Friday, December 10, 2010

காலை டிபனுடன் குடிக்க ஏற்றது ஜூஸா, பாலா?

 
 காலை டிபனுடன் குடிக்க ஏற்றது ஜூஸா, பாலா? என்ற பட்டிமன்ற ஆராய்ச்சி ஆஸ்திரேலியாவில் நடந்தது. குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். மொத்த கூட்டமும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒரு குரூப்புக்கு தினமும் காலை டிபனுடன் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட சுமார் 50 கலோரி அளவுள்ள பால் கொடுக்கப்பட்டது. இன்னொரு குரூப்புக்கு அதே கலோரி அளவுக்கு ஜூஸ்.
ஜூஸ் குடித்தவர்கள் மதிய உணவை வரிந்து கட்டி சாப்பிட்டனர். பால் குடித்தவர்களால் அந்தளவு மல்லுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே ‘ஏவ்’ வந்துவிட்டது.
இந்த ஆய்வு பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சத்தான பானம் பால். கொழுப்பு நீக்கிய பாலை குண்டாக இருப்பவர்கூட அருந்தலாம். குறைவான கலோரிகள் மட்டுமே உடலில் சேரும். பாலில் புரதம், லாக்டோஸ் அதிகம். எனவே, காலை டிபன் முடித்ததும் ஒரு டம்ளர் பால் குடித்தால் மதிய உணவின் அளவு குறையும். நாளாவட்டத்தில் உடல் தானாக இளைக்கும். பழச்சாறு எளிதில் செரிக்கும். செரிமானத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிது நேரத்திலேயே பசிக்கும். சீக்கிரம் சாப்பிடுவோம். அதிகம் சாப்பிடுவோம். உடம்பு வெயிட் போடும். காலை டிபனுடன் அருந்துவதற்கு ஜூசை விட பால்தான் பெஸ்ட் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘லார்ஜ் பெக்’ என்பது 60 மி.லி. 3 பெக் என்பது ஏறக்குறைய ஒரு டம்ளர் என்பது குடிநிபுணர்களின் விளக்கம்.

Monday, September 20, 2010

காதலிலே நீ எந்த வகை?

 அழகான ஒரு பெண் நம்மை கடந்து போனால் நம் பார்வை தன்னாலே அவள் பின்னாலே போகும். அந்த அழகி கடந்து செல்லும் வரை வைத்த கண்கள் அகலாது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... நீங்க சொல்ல வந்த மேட்டருக்கு வாங்க என்கிறீர்களா...?
எது எதுக்கோ ஆராய்ச்சி செய்து பல ‘அரிய’ தகவல்களை அள்ளி வீசும் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் பெண்களை விழுங்கும் ஆண்களின் கிளுகிளு பார்வை ரகசியத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அதுபற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர் உளவியலாளர்கள். ஆண்களின் பார்வை ரசனையை வைத்தே அவர்களின் பார்வையில் காதல் இருக்கிறதா அல்லது காமம் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து விடலாமாம். பெண்களின் முக வசீகரத்தை ரசிக்கும் ஆண்கள், நீண்டகாலம் காதலோடு வாழ்கிறார்கள், நெளிவுசுளிவான உடலை மட்டும் ரசிக்கும் ஆண்கள் காமத்துடன் கூடிய குறுகிய கால காதலையே விரும்புகிறார்கள் என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவாம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஜெமைன் கான்பர் உள்பட மனோதத்துவ நிபுணர்கள் ஒன்று சேர்ந்து, 192 ஆண்கள் மற்றும் 183 பெண்களிடம் இந்த கிளுகிளு ஆய்வை நடத்தியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம், தேவதை போன்ற பெண்ணின் படத்தை காட்டி ரசிக்க செய்தனர். பின்னர் அவர்களிடம் கருத்து கேட்டபோது சிலர், ‘இந்தப் பெண்ணுடன் நீண்ட நாள் காதலோடு வாழ விரும்புகிறேன்’ என்றனர். வேறு சிலர் ‘ஒரு நாளாவது இவளோட வாழ்ந்துடணும்’ என்ற ரீதியில் பேசினர். முதலாவது ரக ஆண்கள், பெண்களின் முக வசீகரத்தை மட்டும் ரசித்தவர்கள். இரண்டாவது வகையினர், முகத்தை விட்டு மற்ற பாகங்களை ரசித்தவர்கள்.
இதே நிலைதான் ஆண்களை ரசிக்கும் பெண்களிடமும். பாலின பாகுபாடு இன்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 61 சதவீத ஆண்களும், 69 சதவீத பெண்களும் முக அழகில் மயங்கியுள்ளனர். மற்றவர்கள் உடல் வனப்பில் கவரப்பட்டுள்ளனர்.
பெண்களின் முக அழகை ரசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பது ஆய்வின் கூடுதல் டிப்ஸ். இதுக்கெல்லாம் ஒரு ஆய்வு தேவையா... இதுதான் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது. என்ன செய்வது?

நூறு வயது வாழ டிப்ஸ்

 மசாலா அதிகம் இல்லாத சைவ உணவும், கொஞ்சம் பீரும் போதும். வாழ்வில் செஞ்சுரி அடிக்கலாம் என்கிறார் 120 வயதை கடந்த மூதாட்டி.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகேயுள்ள ராங்மோங்வே கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மூதாட்டி கரங் தெரோன்பி. இவருக்கு 90 வயதில் மகள் உள்ளார். உறவினர்களிடம் விசாரித்ததில் பாட்டிக்கு 120 வயது இருக்கும் என்கின்றனர். உடல் பலவீனமாக இருந்தாலும் பாட்டியின் பார்வை நன்றாக உள்ளது. குரலும் சத்தமாக இருக்கிறது.
‘உங்க ஆயுசு நீடிப்பதன் ரகசியம் என்ன’ என்று பாட்டியிடம் கேட்டால் சிரிக்கிறார். ‘‘இதுல ரகசியம்லாம் ஒண்ணுமில்ல. எல்லாரும்போல தினமும் அரிசி சாதம், வேக வைத்த காய்கறிதான் சாப்பிடுறேன். மசாலா அதிகம் சேர்த்துக்க மாட்டேன். இங்கு கிடைக்கற ‘ஹார்’ என்ற அரிசி பீர் தினமும் குடிப்பேன். காரமில்லாத சைவ டிஷ். அவ்வளவுதான்’’ என்கிறார். கரங் போல் ஒரு டஜன் பாட்டிகள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். எல்லோருமே காரமில்லாத உணவுதான் சாப்பிடுகின்றனர். ஜான் கதர் என்ற முதியவர் கூறுகையில், ‘‘புகையிலை பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதே இல்லை’’ என்கிறார்.

Tuesday, September 7, 2010

பொம்பளப் புள்ள வேணுமா? உப்பை குறைங்க

 ஆசைக்கோ, ஆஸ்திக்கோ.. ஒரு பெண், ஒரு பிள்ளை வேண்டும் என்பது பலருக்கு ஆசை. நினைப்பதெல்லாம் நடக்கிறதா. மாறிப் பிறந்து பல வீடுகளில் சண்டை மண்டை உடைகிறது. இந்த விஷயத்தில் சூப்பர் அட்வைஸ் சொல்லியிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
கர்ப்பிணிகளின் உணவுப் பழக்கத்துக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி ஹாலந்தின் மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள், பெண் குழந்தைகளுக்கு விரும்பம் தெரிவித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 23&42 வயதுக்கு உட்பட்ட 172 பெண்களிடம் விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பிரட், காய்கறிகள், பழவகைகள், இறைச்சி, அரிசி, பாஸ்தா வகை உணவுகள் என பல்வேறு வகையான உணவுகள் கொடுக்கப்பட்டன.
ஆய்வு முடிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுவதாவது:
தம்பதிகளின் அமைதியான மனநிலை, சரியான நேரத்தில் இணையும் இல்லற உறவு ஆகியவைதான் குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது. அதே நேரம், தாய்க்கு உணவுக் கட்டுப்பாடும் அவசியம். பெண் குழந்தை வேண்டுவோர் முதலில் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். வாழைப்பழத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கணவன் & மனைவி இருவரும் ஒரே நேரத்தில் டென்ஷன் இல்லாமல் படுக்கைக்கு செல்ல வேண்டியது மிக மிக அவசியம். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்த சோதனைக்கு 80 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.
கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள பால் பொருட்கள், லெஸி, யோகர்ட், பாலாடைக்கட்டி, வஞ்சிர மீன், பசலைக்கீரை, ஓட்ஸ், முட்டைக்கோஸ் வகைகள், முந்திரி, பாதாம், கோதுமை உணவுகள், பூண்டு, பழ வகைகளில் ஆரஞ்சு ஆகியவை அதிகம் சாப்பிடலாம். மாதவிலக்கு நாட்களின் முன்னும் பின்னும் உள்ள ஓரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம். இவற்றை கடைபிடித்தால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இத்தகைய கட்டுப்பாடுகளை பின்பற்றிய தாய்மார்கள் 21 பேரில் 16 பெண்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகம்

