில் முகவரிகள், போன் எண்களைத் தெரிந்து கொள்ளும் பண மோசடி நிறுவனங்கள், மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தாங்களாக இ&மெயில் அனுப்புகின்றனர். எஸ்எம்எஸ், கடிதங்கள் வழியாகவும் இதுபோன்ற கவர்ச்சி வசனங்களை அனுப்புகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாயைப் பெற பரிவர்த்தனைக் கட்டணம், பிராசசிங் கட்டணம், வரிகள், பணமாற்று கட்டணம் என்ற பல பெயர்களில் பரிசுப் பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டுமாறு மோசடி நிறுவனங்கள், தனிநபர்கள் தெரிவிக்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான பணத்தை பலர் இழந்துள்ளனர்.
மோசடி பேர்வழிகளில் பலர் ரிசர்வ் வங்கி கடிதப் பக்கங்களையும் (லெட்டர்ஹெட்), உயரதிகாரிகள் கையெழுத்தை போலியாகவும் இ&மெயிலில் அனுப்பி மக்களை நம்ப வைக்கின்றனர். ஏமாறுவோரிடம் குறிப்பிட்ட தொகையை வங்கிக் கிளையில் செலுத்தச் செய்கின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த மோசடி நிறுவனங்கள், தனிநபர் பெயரில் தொடங்கப்படும் இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் அப்பாவிகள் டெபாசிட் செய்யும் தொகையை உடனுக்குடன் எடுத்து, ஏமாற்றி விடுகின்றனர். இதுபோல ஏமாற்றும் நோக்கத்துடன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவது தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை பற்றி கூடுதல் கவனம் செலுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் நம்நாட்டினர் யாரேனும் மக்களிடம் ஏமாற்றி வசூலித்த பணத்தை டெபாசிட் செய்வது அன்னியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999 மற்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற நபர்களிடம் வங்கிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடனுக்குடன் புகார் அளித்து மக்கள் ஏமாறுவதைத் தடுக்க வேண்டும். 
 வங்கிகள் கணக்கில் 1   லட்சம் கோடி குறையும்:
மூன்றாம் தலைமுறை போன் சேவைக்கான ஏலத் தொகை, அட்வான்ஸ் வரி ஆகியவற்றுக்காக நிறுவனங்கள் அதிக பணம் எடுப்பதால் வங்கிகளின் இருப்பு திடீரென ரூ.1 லட்சம் கோடி குறைகிறது. அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி உதவ முன் வந்துள்ளது.
நாட்டின் முன்னணி போன் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப போன் சேவைக்கான ஏலம் எடுத்துள்ளன. அதன் மொத்த தொகை ரூ.67,000 கோடி. ஏலத் தொகையை நாளை மறுநாளுக்குள் (31ம் தேதி) செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, கம்பெனிகளின் அட்வான்ஸ் வரி செலுத்தவும் அதுவே கடைசி நாள்.
இதனால், இந்த வாரத்தில் பெரிய கம்பெனிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட உள்ளது. இதை சமாளிக்க வங்கிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. 
போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடியாக உயரும் :
ஏப்ரல் மாதத்தில் போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடி உயர்ந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச் இறுதியில் 62.13 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 1.67 கோடி உயர்ந்து, 63.8 கோடியானது. இதன் வளர்ச்சி வீதம் 2.7 சதவீதம். நாட்டின் மக்கள்தொகையில் 54.1 சதவீதத்தினரிடம் போன் உள்ளது. இதேபோல, ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ உட்பட செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச்சில் 58 கோடியில் இருந்து, ஏப்ரலில் 60 கோடியாக உயர்ந்தது.

புதிய அத்தியாயம்

 எரிவதை உருவினால் கொதிப்பது அடங்கும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். எந்த பிரச்னைக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம் அது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய உயர்நிலை கல்வி வாரியத்துக்கு இது தெரிந்திருக்கிறது. வெள்ளியன்று வெளியான அதன் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்திய கல்வித்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் பதற்றம் தணிந்துள்ளது. 91 முதல் 100 மார்க் வரை பெற்றிருந்தால் ஏ1 என்ற கிரேடு. 81 முதல் 90க்கு ஏ2. இதே பாணியில் பி1, பி2, சி1, சி2 என இறங்கி 33 முதல் 40 மார்க் வாங்கியவர்களுக்கு 1397904493 கிரேடு கிடைக்கிறது. ஏ1 ன் மதிப்பு 10 புள்ளிகள், 1397904493 க்கு 4. மொத்த பாடங்கள் 5. ஒவ்வொரு பாடத்துக்கும் கிடைத்த புள்ளிகளை கூட்டி ஐந்தால் வகுத்தால் சராசரி கிரேடு பாயின்ட் தெரியும். அதை ஒன்பதரையால் பெருக்கினால் வரும் சதவீதத்தின் அடிப்படையில், 11ம் வகுப்புக்கான அட்மிஷன் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.
ஒரு மார்க்கில் ரேங்க் இழப்பு என்ற டென்ஷன் இனி இல்லை. தன்னைவிட குறைவாக அல்லது அதிகமாக மார்க் வாங்கியவர்கள் யார் என்று பார்த்து அற்ப மகிழ்ச்சி அடையவோ பொறாமைப்படவோ யாருக்கும் வாய்ப்பில்லை. ‘100 வாங்கிய நானும் வெறும் 91 பெற்ற அவளும் ஒரே கிரேடு என்பது அநியாயம்’ என்று சிலர் குமுறலாம். ஏழு தொகுப்புகளில் எல்லோரும் அடங்கிவிடுவதால் பிரிவினை தோற்றம் மட்டுமல்ல, சிந்தனையும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். 33க்கு கீழே வாங்குபவர்களை இ1, இ2 என வகைப்படுத்துகின்றனர். ஃபெயிலானவர்கள் என சொல்லாமல், ‘அதிக மார்க் வாங்க திரும்பவும் தேர்வு எழுதும் தகுதி படைத்தவர்கள்’ என்று அவர்களை குறிப்பிடுவது கைதட்டி பாராட்ட தூண்டும் நாகரிகமான நடவடிக்கை. அப்படி 5 வாய்ப்பு தரப்படுமாம்.
போட்டி நிறைந்த உலகம் என்று சாக்கு சொல்லி குழந்தைகளை எந்திரங்களாக உருமாற்றி வருகிறோம். இந்த கொடுமைக்கு முடிவு வராதா என்று நல்லவர்கள் ஏங்கினர். அதை தீர்க்கும் முதல் நடவடிக்கையாக வந்திருக்கிறது மத்திய கல்வித் துறையின் சீர்திருத்தம். இனிமேல் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பும் கவனத்துக்குரியது. மாநிலங்கள் பின்பற்ற முன்வந்தால் நாடு சிறக்கும்.

தினபலன் -30.05.2010

 
 மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் வியாபாரத்தில் லாபம் வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
ரிஷபம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரிடமும் உணர்ச்சிவசப் பட்டு பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 
மிதுனம்:
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் கள் தேடி வருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
கடகம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
சிம்மம்:
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
கன்னி:
உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.
 
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாள்.
 
தனுசு:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகள் தடைபட்டு முடியும். கணவன், மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். தாழ்வு மனப்பான்மை வந்து விலகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
 
மகரம்:
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
கும்பம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நன்மை கிட்டும் நாள்.
 
மீனம்:
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக் கும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

இந்த நாள் இனிய நாள் 30.05.2010

 
30.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 16ம் நாள், ஞாயிற்று கிழமை,
தேய்பிறை. திருதியை திதி நாள் முழுவதும். அமிர்தயோகமுள்ள மூலம் நட்சத்திரம் மாலை மணி 3.24 வரை; பிறகு, சித்தயோகமுள்ள பூராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 10.00, பிற்பகல் 11.00 to 12.00, மதியம் 2.00 to 4.00, மாலை 6.00 to 7.00,
இரவு 9.00 to 11.00 மணி வரை. 
ராகுகாலம்:4.30 to 6.00
எமகண்டம்:12.00 to 1.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ரோகினி,மிருகசீருஷம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
செங்கல் சூளை பிரிக்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று. 
 