 வெளிநாடுகளில் வேலைக்கு போகும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கண்ணில் நீரை வரவழைக்கும். ஏற்கனவே, குடும்பத்தை பிரிந்து நல்லது, கெட்டதுக்குகூட வரமுடியாமல் போன் மூலமே பேசிக்கொள்ளும் சோகம் போதாது என்றால், சொன்னபடி தராமல் குறைந்த சம்பளம் தருவது, சாப்பாடுகூட போடாமல் கொடுமைப்படுத்துவது என பல வேதனைகளை அனுபவிக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். இருவரது சோகமும் ஒரே மாதிரியானது. ஒருவர் திருவாரூரை சேர்ந்த பெண். வீட்டு வேலை செய்வதற்கு கோலாலம்பூருக்கு சென்றிருக்கிறார். குறைந்த சம்பளம். 18 மணி நேரம் வேலை. வேளாவேளைக்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். வேலை பார்த்தது போதும்.. விட்டா ஊருக்கு போய்விடலாம் என்ற முடிவில் பாஸ்போர்ட்டை கேட்டிருக்கிறார். ஆனால் வேலை பார்த்த இடத்தில் இரண்டு வருடம் கழித்துதான் தருவோம் என்று கூறியிருக்கிறார்கள். அங்குள்ள ஏஜென்ட்களை அணுகி போலி பாஸ்போர்ட்டில் தாயகம் திரும்பியிருக்கிறார்.
இன்னொருவர், நாகப்பட்டினத்தை சேர்ந்த காஜாமொய்தீன். மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றிருக்கிறார். வேலை பிடிக்கவில்லை. இவருக்கும் வேலை பார்த்த இடத்தில் பாஸ்போர்ட் தரவில்லை. போலி பாஸ்போர்ட்டில் திரும்பியவர் சிக்கிவிட்டார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். வீட்டு வேலை, கட்டிட வேலை, டிரைவர் வேலை என குறைந்த சம்பளத்தில் இருக்கிறார்கள். பாஸ்போர்ட்டை வேலை பார்க்கும் இடத்தில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாமல் ஊர் திரும்பக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. பல நேரங்களில் டிரைவர் வேலைக்கு போனவர்கள் 55 டிகிரி பாலைவன வெயிலில் ஒட்டகம் மேய்ப்பதை பார்க்கலாம்.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பிரச்னையை அங்குள்ள அந்தந்த நாட்டு தூதரகங்கள்தான் தீர்த்துவைப்பது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய தூதரகம் ரொம்ப மோசம். போதுமான ஊழியர்கள் இல்லை என காரணம் கூறி பிரச்னைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. உதவியும் செய்வதில்லை. அதனால்தான் எப்படியாவது இந்த நரகத்தில் இருந்து தப்பித்தால்போதும் என போலி பாஸ்போர்ட்டில் இந்தியா திரும்புகின்றனர்.
உலகம் முழுவதுமே ஒரு அமெரிக்கனுக்கோ இங்கிலாந்துக்காரனுக்கோ பிரச்னை என்றால் அது அந்த ஊரில் அமளிதுமளியாகும். சம்பந்தப்பட்ட நாட்டை வறுத்தெடுத்து விடுவார்கள். அதுதான் அந்த நாடுகளின் பலம். இந்தியாவுக்கு அந்த பலம் எப்போது வருமோ தெரியவில்லை.

Friday, September 3, 2010

சீனாவின் அத்துமீறல்

 ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சீன அரசு மறுத்திருக்கிறது.
பாதகமான செய்தி வரும்போது மறுப்பறிக்கை தருவதற்காக எல்லா அரசாங்கத்திலும் அதிகாரிகள் இருக்கிறார்கள். மறுப்புகள் ஒரே மாதிரி இருப்பதை தீவிர வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். செய்தி ஆதாரமற்றது; உள்நோக்கம் கொண்டது என பொதுவான வாசகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். சீன மறுப்பு சற்று மாறுதல்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் நெடுஞ்சாலையும் தண்டவாளமும் அமைக்கும் பணியில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஏற்கனவே அதில் ஒரு பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் தானமாக கொடுத்திருக்கிறது. அதில் கரகோரம் நெடுஞ்சாலையை சீனா அமைத்துள்ளது. அதை நீட்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் எல்லை வரையிலும் போட்டால், வளைகுடா நாடுகளுடன் சீனாவுக்கு ஷார்ட் கட் கிடைத்துவிடும். ஆப்கானிஸ்தானையும் தொடமுடியும்.
வரைபடத்தை பார்த்தால் இது நமக்கு எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது புரியும். நேபாளத்தில் மாவோயிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி தன்வசப்படுத்தும் திட்டத்தில் சீனா முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், காஷ்மீரிலும் அதன் தடம் பதியுமானால் இந்தியாவை நிலரீதியாக சுற்றி வளைத்ததாகி விடும். இன்றைய தேதியில் 11 ஆயிரம் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரகசியமாக இயங்கி வருவதாகவும், யாரும் அங்கு செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியுலகத்துக்கு தெரியவில்லை என்றும் உளவு தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை எழுதியிருக்கிறது. ‘அந்த பகுதியில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, மருந்துகளை வேறுவழியாக கொண்டு செல்ல முடியாது. எனவே, அருகில் இருக்கும் நாங்கள் உதவ பாகிஸ்தான் கேட்டது. அதற்கு ஆட்களை அனுப்பினோம்’ என்று சீனா கூறியிருக்கிறது. பாகிஸ்தான் அறிக்கை அதை ஆமோதிக்கிறது.
இந்தியாவுடன் நல்லுறவை கெடுக்க யாரோ செய்யும் சதி என்றும் அமெரிக்க செய்தியை சீனா வர்ணித்திருப்பது எதிர்பாராத விமர்சனம். இருந்தாலும், சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதை சீனாவுக்கு யார் சொல்வது?

கிரிக்கெட் சூதாட்டத்தை அங்கீகரித்து விடலாம் அரசுக்கு கோர்ட் யோசனை

 கிரிக்கெட் உள்பட எல்லா விளையாட்டுகளிலும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று டெல்லி நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின. அப்போது, இந்தப் போட்டியின் முடிவு தொடர்பாக சூதாட்டம் நடத்தியதாக பிரஷாந்த் குமார் மாலிக், விக்கி குரோவர் ஆகியோரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், டெல்லி போலீசின் சூதாட்ட தடுப்பு சட்டப்படி இரண்டு பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
இதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவரும் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி தர்மேஷ் சர்மா கூறியதாவது:
கிரிக்கெட் மட்டுமின்றி பல விளையாட்டுகளிலும் சட்ட விரோதமாக சூதாட்டங்கள், உலகம் முழுவதும் நடக்கிறது. இதில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இந்தப் பணம், தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல் பேர்வழிகளிடம் சிக்கி, நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அங்கீகாரம் செய்து விடலாம்.
அப்படி செய்வதால், பணம் பரிமாற்றம் பற்றி அரசு எளிதாக கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் நிதியை மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதனால், ஆன்லைன் அல்லது வேறு எந்த வழியிலும் விளையாட்டில் சூதாட்டம் நடப்பதை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது 25 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மட்டும் 3 ஆயிரம் சூதாட்டம் புரோக்கர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் எந்த இடத்தில் பரப்பரப்பான விளையாட்டு போட்டி நடந்தாலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போலீசுக்கு தெரியாமல் இது நடக்க முடியாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதால்தான் சூதாட்டம் தொடர்ந்து நடக்கிறது. அதனால், சூதாட்டத்துக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்குவதுதான் ஒரே வழி.

Monday, August 30, 2010

சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளை தொடும்

 
 
  
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் புள்ளிகளை கடக்கும் என்று பங்கு பரிவர்தனை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் இந்திய பங்குச் சந்தையின் நிலவரம் குறித்து அனில் அம்பானி குரூப்பின் மேனேஜர் மதுசூதன் கெலே கூறிய விவரம் வருமாறு:
உலக அளவில் ஓப்பிடுகையில் இந்திய பங்குச் சந்தை நிலவரம் நல்ல நிலையில்தான் உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். நாளுக்குநாள் சந்தையில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் 3 முதல் 5 ஆண்டுக்குள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இரண்டு மடங்காக உயரும். தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 18,000 புள்ளிகளாக உள்ளன. இவை அடுத்த 5 ஆண்டில் 100 சதவீத வளர்ச்சியை எட்டி 30,000 புள்ளியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகஸ்டில் அன்னிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் 11,447 கோடி முதலீடு செய்துள்ளன. இது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 60,000 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற வளர்ச்சியின் காரணமாக பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் விரைவான வளர்ச்சியை எட்டும். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சென்செக்ஸ் 16,000 - 17,000 புள்ளிகளுக்கு இடையே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டுக்குப் பின் ஆகஸ்ட்டில் 18,475 புள்ளிகளாக உயர்ந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு அதிக அளவில் இருப்பதாலும் விரைவான முன்னேற்றத்தை பங்குச் சந்தையில் காணலாம் என்று அவர் தெரிவித்தார்.