 

Saturday, May 29, 2010

பங்குச் சந்தை பற்றிய தகவல்கள்

பங்கு சந்தைகள் பற்றிய தகவல்களுக்கு :www.tradersfirst.blogspot.com
 முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தொலைத்தொடர்புத் துறையில் கால் பதிக்க திட்டம்:

அம்பானி சகோதரர்களுக்கு இடையே, கடந்த 2006ம் ஆண்டு பாகப் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஒருவர் தொழில் செய்யும் துறையில் அடுத்தவர் நுழைவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, இயற்கை எரிவாயு சப்ளை தொடர்பாக இருவருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
அதில், முகேஷுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. எனினும், குடும்ப ஒப்பந்தம் பற்றி 6 வாரத்துக்குள் பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான துவக்கமாக, ஒருவர் ஈடுபட்டுள்ள துறையில் மற்றொருவர் ஈடுபடுவதைத் தடுக்கும் குடும்ப ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த ஞாயிறன்று இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில், போன் நிறுவனமான ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலை முகேஷ் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் இறங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2008ம் ஆண்டில் உரிமம் பெற்ற வீடியோகான் உட்பட சில போன் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து முகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிரிக்கப்படாத ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்த ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம், பாகப்பிரிவினையின்போது, அனில் அம்பானி வசமானது. அந்நிறுவனம் இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5  வது  எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு:
பெட்ரோலிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் மாநிலத்தில் 5வது எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ளது.
அகமதாபாத் நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேம்பே படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இதற்கு சிபி&ஓஎன்என்&2003/1 என பெயரிடப்பட்டுள்ளது. 635 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த படுகை ஏ மற்றும் பி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் 5வது கண்டுபிடிப்பாகும். 
அரசு துறை நிறுவனங்களின் ரூ.40,000 கோடி பங்கு விற்க அரசு திட்டம:
பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் பற்றி கவலைப்படாமல், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அத்துடன், அரசு நிறுவனங்களில் பொது மக்களின் பங்கை அதிகரிக்க அரசு விரும்புகிறது. எனவேதான், முன்னணி நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருக்கின்றன. அதனால், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனைத் திட்டம் தள்ளிப் போகுமா என சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆனால், அரசைப் பொருத்தவரை தனது பங்கைக் குறைத்துக் கொள்ளும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிதி ஆண்டில் (2010 &11) திட்டமிட்டபடி முன்னணி நிறுவனங்களில் அரசின் பங்குகள் குறிப்பிட்ட சதவீதம் விற்பனை செய்யப்படும். ஜூலை முதல் அந்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும். பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பது எப்போதும் நடப்பதுதான். சவால் வரும்போது அதை எதிர்கொள்ள பங்கு விற்பனை அமைச்சகம் தயாராக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட எண்ணெய் நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைப்பது பற்றி பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்த பிறகே, விற்பனை நடவடிக்கை தொடங்கும். எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை எத்தனை சதவீதம் விற்பனை செய்வது, எப்போது அதற்கான அறிவிப்பு வெளியிடுவது என அரசு விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.
அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பங்கு விற்பனைத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.ஆனால் வரும் வாரங்களில்
பங்கு சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதை திங்கள் கிழமை நிபிட்டி தனது
5000 புள்ளிகள் நிலையை எவ்வாறு கையாளுகிறது என்பதை வைத்து தான் சொல்ல
முடியும்.சந்தையை பொறுத்தவரை நிபிட்டி 5100 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது .
ஆனால் அதன் பிறகு சந்தையில் அதிக அளவு selling பிரஷர் ஏற்பட வாய்ப்புள்ளது .
எனவே முதலீட்டார்கள் மிகவும் கவனமாக செயல்படவும். லாபங்களை உடனுக்குடன்
பதிவு செய்யவும்.நீண்ட கால முதலீட்டிற்கு இது தகுந்த நேரமல்ல. கவனம். 

 

மைக்ரோசாப்ட் NO:1

 அமெரிக்கர்களின் மனதை கவர்ந்த நம்பகமான நிறுவனங்களின் வரிசையில் மைக்ரோசாப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் மக்களுக்கு சேவை அளிப்பதில் முதன்மையான 25 நிறுவனங்கள் குறித்து ஆன்லைனில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1,752 பேர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதன் விவரம் ;
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலக அளவில் சாப்ட்வேர் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிகளை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை செய்து வருவதாலும் அமெரிக்க மக்கள் மனதில் முதலிடத்தை பிடித்துள்ளது. இன்றைய காலத்தில் ஒருவருக்கு தேவையான எந்த செய்தியாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் தனது இணைய தளம் மூலம் வழங்கி வரும் கூகுள் நிறுவனம் இரண்டாவது இடத்தையும், ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து போர்டு கார் நிறுவனம் (4), சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் (5), பாஸ்ட்புட் தயாரிப்பு நிறுவனம் மெக்டொனால்டு (6), ஜெனரல் எலக்டிரிக் (7), ஜான்சன் அண்ட் ஜான்சன் (8) முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 
மைக்ரோசாப்ட் அமெரிக்க மக்களின் மனதில் முதலிடம் பிடித்தாலும், வியாபாரத்தில் 
இதுவரை தன்னிடம் இருந்த முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் இழந்துள்ளது.

புதிய மொபைல் போன் வாங்கப்போறீங்களா? உஷார் !உஷார்

 புதிய மொபைல் போன் வாங்கப்போறீங்களா? கண்டிப்பாக உஷாராக பார்த்து வாங்குங்க; ‘சீல்’ செய்யப்பட்டு தானே இருக்கிறது என்று நம்பி விட வேண்டாம். நன்றாக சோதித்து வாங்குங்க. இல்லாவிட்டால், பழைய போனை புதிய போனுக்குரிய விலை கொடுத்த ஏமாந்து வீடுவீங்க.
ஆம், மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் இப்படித்தான் ஏமாந்து இப்போது, இந்த விவகாரம் போலீஸ் வரை போய் விட்டது. மொபைல் போனை விற்ற கடைக்காரர், உண்மையில் அங்கீகாரம் பெறாத சட்டவிரோத டீலர் என்பது தெரியவந்து, கம்பெனியும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஜோதி தாகுல்தார்; இவர் கணவர் சுப்ரஜித்துடன் சேர்ந்து ஆன்லைன் பைனான்ஸ் பிசினஸ் செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று கடன் பெற்றுத்தரும் தொழில் செய்யும் இந்த பெண் தொழிலதிபர் சமீபத்தில், இர்லா என்ற பகுதியில் உள்ள பிரபல நோக்கியா மொபைல் போன் டீலர் கடையில் புதிய நோக்கியா போன் வாங்கினார்.
‘சீல்’ உடைத்து போனை காட்டி அதை பரிசோதித்து தந்தார் வியாபாரி. ப்ளூடூத் உட்பட பல வசதிகளை கொண்ட இந்த போனை வாங்கி வீட்டுக்கு வந்த ஜோதி, அதை திறந்து பார்த்தார்.
போனில் சில எஸ்.எம்.எஸ்.கள் இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பழைய போனை கொடுத்து வியாபாரி ஏமாற்றி விட்டாரே என்று ஆத்திரம் வந்தது. பழைய போன் என்பதற்கு இன்னும் ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்ட அவர், போனை முழுமையாக ஆராய்ந்தார்.
மொபைல் போன் ப்ளூடூத் ‘யூசர் நேம்’ வேறு ஒருவர் பெயரில் இருந்தது. மொத்தம் 20 எஸ்.எம்.எஸ்.கள் இருந்ததை கண்டுபிடித்தார். இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்னார்.
உடனே கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு இது பற்றி விவரம் தெரிவித்தார். ஆனால், கடைக்காரர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘நான் பல ஆண்டாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான பேர் என்னிடம் வாடிக்கையாளர்கள்; நீங்கள் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறீர்கள்’ என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த விஷயத்தை ஜோதி விடுவதாக இல்லை. போனை எடுத்துக் கொண்டு கடைக்கே சென்று விட்டார். ‘இதோ பாருங்கள். நான் திறக்கவே இல்லை. டப்பாவில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அப்படியிருக்க, எப்படி எஸ்.எம்.எஸ்.கள் இருக்கும். ப்ளூ டூத் ‘யூசர் நேம்’ எப்படி வேறு பெயரில் இருக்கும்’ என்று கேட்டார்.
‘சாரி மேடம், உங்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு வாடிக்கையாளர் இந்த போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தான் இப்படி தவறு செய்திருக்க வேண்டும்’ என்று பல்டி அடித்தார். கம்பெனியில் கேட்டு, புது போன் வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார். ஆனால், ஜோதி திருப்தி அடையவில்லை.
வீடு திரும்பிய ஜோதி, நோக்கியா வெப்சைட்டில் அதன் தலைமையகத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு இ மெயிலில் பதில் வந்தது.‘எங்களுக்கு இர்லா பகுதியில் டீலராக இருந்த மன்னு ஜெஸ்வானி என்பவர் டீலர்ஷிப்பை ரத்து செய்ய கடிதம் எழுதி விட்டார். அவர் இப்போது எங்கள் டீலர் அல்ல. நீங்கள் தவறான வியாபாரியிடம் போன் வாங்கியிருக்கிறீர்கள்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஜோதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. மீண்டும் கடைக்கு போனார். விஷயத்தை சொன்னதும், மன்னு எகிறி குதித்தார். ‘என்ன மேடம், என்னை நம்ப மாட்டேங்கறீங்க. நான் தான் டீலர்; நீங்க எங்கே போயும் புகார் செய்யுங்க’ என்று பதிலுக்கு கத்தினார்.
டென்ஷனான ஜோதி, தன் கணவரை அழைத்துக் கொண்டு ஜுஹு பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ‘போன் வியாபாரி என்னை ஏமாற்றி விட்டார். அவர் சட்டவிரோதமாக நோக்கியா போன் விற்று வருகிறார்’ என்று கூறியிருந்தார். இப்போது வியாபாரி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு, நோக்கியா நிறுவனமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. ‘எங்கள் டீலர்ஷிப்பை ரத்து செய்து கொண்ட ஒருவர் சட்டவிரோதமாக எங்கள் நிறுவன மொபைல் போன்களை விற்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும், பழைய போன்களை புதிய போன் போல விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளது.