10 கிராம் தங்கம் விலை 20 ஆயிரத்தைத் தொடும்

 முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், தீபாவளிக்கு முன்னதாக 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 20 ஆயிரத்தைத் தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பிறகு தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. முதலீடு பாதுகாப்பாக இருப்பதே இதற்குக் காரணம். தேவை அதிகரித்ததால் அதன் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,260 டாலரை தாண்டியது. இந்தியாவில் 24 காரட் 10 கிராம் தங்கம் விலை 19 ஆயிரத்தைத் தாண்டியது.
பின்னர் சற்று குறைந்திருந்த தங்கம் விலை, மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என் பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதாலும் திருமண சீசன் தொடங்கி இருப்பதாலும் தங்கத்துக்கான தேவை இனி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
‘‘இப்போது 10 கிராம் தங்கம் விலை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பண்டிகை விற்பனை சூடுபிடிக்க உள்ளதால் தீபாவளிக்கு முன்னதாக 20 ஆயிரத்தைத் தொடும்’’ என மும்பை தங்கம் விற்பனையாளர்கள் சங்கத்தின் (பிபிஏ) தலைவர் சுரேஷ் ஹண்டியா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தங்கம் அதிக அளவில் விற்பனையாகும் நாடு இந்தியாதான். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, முதல் 6 மாதங்களில் விற்பனை 94 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 188 டன்னாக இருந்த விற்பனை, இந்த ஆண்டு 365 டன்னாக அதிகரித்துள்ளது.
‘‘திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும்’’ என உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார்.

Friday, August 27, 2010

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு சாத்தியம்

 மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (ELECTRONIC VOTING MACHINE) தில்லுமுல்லு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபடியும் கிளம்பியிருக்கிறது. முடியும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி ‘நிரூபித்த’ ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதால் சந்தேகம் பரவ தொடங்கியுள்ளது.
ஹரி பிரசாத் ஆந்திராவை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் ‘விட்டா’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். இவரும் அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவரும், பிறருடைய கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ரகசியங்களை அம்பலப்படுத்தும் நெதர்லாந்து ஜித்தர் ஒருத்தரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர். நோக்கம்: இந்திய ELECTRONIC VOTING மிஷினில் மோசடி செய்யமுடியும் என நிரூபிப்பது.
பல நாடுகளில் நீண்டநாள் முன்பே ELECTRONIC VOTING MACHINE அறிமுகமானது. குளறுபடிகள், தில்லுமுல்லுகள் நடந்ததால் அதை ஓரங்கட்டிவிட்டு ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பி விட்டனர். அல்லது, இவிஎம்மோடு ஓட்டுச்சீட்டும் வைத்திருக்கிறார்கள். புகார்கள் வந்தால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்ற கோஷத்துடன் இந்தியா இவிஎம்முக்கு மாறியபோது உலகமே திரும்பி பார்த்தது. செலவில்லாத சிறிய எந்திரம். இணைப்புகள் ஏதுமில்லை. சாதா பேட்டரியில் இயங்கும். பெரிய புரோகிராம் எதுவும் கிடையாது. தில்லுமுல்லு செய்ய வாய்ப்பில்லை.
வாய்ப்பு இருக்கிறது என அடித்துச் சொன்ன கட்சிகளுக்கு அதை நிரூபிக்க வாய்ப்பளித்தது தேர்தல் கமிஷன். யாராலும் முடியவில்லை. இன்று 13 லட்சம் இவிஎம்களுடன் மின்னணு வாக்குப்பதிவில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா.
இந்த பின்னணியில் பரபரப்பாக டெமோ கொடுத்துள்ளார் ஹரி. அதில் அவர் பயன்படுத்திய இவிஎம் மும்பை அரசு குடோனில் திருடப்பட்டது என தேர்தல் கமிஷன் புகார் கொடுக்க, ஹரி கைதானார். ஒரு எந்திரத்தை திறக்க முடிந்தால் உள்ளிருக்கும் எதையும் மாற்ற முடியும். திறக்கவே வாய்ப்பில்லாத சூழலில் தில்லுமுல்லு சாத்தியமில்லை.
ஹரியை விடுவித்து, சர்வகட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் டெமோ கொடுக்கவும் அதை பொதுமக்கள் பார்க்க நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்பவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். நேர்மை எப்போதும் சோதனைகளுக்கு அஞ்சுவதில்லை.

ஒருவேளை சாப்பாட்டுக்கு 3 நாள் காத்திருப்பு

 ரேஷன் கடையில் ஆரம்பித்து மத்திய, மாநில அரசுகளின் குடோன்கள் வரையில் மழை காலத்தில் தண்ணீர் புகுந்து அரிசி, கோதுமை மூட்டைகள் சொட்டச் சொட்ட நனைந்து வீணாகும் அனுபவம் நமக்கு புதிதல்ல. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏழைகள் சோறு கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அரசு கிடங்குகளில் உணவு தானியங்கள் வீணாகின்றன என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2 வாரம் முன்பு இதை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ‘உணவுக் கழக குடோன்களில் சேமித்துவைக்க போதுமான இடம் இல்லாததால் ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் கெட்டுப் போவது வேதனையாக இருக்கிறது. இடம் இல்லாமல் அழுகிப்போகிறது என்றால், எதற்காக குடோன்களிலேயே வைத்திருக்கிறீர்கள்? பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு அதை சும்மா கொடுக்காலாமே’ என்று கேட்டு அரசுகள் முதல் அதிகாரிகள் வரையில் ஒரு பிடி பிடித்தனர் நீதிபதிகள். பெரிய குடோன் கட்டுங்கள். ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் தாராளமாக கிடைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காமல் ஒரு கிராமமே திண்டாடுகிறது என்பதும் சாப்பாட்டுக்காக அந்த கிராமத்தில் பலரும் கோதுமை திருடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலத்தில் மலை ஜாதியினர் வசிக்கும் மீராப்பூர் கிராமம்தான் அது. கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என எதுவுமே இங்கு இல்லை.
படிப்பறிவு இல்லாததால் வேலை கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். அப்படியே வேலை பார்த்தாலும் சொற்ப வருமானம்தான். 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு 6 சப்பாத்தி தயாரிக்க மட்டுமே கூலி போதுமானதாக உள்ளது. அரசு கிடங்குகளிலும் கடைகளிலும் கோதுமை திருடி கைதாகும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கின்றன.
ஊரின் நிலைமை பற்றி ஒரு பெண் கூறுகையில், “குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. கணவனுக்கு மட்டும், அதுவும் சில நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. கூலியும் குறைவாகவே தருகிறார்கள். அவர் கொண்டு வரும் பணம் சமைக்கக்கூட போதவில்லை. 3 நாட்களுக்கு ஒருமுறைதான் சாப்பிட முடிகிறது. இன்று மதிய உணவு சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்துதான் மதிய உணவு சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு சோறுகூட தர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என்றார்.

சிரிப்பு போலீஸ்

 ஹாங்காங்கில் இருந்து மணிலாவுக்கு சுற்றுலா சென்ற எட்டு சீனர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். உபயம்: பிலிப்பைன்ஸ் போலீஸ்.
மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு போலீஸ்காரர் டிஸ்மிஸ் ஆனார். மீண்டும் வேலை கேட்டார். தராவிட்டால் சுற்றுலா பயணிகளை சுட்டுத் தள்ளுவேன் என்று சொல்லி, அவர்கள் சென்ற பஸ்ஸை துப்பாக்கி முனையில் கடத்தி சாலையின் குறுக்கே நிறுத்தினார். தகவல் தெரிந்து டெலிவிஷன் செய்திக்குழுக்கள் திரண்டன. போலீஸ் தடுக்காததால், மும்பையில் நாம் பார்த்ததை போன்ற நேரடி ஒளிபரப்பு ஆரம்பமானது.
கடத்தல்காரனின் தம்பி வந்தார். அவரும் போலீஸ். துப்பாக்கி வைத்திருந்தார். தம்பிக்கு உதவ வந்திருப்பதாக அவரை தள்ளிக் கொண்டு போனது போலீஸ். இதை டீவியில் பார்த்த கடத்தல்காரன் ஆத்திரம் அடைந்து சில பயணிகளை சுட்டார். அதிரடிப்படை வந்தது. பஸ் உள்ளே எப்படி நுழைவது? கோடரியால் வெட்டினர். ஜன்னல் கண்ணாடியில் கீறல்தான் மிச்சம். சிரமப்பட்டு துளை போட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து காத்துக் கொள்ள முகமூடி இல்லாததால் உள்ளே நுழையவில்லை. குண்டு துளைக்காத ஜாக்கெட் இல்லாததால் எவருக்கும் துணிச்சல் வரவில்லை.
எல்லா பயணிகளையும் கடத்தல்காரன் கொன்றபின், போலீஸ் சரமாரியாக சுட்டதில் ஒரு குண்டு பாய்ந்து கடத்தல்காரன் காலி. அது தெரியாமல் காத்திருந்தனர். 11 மணி நேரம் ஆனபின் வருவது வரட்டும் என பஸ்ஸுக்குள் புகுந்தபோது சடலங்கள்தான் கிடந்தன.
வெட்கக்கேடு என்று நாடே குமுறுகிறது. சிரிப்பு போலீஸ் என்று மீடியா கிண்டலடிக்கிறது. பிலிப்பைன்ஸ் போலீஸ் ஊழலுக்கு பிரசித்தம். சம்பாதிக்கலாம் என்பதால் பணம் கொடுத்து சேர்கின்றனர். வளமான இடத்தில் போஸ்டிங் வாங்க மீண்டும் லஞ்சம். வழக்கில் சிக்காமலிருக்க தொடர்ந்து லஞ்சம். அரசியல்வாதிகள் தில்லுமுல்லுக்கு துணை நின்று பதவியை தக்க வைப்பது. இதுதான் நடைமுறை. இதற்கு முடிவு கட்ட பல குழுக்கள் போராடுகின்றன.
சட்டம் ஒழுங்கை பராமரித்து பொதுமக்களை காக்க உருவான அமைப்பை அடியாள் பாசறையாக மாற்றினால் அதற்கான விலையை கொடுத்துதானே ஆகவேண்டும். அது அப்பாவி உயிர்களாக அமைவதுதான் துரதிர்ஷ்டம்.