தின பலன - 29.05.2010

 மேஷம்:
மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்ந்தாலும் தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
ரிஷபம்:
மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
மிதுனம்:
நீண்ட நாளாகத் தள்ளிப்போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமா வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்:
நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
கன்னி:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உற வினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.
துலாம்:
இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்:
மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்
தனுசு:
கணவன்,மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் பழுதாகும். எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் வந்து போகும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானம் தேவைப்படும் நாள்.
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறை வேறும் நாள்.
கும்பம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர் பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங் களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு கூடும் நாள்.
மீனம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

இந்த நாள் இனிய நாள்

 
 
29.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 15ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. துவிதியை திதி மறுநாள் விடியற்காலை மணி 6.01 வரை; பிறகு, திருதியை திதி. சமநோக்குள்ள கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 2.04 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் புதிய முயற்சிகளையும், சுபகாரியங்களையும் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை,ரோகினி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பழைய நட்பை புதுப்பிக்க நன்று. 
 
 

தொடரும் கொலைவெறி

 நிராயுதபாணியை மறைந்திருந்து கொல்வதை போன்ற கோழைத்தனம் வேறேதுமில்லை. துப்பாக்கிகள், கண்ணிவெடிகளுடன் திரியும் பயங்கரவாத இயக்கங்கள் எல்லாமே அதை செய்திருக்கின்றன. மாவோயிஸ்ட் என்ற பெயர் சூட்டிக் கொண்டு அலையும் இந்திய நக்சலைட்களும் தங்கள் கோழைத்தனத்தை அதே பாணியில் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்துக்கு குண்டு வைத்து பயணிகள் ரயிலை கவிழ்த்து அதன் மீது சரக்கு ரயில் மோதி 75 நிராயுதபாணி அப்பாவிகளை மிகக் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். எந்த இடத்தில் தண்டவாளம் எப்படி வளைந்தால் ரயில் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் கவிழும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு நாசவேலையை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் கொலைகாரர்கள். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு மாதம் முன்பே டிக்கட் பதிவு செய்து தொலைதூரத்தில் வசிக்கும் உறவுகளை சந்தித்து விடுமுறையை கழிக்க குடும்பம் குடும்பமாக புறப்பட்ட சாதாரண மக்களுக்கு மாவோயிஸ்டுகளோடு என்ன பிணக்கு? கண் மூடித் தூங்கி கனவுகளில் மிதந்த ஆண், பெண், குழந்தைகளை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைத்ததால் மாவோயிஸ்டுகளின் இலக்கு நெருங்கிவிட்டதா?
மது பணம் புகழ் அதிகாரம் போன்றவை சுவைக்க சுவைக்க போதையேறி இன்னும் இன்னும் என்று ஏங்க வைப்பது போல ரத்த தாகமும் இறுதிவரை தணியாது. நாட்டில் 90 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை தொடர்ச்சியாக நடக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் 9 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் இந்த நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்தது. இன்றைய நிலவரப்படி அது 20 மாநிலங்கள், 223 மாவட்டங்கள் என பெருகியிருக்கிறது. சென்ற ஆண்டு ரயில்வே சொத்துக்கள் மீது 32 முறை மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது. இந்த ஆண்டு தாக்குதல் எண்ணிக்கையை குறைத்து உயிர் பலியை அதிகரித்துள்ளனர். தண்டேவாடாவில் இரண்டு அட்டாக்கில் சதம் தாண்டிவிட்டனர்.
ஆதிவாசி நலன் காக்க என்று சொல்லி கொடி தூக்கியவர்களின் கொலைவெறி உச்சத்துக்கு செல்வதை சமீபத்திய சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த நிலையிலாவது மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தெளிவான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இனியும் தாமதமானால், மக்களின் நம்பிக்கை காளஹஸ்தி கோபுரம் போல முற்றிலுமாக தகர்ந்துவிடும்.

Friday, May 28, 2010

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்




பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. வளர்ப்பும்,
சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது.அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது.
இளம்ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள்கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான்பண்ணி’ கொலை   செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனைகடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும்சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.அது, இது என்று
எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும்  எல்லாவிதமான
குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள்
என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள்
தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை
மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து
நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18
வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர்
கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில்
அவர்களின் நிலைமையை  ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக
அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2
சதவீதம்  இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக
நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின்
அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர்
தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. எப்படியிருந்தாலும் அதற்கு
சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின்
குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான்
இருக்கின்றன’’.குறிப்பாக இளம்
குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு
வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம்
என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும்
குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
      பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை
பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில்
முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள்
குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை
செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும்
தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர்,
பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள்
நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை,
விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது.
முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில்
இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில்.
முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம். இப்படி
கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள்
என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும்
எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
     வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள்
இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது
சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி
விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி
காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக
தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது
மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது
நல்லது.
தேசிய
அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10
ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும்
3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள்
16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
     சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே
சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம்.  இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம்
இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர
குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு ஜஸ்ட் FUN அதனால் ஏற்படும்
விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில்
தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர்.
அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய
குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும்
வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்.
 திருட்டுக்

குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத
திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை
நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள்
இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம்
ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு
முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு
10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400
சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்கள்,

போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான
குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம்
இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும்
கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை
விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில்
இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம்
ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும்
மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச்
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள்
விவரம்:
இளம் குற்றவாளிகள்
பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை
பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும்,  தங்குவது
ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள்
முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள்.
அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர்.
பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர்
இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள். இல்லாவிட்டாலும் மாசக் கடைசி
கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து
விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள்
பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல
சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச்
செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை,
மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய
பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத
குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது
சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து
விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல்
போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம்
குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.
அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல்
ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6
சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய்
உள்ளவர்கள். தமிழகத்திலும் இளம்
குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து
வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற
ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு
வருகின்றன.
குற்றம்                          2006           2007           2008
கொலை                          23              38               26

கொலை முயற்சி          18              17               17        
கற்பழிப்பு                           8             13                  7
 கடத்தல்                           0                4                3
பெண் கடத்தல்                 0                2                3
வீடுபுகுந்து திருட்டு        1               14               3
வழிப்பறித் திருட்டு         6                 1              13
கொள்ளை                       119             138            106
திருட்டு                            304             387            410
ஆட்டோதிருட்டு            44               56              56
வன்முறை                        6                26              23
அடிதடி                             41                42             158
மானபங்கம்                       5                 2                 5
பாலியல் தொந்தரவு        5                0                 0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு   78               0                 6
மற்ற
குற்றங்கள்                          29              65               75
மொத்தம்                           687              805            911
விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக்
கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள்
குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த
ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து
பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும்
போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில்
30 லிருந்து  50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல்
தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
இது ஏதோ கதை என்று நினைத்து விடாதிர்கள்.ஒவ்வொரு பெற்றோரும் தங்கள்
குழந்தைகள் மேல் எப்போதும் கவனுத்துடன் இருக்க வேண்டும்.கவனுத்துடன்
இருப்பதால் உங்களுக்கு ஒரு நல்ல சந்ததி கிடைக்கும்.இந்த சமுகத்துக்கு ஒரு நல்ல
மனிதன் கிடைப்பான். இந்தியாவில் சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும்
நல்ல குழந்தைகளை உருவாக்குவோம். ஜெய் ஹிந்த்!