Wednesday, August 25, 2010

சூப்பர் பக் வைரஸ் - ஓர் அலசல்

 அலெக்சாண்டர் பிளெமிங்  82 ஆண்டுக்கு முன் இவர் பென்சிலின் என்ற உன்னதமான மருந்தை கண்டுபிடித்தார். உடலில் பாக்டீரியா தொற்றுவதால் ஏற்படக்கூடிய கோளாறுகளை தடுக்கும் வல்லமை படைத்த முதல் ஆன்டிபயாடிக் மருந்து இது தான்.
அதன் பின் தான், பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள், ஏகப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடித்து சந்தையில் குவித்தனர். எந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் நல்லது செய்வதாக நாம் நினைத்தோமோ, அந்த மருந்துகள் தான் ஆபத்தானதாக உருவெடுத்துள்ளன.
அறுபதாண்டுகளில் வயிற்று வலி முதல் மூளை பாதிப்பு வரை உள்ள பல கோளாறுகளை தீர்க்க பல ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்து விட்டன. ஆனால், ஆன்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாமல் பல தொற்றுக்கிருமிகள் உள்ளன என்பதை 16 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
‘சூப்பர் பக்’ கிருமிக்கு அண்ணன்களை கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தபடி தான் உள்ளனர். , முதன் முறையாக அமெரிக்காவில் ராக்பெல்லர் பல்கலைக்கழக மைக்ரோபயாலஜிஸ்ட் அலெக்சாண்டர் டோமஸ்,‘ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கே கட்டுப்படாத பல பாக்டீரியா கிருமிகள் உள்ளன’ என்று பட்டியலிட்டிருந்தார்.
இப்படி 16 ஆண்டாக நீடித்த சூப்பர் பக் சர்ச்சை இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த சூப்பர் பக் கிருமிக்கு புதுடெல்லி கிருமி என்றும் பிரிட்டன் லொள்ளு விஞ்ஞானிகள் பெயர் வைத்து விட்டனர்.
இந்தியாவில் சிகிச்சை பெற்று திரும்பிய வெளிநாட்டவர் சிலருக்கு சூப்பர் பக் தொற்றியுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் அவர்களை தொற்றியது ‘ஸ்டபிலோகோகஸ் ஆரஸ்’ பாக்டீரியா என்ற கிருமி தான்.
உலகம் முழுவதும், மனிதன், பிராணிகள், விலங்குகள் மூலமாக பரவி உள்ள 3 ஆயிரம் பாக்டீரியா தொகுப்புகளில் ஒன்று தான் இது. அப்படியிருக்க, இந்தியாவில் இருந்து தான் ஆரம்பித்தது என்று கூறியிருப்பது ‘முட்டாள் தனம்’ என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டனர் என்பது திருப்தியளிக்கும் விஷயம். 
சமீபகாலமாக
கூப்பாடு போட்ட ‘சூப்பர் பக்’ கிருமி, முதலில், இந்தியா சென்று திரும்பிய ஒரு ஆஸ்திரேலியரை தொற்றியது என்று அந்த நாடு கூறியது.
அடுத்து, பிரிட்டன் தான் அதிக லபோதிபோ போட்டது. ‘எங்கள் நாட்டை சேர்ந்த 37 பேர் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சையின் போது தான் ‘சூப்பர் பக்’ தொற்றியது’ என்று அலறியது. ஆனால், கடந்தாண்டே, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு பயணி, இந்தியா வந்தபோது அவருக்கு இந்த கிருமி தொற்றியது. மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அப்போதே, கிருமி தொற்றியது குறித்து தகவல் வெளியிட்டனர். அப்போதெல்லாம் இந்த சூப்பர் பக் கூப்பாடு ஆரம்பிக்கவில்லை.
ஆனால், பிரிட்டனில் இருந்து லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளிவந்ததும் தான் இதில் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் நிபுணர்கள் தான் வீண் பழியை இந்தியா மீது தொடர்ந்து போட்டபடி இருந்தனர்.
போதாக்குறைக்கு இந்த கிருமிக்கு, ‘நியூடெல்லி மெடல்லோ லாக்டோமஸ்’ என்றும் பெயர் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் உடலை அழகுபடுத்தும் சிகிச்சை செய்து கொண்டவர்கள். 
கார்த்திகேயன்
குமாரசாமி; தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஏ.எல்.முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மாணவர். இவரும், பிரிட்டனை சேர்ந்த திமோதி வால்ஷ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து தான் ‘சூப்பர் பக்’ தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை தயார் செய்தனர்.
ஆனால், அதை திருத்தி லான்செட் வெளியிட்டுள்ளது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. ‘சூப்பர் பக் என்று சொன்னாலும் சரி, நியூடெல்லி பாக்டீரியா என்று சொன்னாலும் சரி, எதற்கும் கவலைப்பட வேண்டாம். இந்த பாக்டீரியா ஒரு பெரிய விஷயமே இல்லை. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பன்றிக்காய்ச்சல் வைரசை விட, இது ஒன்றும் ஆபத்தானது அல்ல’ என்றும் அடித்துக்கூறினார்.
ஆய்வு கட்டுரை வெளியானதும், மத்திய சுகாதார அமைச்சகம் கடும் கொதிப்படைந்தது. ‘எந்த ஆதாரமும் இல்லாமல், ஆவணங்களும் இல்லாமல் இப்படி பொதுவாக குற்றம்சாட்டுவது அழகல்ல; அதுவும் விஞ்ஞானிகள் இப்படி செய்வது வேதனையானது. மற்ற நாடுகளில் எல்லாம் சோதனைகளை செய்த பின்னர், அதை ஒப்பிட்டுப்பார்த்துத்தானே ஒரு நாட்டை குற்றம் சாட்ட முடியும். அப்படியில்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சொல்லலாம்’ என்று அமைச்சகம் பதிலடி கொடுத்தது. 
காலையில்
       அட்வைஸ்: எழுந்ததும் பெட் காபி; அடுத்து, பேப்பர் படித்துக்கொண்டே சிற்றுண்டி; அப்படியே டிவி ரிமோட்டுக்கு ஒரு தாவல். அதற்குள் ஏகப்பட்ட முறை ட்ரிங்...ட்ரிங்... இப்படி ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே பல முறை பல பொருட்களை தொட்டு விடுகிறோம். இவற்றில் எல்லாம் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரியுமா?
இதுவரை வெளியில் தெரியாமல் நம்முள் பல பாக்டீரியாக்கள் வலம் வந்தன. இப்போது வியாபார போட்டி அதிகமாகி விட்டது. பயமுறுத்தினால் அடுத்தடுத்து ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்பனை ஆகும் என்பதால் சூப்பர் பக் பிரசாரம் தலைதூக்கி உள்ளது. இது ஒரு ஆரம்பம் தான்; அடுத்தடுத்து பக்...பக் வரத்தான் போகிறது.

புகை பிடித்தால் தாம்பத்ய உறவு பாதிக்கும்

 புகை பிடிப்பதால் தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தாம்பத்ய குறைபாடுக்கும் புகை பிடிப்பதற்கு உள்ள தொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி நடத்தியது. தாம்பத்ய உறவு கொள்வதில் சிக்கலை சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700 ஆண்கள் ஆய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் 3 ஆண்டுகள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டன. தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவு, ஆர்வம் இருந்தாலும் ஈடுபட முடியாமை ஆகிய பிரச்னைகளில் தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே சிகிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர். புகை பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர்.
விரைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சை பெற்றவர்களில் புகை பழக்கம் இருந்தவர்கள் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக தெரிவித்தனர். இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோபியா சான் கூறுகையில், “சீனா, ஆசிய நாடுகளில் விரைப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம் உள்ள பிரச்னை. இதில் பெரும்பாலோர் புகைபிடிப்பதே காரணம்” என்றார்.
பேராசிரியர் லாம் தாய் ஹிங் கூறுகையில், “புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் நோய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்ய குறைபாடுகளும் ஏற்படும்” என்றார்.