மேற்கு வங்கத்தில் அதிகாலை பயங்கரம்

 
 மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் தடம் புரண்ட மும்பை பயணிகள் ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் 65 பேர் உடல் சிதறி இறந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். 
பீகார், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சமீபகாலமாக பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் நக்சல்களின் கண்ணிவெடியில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 65 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள கெமாசோலி மற்றும் சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே மும்பை ரயில் நள்ளிரவு 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. வேகமாக வந்த ரயில் தடம் புரண்டதில் 13 பெட்டிகள், அருகில் உள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தன.
அதே நேரத்தில் பக்கத்து தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்து கிடப்பதை பார்த்த சரக்கு ரயிலின் இன்ஜின் டிரைவர், பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதியது.
எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்கள் சுதாரிப்பதற்குள் சரக்கு ரயில் மோதியதில் பெட்டிகளில் இருந்த பல பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். படுக்கை வசதிகளுடன் கூடிய ஒரு பெட்டி, முன்பதிவு செய்யப்பாடாத ஒரு பெட்டி, பேன்ட்ரி வேன் ஆகியவை பலத்த சேதமடைந்தன. அவற்றில் இருந்த 65 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 150 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
 மும்பை ரயிலின் 11 பெட்டிகள் சேதமடையாமல் இருந்தன. கவிழ்ந்த பெட்டிக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டு காரக்பூர் கொண்டு சென்றனர். அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் கலைகுண்டா விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து இரு ஹெலிகாப்டர்களில் விமானப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த பயணிகள் 45 பேர் விமானப்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிலர் காரக்பூர் ஐஐடி ஆஸ்பத்திரி மற்றும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் பின்னணியில நக்சல்கள் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் வந்த தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். அதனால்தான் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
 பலியான பயணிகளுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். மேலும் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயில் பயணிகள் பற்றி விவரங்கள் அறிய காரக்பூர் மற்றும் ஹவுராவில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரக்பூர் உதவி மையத்தை 0322 255751 என்ற எண்ணிலும், ஹவுரா உதவி மையத்தை 033 -26382217 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தண்ணீரின் அவசியம்

 தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தைக் காப்பதுடன், மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டீன் வயது இளைஞர்களின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மூளையின் வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்துக்கும் குடிநீர் மிகவும் அவசியம் என்பது தெரியவந்துள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீரான இயக்கமும் தடைபடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 நிமிடங்களுக்கு தொடர்ந்து வியர்வை வெளியேறினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
தண்ணீர் தாகத்துடன் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனினும், தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் குடித்தால் உடனடியாக மூளை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் எடைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடுகிறது. மொத்த உடல் எடையில் 57 சதவீதம் அதாவது 70 கிலோ எடை உள்ள ஒருவருக்கு 40 லிட்டர் தேவைப்படுகிறது.
குடிநீர் பொதுவாக, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர, உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும், சீரான ஜீரணத்துக்கும், உறுப்புகளுக்கு மசகு பொருளாகவும், ஊட்டச் சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வராக்கடன் ரூ.1 லட்சம் கோடி

 
TRADING LIVE TIPS VISIT MY BLOG : www.tradersfirst.blogspot.com
நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன்கள் (என்பிஏ) ரூ.1 லட்சம் கோடியைத்தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகடந்தநிதியாண்டைவிட
இரண்டு மடங்கு அதிகம்.கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெக்ஸ்டைல்ஸ் துறை வெளிநாட்டு ஆர்டர்களை பெருமளவில் நம்பி உள்ளன. இவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளன.
இதுதவிர, ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ், விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானமும் நடப்பு நிதியாண்டில் குறையும். இதனால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டு வசூலாகாத கடன்கள் அதிகரிக்கும் என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டு மடங்காகி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும்.
கடந்த நிதியாண்டில் வசூலாகாத கடனை வசூலிக்க ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வங்கிகள் ஏலம் விட்டன. ஆனால், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ஏஆர்சி) ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே ஏலம் எடுத்தன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணம்.எனவே, சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களில் 49 சதவீதமாக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினபலன் - 28.05.2010

28.5.2010,

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 14ம் நாள், வெள்ளிக்கிழமை,
தேய்பிறை. பிரதமை திதி மறுநாள் விடியற்காலை மணி 5.33 வரை; பிறகு, துவியை திதி. சித்தயோகமுடைய அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 1.13 வரை; பிறகு, மரணயோகமுடைய கேட்டை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சமநோக்கு நாள். அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி.
நல்ல நேரம்:
காலை மணி 6&9, மதியம் 1&3, மாலை 5&6, இரவு 8&10 மணி வரை.
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
சந்திராஷ்டமம்: பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
பொதுப்பலன்:
கடன் பைசல் செய்ய நன்று.