Monday, August 23, 2010

எடுப்பான மார்புக்கு சோயாபீன்ஸ் சாப்பிடு

சோயா பீன்ஸில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜென், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன என உணவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் முன்னழகு எடுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள். உலகமெங்கும் கோடிக்கணக்கான பெண்கள், தங்களுடைய முன்னழகை வனப்பாக்க விரும்புகிறார்களாம். பொதுவாக பெண்மையின் அடையாளங்களை பெரிதாக்கிக் கொள்ள காஸ்ட்லியான வழிமுறைகளும், ரிஸ்க்கான ஆபரேஷன்களுமே இருந்த நிலையில் எளிய மாற்று வழியை சொல்கிறார்கள் உணவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள்.
பெண்களின் மார்பக வளர்ச்சியில் ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் ஹார்மோனான ‘ஈஸ்ட்ரோஜன்’ இயற்கையிலேயே நன்றாக சுரக்கும் பெண்களுக்கு, நளினமான உடல் வாய்த்து விடுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் பிரச்சனைகளால் முன்னழகிலும் சறுக்கல் ஏற்படுகிறது.
பெண்கள் வயதுக்கு வரும்போது, இந்த ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் உடலெங்கும் பரவி அவர்களை பூரிப்பாக்கும். மாத விடாய் சுழற்சியையும் தொடங்கி வைத்து பெண்மைக்கேயுரிய நெளிவுசுளிவுகளை கொடுக்கும். பொதுவாக 12 முதல் 16 வயது வரையிலான பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் உடலில் அதிகம் சுரக்கிறது. மாதவிடாய் முடியும் காலத்தில் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடும்.
மார்பகங்களை வனப்பாக்குவதில் ‘ஈஸ்ட்ரோஜன்’ முக்கிய பங்காற்றுவதால் அதை உடலில் பெருக்கினாலே முன்னழகு பிரச்னை தீர்ந்து விடும். ‘ஈஸ்ட்ரோஜன்‘ ஹார்மோனை பெருக்க செயற்கை வழிகள் இருந்தாலும், ஆபத்தில்லாத இயற்கை வழியும் உள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள்.
சில தாவர உணவுகளில் இயற்கையாகவே ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் இருப்பதால் அவற்றை சாப்பாட்டாலே போதுமாம். பைட்டோ ஈஸ்ட்ரோஜன் எனும் இந்த தாவர ஹார்மோன் சோயா பீன்ஸ்சில் அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிடும் போது ஈஸ்ட்ரோஜன் இயற்கை யாகவே உடலுக்கு கிடைத்து விடுகிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். எனவே சோயா பீன்ஸில் தயாராகும் மீல் மேக்கர், டோபு (சோயா பாலில் தயாராகும் பனீர்) போன்ற உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும். ஈஸ்ட்ரோஜன் உடலில் பெருகும் போது மார்பகங்களும் தன்னாலே வனப்பாகி விடுகின்றனவாம்.
மாறி வரும் வாழ்க்கை முறைகளால் பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் கூட ‘ஈஸ்ட்ரோஜன்’ சுரப்பில் பிரச்னை வரலாம் என்றும் கூறுகிறார்கள்.

காண்டம் காலை வாருவது ஏன்?

 கருத்தடை சாதனம் ஆணுறையை பலர் முறையாக பயன்படுத்தாததால், அது 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதில்லை என்கின்றனர் டாக்டர்கள்.
கருத்தடை மற்றும் பாலியல் நோய்களை தடுப்பதில் காண்டம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அதை பலர் சரியான முறையில் உபயோகிக்காததால், 100 சதவீத வெற்றி கிடைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக பல டிப்ஸ்களை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். மெடிக்கல் ஷாப்பில் இருந்து காண்டம் பாக்கெட்டை வாங்கிச் சென்றவுடன், அதை ‘கார் டேஷ்போர்டு’ மற்றும் இரு சக்கர வாகனங்களின் பவுச் மற்றும் பெட்டிகளில் வைக்கக் கூடாது. இது தவறு. வாகனத்தில் இருக்கும் சூடு ஆணுறையின் மெல்லிய லேட்டக்ஸ் ரப்பரை பாதிக்கும். இதனால் அதை உபயோகிக்கும் போது கிழிந்து விடுகிறது.
விரல்களின் நகமும், ஆணுறையில் எளிதில் ஓட்டை போட்டு விடுமாம். எனவே, காண்டம் உபயோகிப்போர் விரல் நகம் அதிகம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கெட்டை பல் மற்றும் கூர்மையான பொருட்களால் கிழித்தாலும், காண்டம் பாதிப்படையும்.
சிலர் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு காண்டம்களை ஒரே நேரத்தில் மாட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. இரண்டு காண்டம் உபயோகித்தால், அது நழுவுவதற்கும், கிழிவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒன்றை மட்டுமே உபயோகிக்க வேண்டும், அதை சரியாக உபயோகிக்க வேண்டும். காண்டம் அணிய ‘பார்ட்னர்’ உதவியை நாடினால், அதை உபயோகிக்கும் வழிமுறைகளை அவருக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நுனிப் பகுதியில் காற்றுக் குமிழ்கள் புகுந்து ஆணுறையை சேதமாக்கிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

Saturday, August 21, 2010

ஆபீசரு பண்ற செக்ஸ் டார்ச்சர் தாங்கலப்பா

 அலுவலகத்தில் அதிகாரிகள் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக இந்தியாவில் 26 சதவீதம் பேர் கூறுகின்றனர் என்கிறது ஒரு சர்வதேச சர்வே.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது ‘இப்சாஸ்’ ஆய்வு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்ரிக்கா உள்பட 24 நாடுகளில் 12,000 பேரிடம் இந்த நிறுவனமும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இணைந்து ஒரு சர்வே நடத்தின. பணியிடத்தில் உயரதிகாரிகளால் செக்ஸ் உள்பட பல்வேறு வகைகளில் டார்ச்சர் செய்யப்படுவது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தியாவில்தான் இந்த டார்ச்சர் அதிகம் என்பதுதான் சர்வேயில் தெரியவந்துள்ள பகீர் தகவல்.
இதுதொடர்பாக இப்சாஸ் நிறுவன அதிகாரி ஜான் ரைட் கூறியதாவது:
பணியிடத்தில் அதிகாரிகளால் செக்ஸ் டார்ச்சர் அனுபவிப்பதாக கூறுவது இந்தியாவில்தான் அதிகம். உயரதிகாரிகள் தங்களை செக்ஸ் டார்ச்சர் செய்வதாக இந்தியாவில் 26% ஊழியர்கள் கூறுகின்றனர். அடுத்த இடத்தில் சீனா. அங்கு 18 சதவீத ஊழியர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் சவுதி(16%), மெக்சிகோ (13%), தென்ஆப்ரிக்கா (10%), இத்தாலி (9%) ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், ரஷ்யா, தென்கொரியாவில் 8 சதவீத ஊழியர்கள் டார்ச்சருக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலை இல்லை. ஸ்வீடன், பிரான்ஸ் நாடுகளில் மிகமிக குறைவாக, அதாவது 3 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் செக்ஸ் தொந்தரவுகளை எதிர்கொள்கின்றனர். இங்கிலாந்து (4%), ஜெர்மனியிலும் (5%) இது குறைவாகவே உள்ளது.
ஊழியர்களுக்கு அதிகாரிகள் செக்ஸ் டார்ச்சர் தரும் போக்கு கடந்த காலத்தைவிட தற்போது அதிகரித்துள்ளது. அதிலும் 35 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள்தான் அதிக செக்ஸ் டார்ச்சர்களை சந்திக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், அடித்து உதைத்து சித்ரவதை செய்வது, அறைவது, குத்துவது என உடல்ரீதியான டார்ச்சர்களை 7% பேர் அனுபவிக்கின்றனர்.

காதலுக்கு கண் இல்லை

 காதலுக்கு கண் கிடையாது என்பது உண்மைதான். அழகு மட்டும் பார்த்து வருவதில்லை காதல் என்பதற்காக சொன்ன வார்த்தை இது. ஆனால் பார்க்காமலேயே இன்டர்நெட் மூலம் பழகி, காதலாகி, கசிந்துருகி கடைசியில் தற்கொலை வரை போய்விட்டது திருச்சியை சேர்ந்த இளம்பெண்ணின் காதல்.
மூத்த பெண் காதலித்து மணந்த கோபத்தில் இருக்கும் தந்தைக்கு, இரண்டாவது மகளும் காதலிப்பது தெரியவர குடும்பத்தையே கைவிட்டு போய் விடுகிறார். ஆதரவற்ற அம்மாவும் பெண்ணும் கோவைக்கு சென்று தனியாக வாழ்கின்றனர். வீட்டிலேயே கம்ப்யூட்டர் வைத்து ஜாப் ஒர்க் செய்து கொடுக்கிறார் பெண். இதற்காக அடிக்கடி இன்டர்நெட் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போது அறிமுகம் ஆன வாலிபருடன் பார்க்காமலேயே காதல் ஏற்படுகிறது. மணிக் கணக்கில் இருவரும் சாட் செய்து மகிழ்ந்துள்ளனர். தாயும் இந்தக் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, இரவும் பகலும் பேசி காதலை வளர்த்துள்ளனர். கல்யாணக் கனவில் மிதந்தவருக்கு திடீரென அதிர்ச்சி. பெற்றோர் சம்மதிக்காததால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என இன்டர்நெட் காதலன் மறுத்து தொடர்பை துண்டிக்கவும் வாழ்க்கையே வெறுத்துப் போகிறது அந்தப் பெண்ணுக்கு. காதல் தோல்வியை தாயிடம் சொல்ல இருவரும் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இனி தற்கொலைதான் ஒரே முடிவு என கை நரம்பை வெட்டி தற்கொலைக்கு முயல்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் உயிர் போகாததால், காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். காஸ் வெடித்து உடலில் தீ பரவி துடித்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காதல் படுத்திய பாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் இருவரும்.
தந்தை இல்லாத குடும்பத்தில் ஆதரவில்லாத நிலையில், இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் திருமணம் என்ற அளவுக்கு போனதால் மிகுந்த நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. பார்த்து பழகிய காதலே பறந்து போய்விடும்போது, பார்க்காத காதல் எத்தனை நாளைக்கு வரும்? ஒரு நாள் அதுவும் பணால் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் வாழ்க்கையே சூன்யமாகி விட்டதாக நினைத்த தாயும் மகளும் தற்கொலையை தேர்வு செய்துள்ளனர். தங்கள் தற்கொலைக்கு காரணமாக இன்டர்நெட் காதலன், காதலுக்கு உதவாத அக்கா, அவரது கணவர் என 20 பேர் பெயரையும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர். குடும்பம் சிதையும் போது, குணமும் சிதையும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Friday, August 20, 2010