Thursday, May 27, 2010

பங்குச் சந்தை

 INDIA'S FIRST REAL TIME (every 30 minutes) TRADING TIPS VISIT MY BLOG: tradersfirst.blogspot.com
சர்வதேச பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலை பெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் காரணமாக, நேற்று வர்த்தகம் தொடங்கும்போதே சென்செக்ஸ் உயர்வுடன் இருந்தது. பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்து பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கின. இதையடுத்து, வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 4,917 புள்ளிகளில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிக்கும் 30 நிறுவன பங்குகளில் 24 உயர்வுடன் முடிந்தன. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3.48 சதவீதம் உயர்ந்தன. ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் வருமானம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஐடி துறை பங்குகளின் உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம். அடுத்தபடியாக உலோக துறை பங்குகள் 2.98 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிப்பதில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.08 சதவீதமும் இரண்டாம் இடத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 3.37 சதவீதமும் உயர்ந்தன.
இன்றும் பங்கு சந்தைகள் 2 % வரை உயர்வை கண்டன.கடந்த ஒருவாரமாக முதலிட்டார்கள் இடையில் நிலவி வந்த பயம் நீங்கி நம்பிக்கை பிறந்தது.

கூகுள் நிறுவனத்தாள் ரூ.570 கோடி நஷ்டம்


கூகுள் நிறுவனத்தின் பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் விளையாட்டால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 50 லட்சம் மணி நேரம் வீணாகிப்போனது. பொருளாதாரத்துக்கு ரூ.570 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம், கூகுள் சர்ச் இன்ஜின் அருகே, கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் வடிவத்தில் இந்த கம்ப்யூட்டர் கேமையும் போட்டிருந்தது. சர்ச் இன்ஜினில் தேட வந்தவர்கள் அனைவரும் பேக் மேன் கேமை பார்த்ததும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். 48 மணி நேரம் வரை இந்த கூகுள் லோகோ பேக் மேன் கேம் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 50.5 கோடிப் பேர் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானாவர்கள் கூகுள் லோகோ பேக் மேன் கேமை பார்த்ததும் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 48 லட்சத்து 19 ஆயிரம் மணி நேரம் வீணாகிப் போனது. அலுவலக பணி நேரத்தில் விளையாடியதால் ரூ.570 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக ரெஸ்க்யூ டைம் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இத்தனை கோடி பணத்துக்கு கூகுள் நிறுவனர்களான லாரி, செர்ஜி மற்றும் அங்கு பணிபுரியும் 19,385 ஊழியர்களையும் 6 வாரங்களுக்கு வேலைக்கு அமர்த்தலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேக் மேன் கேமுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அசந்து விட்டோம். இதனால் கூகுள் டாட் காமில் இந்த கேமை நிரந்தரமாக விளையாட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் கூகுள் நிறுவன துணைத் தலைவர் மரிஸா மேயர்.

ராஜகோபுரம் இடிந்து விழுந்தது.

 
 காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் நேற்றிரவு 8 மணியளவில் முழுவதுமாக அடியோடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பஞ்ச பூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். திருப்பதியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இக்கோயிலில் ராகு, கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் ராஜ கோபுரம் 140 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துவந்தது. கி.பி. 1510ம் ஆண்டு கிருஷ்ண தேவராய மன்னர் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்தை கட்டியதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜகோபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது திடீரென ராஜகோபுரத்தின் மேல் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை கோபுரத்தின் இடதுபுறம் இரண்டாக விரிசல் ஏற்பட்டு பிள வுபட்டது போல் காணப்பட்டது. 
மின்னல் வெட்டு போல் காணப்பட்ட இந்த இடத்திலிருந்து செங்கற்கள், சுண்ணாம்பு கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ராஜகோபுரம் முழுவதும் நேற்றுறிரவு இடிந்து விழுந்தது.

வட கொரியா - தென் கொரியா போர்

 
 
 
 
 
எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது தெ.கொ. இது அபாண்டம் என வ.கொ. மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.

தினபலன் - 27,05.2010

 
 மேஷம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 
ரிஷபம்:
சாவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
மிதுனம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கடகம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி வெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
சிம்மம்:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
கன்னி:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
 
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
 
கும்பம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.
 
மீனம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த வாக்குவாதம், காரியத்தடை யாவும் நீங்கும். கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

Related Posts with Thumbnails
 

Blogger