கணக்கு படித்தால் கை நிறைய சம்பளம்

ஒரு காலத்தில் கணக்கு என்றாலே மாணவர்கள் காத தூரம் ஓடியதுண்டு. இன்று நிலைமை தலைகீழ். ‘சென்டம்’ எடுப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில்தான் அதிகம். வேலை வாய்ப்பில் அதிக வருமானம் பார்ப்பது யார் என்பது பற்றி சுமார் 200 துறைகளில் பணிபுரியும் அலுவலர்களிடம் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியது அமெரிக்கா. சர்வதேச சாதனையாளர்கள், அவர்கள் சாதனை புரிந்த துறை மற்றும் அதிக வருமானம் பார்த்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்தியுள்ளவர்களில் 6 பேர் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், இன்சூரன்ஸ், நிதி சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள், புள்ளி விவர கணக்காளர், கணக்கர்.
கணக்கு துறையை சேர்ந்தவர்கள் பட்டியலை ஆக்கிரமித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்கள் வாங்கும் சம்பளம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இவர்கள் அனைவருமே அறிவியல் துறையில் விருப்பமாக இருந்து, பின்னர் வேலைக்காக படிப்படியாக கணக்கில் தங்களை வளர்த்துக் கொண்டு உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கு வல்லுநர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்கு (ஐசிஎம்&2010)ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் சாதனை படைத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2 முறை சர்வதேச விருதுகளை வென்ற மாசாசூசெட் தொழில்நுட்பக் கழக சாப்ட்வேர் இன்ஜினியர் மதுசூதன் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கணக்கு தான்’ என்கிறார். கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடிப்படையே அல்ஜீப்ரா, ப்ராபபிலிட்டி தியரி. இவை கணக்குடன் தொடர்புடையதுதான் என்கிறார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் கணக்கியல் வல்லுநர்கள் பங்கேற்றுள்ள இந்த கருத்தரங்கில், முதல்முறையாக 300 பெண் கணக்கியல் வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர் என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

அமெரிக்க இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு காது ரிப்பேராம்

 அமெரிக்க இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். பெற்றோர் இந்த செய்தி பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
ஐபாட், எம்பி3 கருவிகளை காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் கேட்பதுதான் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த போர்ட்டபிள் சாதனங்களால் செவித்திறன் பாதிக்கப்படுவதாக இதுவரை ஆய்வுகள் கூறவில்லை; வெறும் சந்தேகம் மட்டும் கிளப்பின. இப்போது நடந்திருப்பது விரிவான நீண்டகால ஆய்வு. கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது ரிப்பேராம்.
ஒலி அளவு 85 டெசிபலுக்கு மேல் போனால் செவித்திறன் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இயர்ஃபோன் மூலம் காதுக்குள் செல்லும் ஒலிதான் என்றில்லை; ஆரன் அடிப்பது, கட்டடம் இடிப்பது, சுவரில் துளை போடுவது, தெருநாய் குரைப்பது என்று பல வழிகளில் காது பாதிக்கலாம். என்றாலும் 12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களின் வருகைக்கு பிறகுதான். அவர்கள் மெல்லிசை கேட்பதில்லை. ராக், பாப், ஜாஸ் என்று உச்சத்தில் ஒலிக்கும் இசை. இதனால் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு நிரந்தரமானது என்பது இவர்களுக்கும் தெரியாது, பெற்றோரும் உணர்வதில்லை.
கணக்கில்லாத பாடல்களை பதிவு செய்து கேட்கக்கூடிய எம்பி3 சாதனங்களில், ஒலியின் அளவை அறியும் வசதியை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தருவதில்லை. இந்த நிலையில் பெற்றோர் எப்படி உதவ முடியும்? மூன்றடி தள்ளி நின்றாலும் பாட்டு கேட்கிறது என்றால் அது அபாய ஒலி என்று குறைக்க சொல்லலாம். இண்டிகேட்டர் இல்லாவிட்டால், முழு வால்யூமுக்கு ஏற்றி அதில் பாதியாக குறைத்து கேட்க சொல்லலாம். அரை மணிக்கு ஒரு சிறிய இடைவெளி விட்டு காதுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
பார்வை இழப்பைவிட செவித்திறன் குறைவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்க அரசு இதற்காக பிரசார இயக்கம் நடத்த திட்டமிடுகிறது. செல்போன் இசையில் மூழ்கும் இந்திய இளைஞர்களுக்கும் இது அபாயச் சங்கு.

Thursday, August 19, 2010

வரலட்சுமி நோன்பு

 நாளை வரலட்சுமி நோன்பு,இது பற்றி தெரிந்து கொள்வோம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இது அனுபவ உண்மையும்கூட. இந்து மதத்தில் தெய்வங்களுக்காக கடைபிடிக்கப்படும் பல்வேறு விரதங்களும், பூஜைகளும், வழிபாடுகளும் பிரசித்தம். அந்த வகையில் லட்சுமி தேவியை வழிபடுவதற்காக ஏற்பட்ட பூஜையே ஸ்ரீவரலட்சுமி விரதம். பெண்கள், நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டி மாங்கல்ய பலம் அருளும் மகாலட்சுமியை வணங்கி நோன்பு இருந்து வழிபாடு செய்வதே இந்த நாளின் சிறப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரத பூஜை வருகிறது. பாரத நாட்டின் வடக்கே குண்டினபுரம் என்ற கிராமம் (இன்றைய பீகார்) இருந்தது. இந்த ஊரில் வசித்த சாருமதி என்ற பக்தை, கணவனுக்கும் மாமியார், மாமனாருக்கும் உள்ளன்போடு சகல சேவைகளையும் செய்து வந்தாள். வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதிர்ந்து பேசாமல், எல்லாவற்றையும் பொறுமையாக அணுகி சமாளித்து குடும்பம் நடத்தினாள். ஆனாலும் வீட்டில் ஏழ்மை நிலையும், நோய், நொடிகளும், பற்றாக்குறையான வாழ்க்கையே தொடர்ந்தது. எந்த நிலையிலும் மனம் தளராமல் பொறுமையை கடைபிடித்தாள்.
அவளது பக்தி, சேவை, பொறுமையை கண்டு மனமிரங்கிய லட்சுமிதேவி, சாருமதியின் கனவில் தோன்றி, ‘உன் பொறுமைக்கு பரிசளிக்க வந்துள்ளேன். என்னைக் குறித்து விரதம் இருந்து பூஜை செய்தால் சகல பாக்கியங்களையும் அருள்வேன்’ என வரம் தந்து மறைந்தாள். லட்சுமிதேவி சொன்னபடியே சாருமதி விரதம் இருந்து பூஜை செய்து, வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்றாள். அவள் விரதம் இருந்த நாளே வரலட்சுமி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
எப்படி பூஜை செய்வது: இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து, வண்ணக் கோலமிட வேண்டும். மனையில் லட்சுமி படம் அல்லது வெள்ளி லட்சுமி முக உருவத்தை வைத்து மாலை, கதம்ப பூக்கள், தாழம்பூ போன்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். கலசம் வைத்து ஏலக்காய், பச்சை கற்பூரம், அபிஷேக திரவியங்கள் கலந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கலசத்தில் ஊற்றி, அதன்மேல் தேங்காய் வைத்து மாவிலை, மாலை போட்டு வைக்கலாம் அல்லது கலசத்துக்குள் அரிசி, பருப்பு நிரப்பி வைத்தும் பூஜை செய்யலாம்.
பூஜை முறையை பொறுத்தவரை அவரவர் குடும்ப வழக்கப்படி செய்துகொள்ளலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்தியம் படைத்து, கும்பத்தில் மஞ்சள் கயிறுகள் வைத்து லட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். அதன்பிறகு தீபாராதனை காட்டி பூஜைக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜையில் வைத்த மஞ்சள் கயிற்றை தானும் கட்டிக்கொண்டு, மற்ற பெண்களுக்கும் கட்டிவிட வேண்டும். பூஜை முடிந்ததும் லட்சுமிதேவியை குறித்து 108 நாமாவளி சொல்லலாம் அல்லது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். லட்சுமி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
லட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பலம் கூடும். சர்வ மங்களமும், நீண்ட ஆயுள், புகழ், கீர்த்தி, செல்வம், செல்வாக்கு பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.
இந்த பூஜையை சிரத்தையுடன் செய்பவர்களுக்கு ஜாதகத்தில் உள்ள சுக்கிர கிரக நீச்ச தோஷமும், களத்திர தோஷமும் விலகும். திருமண தடை நீங்கும். கணவன், மனைவிடையே உள்ள மனவேற்றுமைகள் மறையும். பலம் வாய்ந்த சுக்கிர திசை நடப்பவர்களுக்கும், யோக சுக்கிரன் அமையப் பெற்றவர்களுக்கும் சகல செல்வ சுகபோகங்கள் கிடைக்கும்.

தொடரும் மாணவர்களுக்கு எதிரான ஆசிரியர்களின் வன்முறை

 ஒரேநாளில் இரண்டு சம்பவம். ஒன்று லேட்டாக வந்த மாணவியின் கையில் ஆசிரியை அடித்ததில் கை அழுகிப் போனது. இரண்டாவது சம்பவம் லைட்டர் வைத்திருந்த மாணவனை சிகரெட் குடித்தாயா என ஆசிரியர்கள் சந்தேகப்பட்டு புகார் சொன்னதால் மாணவன் தீக்குளித்து இறந்தது. இரண்டுமே ஆசிரியர்கள் மீது இருக்கும் மரியாதையை கெடுப்பதாக உள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை. தந்தை இல்லாத ஏழைச் சிறுமி, மகளிர் பள்ளி விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்புக்கு தாமதமாக வந்ததால் கோபமான ஆசிரியை பிரம்பால் அடிக்க கையில் காயம் ஏற்படுகிறது. இரண்டு வாரம் கழித்து அதே காரணத்துக்காக மீண்டும் அதே இடத்தில் அதே ஆசிரியை அடிக்க ரத்தக்கட்டு ஏற்பட்டு, சரியாக கவனிக்காததால் கையே அழுகிப் போய்விட்டது. படிக்கப் போன சிறுமிக்கு ஆசிரியையின் ஆத்திரத்தால் கை அழுகிப்போய் எதிர்காலமே துன்பமாகிப் போனது.
கும்பகோணத்தை அடுத்த சிறிய கிராமம் பாலையூர். தந்தைக்கு வெளிநாட்டில் வேலை. தாத்தா வீட்டில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வருகிறான் மாணவன். மாணவர்கள் யாரிடமாவது செல்போன் இருக்கிறதா என பள்ளியில் நடந்த திடீர் சோதனையில் அந்த மாணவனிடம் சிகரெட் பற்றவைக்கும் லைட்டர் இருக்கிறது. சோதனைக் கூடத்தில் தேவைப்படும் என்பதற்காகத்தான் வைத்திருந்தேன் என விளக்கம் சொல்லியிருக்கிறான் அந்தப் பையன். ஆனால் அதை காதில் வாங்காமல் சிகரெட் குடித்ததாக மாணவனிடம் எழுதி வாங்கிக் கொண்டு, பெஞ்ச் மீது நிற்கவைத்துள்ளனர். அதோடு, மறுநாள் வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். நான் சிகரெட் குடிக்க மாட்டேன் என எவ்வளவோ மறுத்திருக்கிறான் மாணவன். நம்பவே இல்லை ஆசிரியர்கள். வெறுத்துப் போன மாணவன் வீட்டுக்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துவிட்டான். பதறிப்போன ஆசிரியர்கள் மருத்துவமனை சென்று பார்த்திருக்கிறார்கள். இப்பவாது என்னை நம்புங்க சார், நான் சிகரெட் குடிக்க மாட்டேன் என மாணவன் கதற, கண்கலங்கியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். சிறிது நேரத்தில் இறந்துவிட்டான் மாணவன்.
கோபம், அவநம்பிக்கை இரண்டும் அடுத்தவரை உயிரோடு கொல்லும் ஆயுதங்கள். மாணவன் , ஆசிரியர் இடையேயான உறவு இந்த இரண்டையும் கடந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாததால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது.

ஒரு பெக் விஸ்கி போட்டால் கார் ஓடும்

 இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது:
இந்த பயோ ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது.
5 &10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும்.
விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும் என்றார்.

Wednesday, August 18, 2010

பாதுகாப்பு அலட்சியம்

 தங்கம் காணாமல் போகும். பணம் காணாமல் போகும். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் துப்பாக்கி காணாமல் போகும். முதன்முறையாக 61 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 370 டன் வெடிபொருள் காணாமல் போயிருக்கிறது.
அண்மையில், ராஜஸ்தானில் வேலை நேரம் முடிவதற்குள் வரவில்லை எனக் கூறி தாமதமாக வந்த ரூ.93 கோடி வங்கிப் பணம் வைக்கப்பட்டிருந்த வேனை உள்ளே விடாமல் வெளியே அனுப்பினர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள். நள்ளிரவு வரை நடு ரோட்டில் நின்றது அந்த வேன். உயர் அதிகாரிகள் பேசியபிறகே அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர் வங்கி ஊழியர்கள். நள்ளிரவில் நடு ரோட்டில் 93 கோடி இருப்பது தெரிந்திருந்தால் நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு கொண்டாட்டமாய் போயிருக்கும். நல்லவேளை தெரியவில்லை. இதைவிட மோசமான சம்பவம் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் காணாமல் போயிருப்பது.
ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ் என்ற அரசு நிறுவனத்திடமிருந்து கணேஷ் எக்ஸ்புளோசிவ் நிறுவனம் 370 டன் வெடிபொருட்களை வாங்கியது. ஒரு மாதம் ஆன பிறகும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை. போலீசார் இரவு பகலாய் தேடி வெடிபொருள் ஏற்றிச் சென்ற 4 லாரிகளை கண்டுபிடித்தனர். அதில் வெடி பொருட்களை காணவில்லை. இந்த வெடிபொருட்கள் எங்கே போனது, மீதமுள்ள 57 வெடிமருந்து லாரிகள் என்ன ஆனது, யார் கையில் இவை கிடைத்துள்ளன என பல கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டீஸ்கரிலும் மேற்கு வங்கத்திலும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஒரு காலத்தில் அவர்களிடமிருந்தே நக்சலைட்டுகளால் கொள்ளையடிக்கப்பட்டவைதான். அலட்சியம், அஜாக்கிரதையால் பறிகொடுத்த ஆயுதங்களே அவர்களை பலி வாங்கின. இப்போது காணாமல் போயிருப்பது 370 டன் வெடி மருந்துகள். சட்ட விரோத சுரங்கத் தொழிலிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும்தான் வெடிமருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆயுதங்கள், வெடிமருந்து போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். அப்படி அளித்திருந்தால் இத்தனை லாரிகளும் காணாமல் போயிருக்காது.

Tuesday, August 17, 2010

பாகிஸ்தானில் பேரழிவு

 வாழ்நாளில் இதுபோன்ற பேரழிவை பார்த்ததே இல்லை என்று ஐ.நா சபையின் தலைமை செயலாளர் பான் கி மூன் கூறியிருக்கிறார். சிலர் எதையும் பெரிதாக செய்வார்கள்; சிலர் பெரிதாக பேசுவார்கள். மூன் எந்த ரகம் என்பதை சொல்ல தேவையில்லை.
என்றாலும் பாகிஸ்தானின் மழை வெள்ள நாசம் உண்மையில் மிக மோசமான நிகழ்வு. 80 ஆண்டுகளில் கண்டதில்லை என்று ஒரு அமைச்சர் கூறினார். இந்தியாவில் இருந்து பிரிந்து 63 ஆண்டுதான் ஆகிறது. அதற்கு முன் பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்தை நினைத்து சொல்கிறார் போலும். ஐந்து நதிகள் பாயும் பூமி ஆதலால் சூடிய பெயர் பஞ்சாப். உள்ளதில் பெரிது சிந்து நதி. அதன் வெள்ளம் மட்டும் ஆயிரம் உயிர்களுக்கு மேல் பலி கொண்டுள்ளது. இரண்டு கோடி மக்கள் வீடிழந்திருக்கின்றனர். பல லட்சம் பேரை வேறிடம் அழைத்துச் செல்கிறது அரசு.
சில இடங்களில் சிந்து நதியின் அகலம் 15 மைலாக & 24 கி.மீ. & விரிந்திருப்பதாக சேதங்களை பறந்து சென்று பார்வையிட்ட பிபிசி நிருபர்கள் பதறுகின்றனர். ஊர்கள் மிதந்தாலும் குடிக்க தண்ணீர் இல்லை, வயிற்றுக்கு உணவில்லை, நோய்க்கு மருந்தில்லை. காலரா பரவுகிறது. இந்த அழிவில் இருந்து மீள நீண்டகாலம் ஆகும். இன்னும் மழை ஓயாததால் நிவாரண பணிகள் வேகம் பிடிக்கவில்லை. ஐ.நா கேட்ட அளவில் சர்வதேச உதவியும் குவியவில்லை. ஆப்த நண்பனும் உலகின் புதுப்பணக்கார நாடுமான சீனாவே சில்லறை உதவிதான் அறிவித்துள்ளது.
இந்தியா 50 லட்சம் டாலர் கொடுப்பதாக அறிவித்தது. அதை வாங்காதே என அங்கே தலையங்கம் எழுதுகின்றனர். ஏன்? ‘வெள்ளத்துக்கு காரணமே இந்தியாதான். தனது பகுதியில் பல அணைகளை கட்டி, ஒன்று தண்ணீர் திறந்துவிடாமல் பாகிஸ்தானை பாலைவனம் ஆக்குகிறது; அல்லது இப்படி மொத்தமாக திறந்துவிட்டு வெள்ளத்தால் அழிக்கிறது. செய்வதையும் செய்துவிட்டு நல்லவன் போல் நன்கொடை தருகிறது’ என்கின்றனர்.
பூகம்பம் நிகழ்ந்தபோது இந்தியா மீது பழி போட்டது இதே அறிவாளிகள். ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் போதெல்லாம் இப்படி நம்பவே முடியாத கட்டுக் கதைகளை பத்திரிகைகள் மூலம் பரப்புவது பாகிஸ்தானில் வாடிக்கை.

Friday, August 13, 2010

காதலோ, கல்யாணமோ... சீக்கிரம்!

 சிலர் பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பார்கள். சிலரோ காதலித்தே திருமணம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பார்கள். எப்படியானாலும் சரி. கூடிய சீக்கிரம் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுங்கள். பெண் கிடைப்பது தாமதமானால் ஆயுள் குறையும் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வசதியான, அழகான ஆணுக்கு பல பெண்கள் போட்டி போடுவதும் ஒரே பெண்ணின் பின்னால் பல ஆண்கள் சுற்றுவதும் உலகம் முழுவதும் நடக்கிறது. இப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய நீண்ட போட்டிகளை சந்தித்து அதிக காலம் காத்திருப்பது உடல்நலத்தை பாதிக்கிறதா என்பது குறித்து அமெரிக்காவின் விஸ்கோன்சின், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
1957&ல் விஸ்கோன்சின் பள்ளியில் படித்த 4183 பேரின் உடல்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள் ஆகியவற்றை அலசினர். இதில் தெரியவந்த தகவல் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியது:
சில வகுப்புகளில் மாணவிகள் அதிகம் இருந்தனர். சில வகுப்புகளில் குறைவாக இருந்தனர். குறைவான மாணவிகள் படித்த வகுப்புகளில் அவர்களுடன் பழகுவதற்கு மாணவர்கள் அதிகம் போட்டியை சமாளிக்க வேண்டி இருந்தது. இத்தகைய வகுப்புகளில் படித்தவர்கள் குறைவான நாட்களே வாழ்ந்துள்ளனர். ஜோடி கிடைக்க போட்டிகளை சந்திக்கும் ஆண்களுக்கு வாழ்நாள் குறைவு என்பது இதன்மூலம் தெரிகிறது.
காதலிகள் உடனே ‘பிக்கப்’ ஆகிறவர்களைவிட தாமதமாக ‘பிக்கப்’ ஆகிறவர்களின் வாழ்நாள் குறைந்தபட்சம் 3 மாதமாவது குறைந்துள்ளது.
காதலி, மனைவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது மனதை அதிகம் பாதிக்கிறது. தினமும் மண்டையை பிளக்கிற தலைவலி ஏற்படுவதற்கு நிகரானது இந்த மன அழுத்தம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காதலி பிக்கப்போ, கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதோ சட்டுபுட்டென்று முடியுங்கள் என்று அட்வைசும் செய்கின்றனர். 
 
இன்றிலிருந்து நமது சுட்டி பையனில் புதிய பகுதி "இன்று ஒரு தகவல்"
இதில் உபயோகமான புது புது தகவல்கள் இடம் பெரும்.
இன்று ஒரு தகவல்
இன்று ஒரு WEB SITE பற்றிய தகவல்களை அறிய கீழ்கண்ட இணையதள முகவரியில்
தேடவும்.
www.websiteoutlook.com
www.whois.com 



பயோடேட்டா பார்த்து பணம் பறிக்கும் கும்பல்

 வேலை தேடுவோருக்கான இணைய தளங்களில் பதிவு செய்வோர் விவரத்தை தெரிந்து கொண்டு, வேலை தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. எனவே, தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க வேலைவாய்ப்பு இணைய தளங்கள் நடவடிக்கை தொடங்கியுள்ளன.
வேலை தேடுவோருக்கும், அதை அளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு வெப்சைட்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பயோடேட்டாவை பதிவு செய்து, போட்டோவை அப்லோடு செய்தால், வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்து நேர்காணல் அழைப்பு அனுப்பும்.
இதுபோன்ற இணைய தளங்களில் முகவரி, போன் எண், வயது, கல்வித் தகுதி, குடும்ப விவரங்கள் ஆகிய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறும். வேலை அளிக்கும் பேரில் இந்த இணைய தளங்களில் பதிவு செய்துள்ள பயோடேட்டாக்களை விஷமிகள் சிலர் பார்க்கின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள் என அதிக சம்பளத்தில் வேலை தயார் என்று அப்பாவிகள் சிலரை தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் வேலை பெற்றுத் தருவதற்கான கட்டணம், முன்பணம், செலவுகள் எனக் கூறி பணம் கறந்து விடுகின்றனர். இதுபோல சமீபத்தில் ஒருவருக்கு விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்தது.
இதுபற்றி தகவல்கள் வெளியானதால், வேலைவாய்ப்பு இணைய தளங்கள் உஷாராகின. “மோசடி பற்றி தெரிந்ததும், எங்கள் இணைய தளத்தில் பதிந்துள்ள பயோடேட்டாக்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்தோம். தனிப்பட்ட விவரங்களான முகவரி, போன், இ-மெயில் போன்றவற்றை விஷமிகள் தொடர்பு கொள்ள முடியாதபடி தடை செய்திருக்கிறோம்” என்று முன்னணி வேலை இணைய தள உயரதிகாரி நேற்று தெரிவித்தார்.

Wednesday, August 11, 2010

ஆடிப்பூரம்

 நாளைய தினம் ஆடிப்பூரம்.ஆடிப்பூரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆடிமாதம் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை யோகத்தில் நளவருடம் சனிக்கிழமை, சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாள் அது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்துக் கொண்டிருந்தார். திடீரென குவா குவா சத்தம். புதர் போல மண்டியிருந்த இடத்துக்கு சென்றவர், துளசி செடியின் அருகே கை, கால்களை உதைத்துக்கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டினார். அன்புடனும் பாசத்துடனும் தனது மகளாகவே கருதி வளர்த்து வந்தார்.
சிறு வயதில் இருந்தே கோதைக்கு ஆண்டவன் மீது மிகுந்த பக்தி. சகல சாஸ்திர ஞானங்களையும் கற்றுத் தேர்ந்தாள். இதற்கிடையில், பரந்தாமன் மீதான பக்தியானது காதலாக மாறியது. கண்ணனை தன் மணாளனாக நினைக்க ஆரம்பித்து கனவிலேயே காதல் செய்து வந்தாள்.
வயதான போதிலும், நந்தவனத்தில் பூ பறித்து பெருமாளுக்கு சாற்றும் திருப்பணியை பெரியாழ்வார் விடவில்லை. ஆண்டவனுக்கு அணிவிப்பதற்காக மாலை கட்டி வைத்திருப்பார். தந்தைக்கு தெரியாமல் அங்கு வரும் கோதை, ‘என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலைதானே. நான் அணிந்துவிட்டு கொடுத்தால்தான் என்ன’ என்று நினைப்பாள். அதை அணிந்து அழகு பார்ப்பாள் கோதை. மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவாள். இது பல நாட்கள் தொடர்ந்தது.
ஒருநாள். பகவானுக்கு சாற்ற இருக்கும் மாலையை கோதை அணிந்துகொண்டிருப்பதை பெரியாழ்வார் பார்த்து பதறிவிட்டார். “அபசாரம்! ஆண்டவனுக்காக தொடுத்துவைத்திருக்கும் மாலை. இதை சூடலாமா?” என்று கடிந்துகொண்டார். அவசர அவசரமா வேறொரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்றிவிட்டு வருகிறார்.
அன்று இரவு. பெரியாழ்வாரின் கனவில் பெருமாள். “கோதை என் மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னாயிற்று?” என்கிறார். கோதையின் பக்தியை உணர்கிறார் பெரியாழ்வார். ஆண்டவனின் உள்ளத்தையே தனது பக்தியால் ஆண்ட கோதை அன்று முதல் ‘ஆண்டாள்’ என அழைக்கப்படுகிறாள். அவள் சூடித் தரும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வருகிறார் பெரியாழ்வார்.
ஆண்டாளுக்கு 15 வயதாகிறது. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் பெரியாழ்வார். “ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவனின்றி வேறொருவரை திருமணம் செய்ய முடியாது” என்கிறாள் ஆண்டாள். குழப்பத்தில் இருக்கும் பெரியாழ்வாருக்கு அப்போதும் வழிகாட்டுகிறான் பரந்தாமன். “அவள் விருப்பப்படியே ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துவா. ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் கனவில்.
பெரியாழ்வாரின் கனவு கலைகிறது. கனவில் இறைவன்தான் கூறியிருக்கிறார் என்றாலும் சற்று குழப்பம். “கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி வந்து சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது? மானிடகுல பெண்ணை சுவாமி எப்படி திருமணம் செய்வார்? என்று பல்வேறு குழப்பங்கள் அடைந்தார்.
ஆனாலும், ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்பதில் ஆண்டாள் உறுதியாக இருந்தாள். தயக்கத்துடனேயே அவளுடன் புறப்பட்டார் பெரியாழ்வார். ஸ்ரீரங்கம் வந்தடைந்ததும் அவருக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி. காரணம் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் பட்டாச்சாரியார்கள் தயாராக காத்திருந்தார்கள். “சாட்சாத் லட்சுமி தேவியே வரப்போவதாக நேற்றுதான் எங்கள் கனவில் பெருமாள் சொன்னார்” என்றார்கள்.
சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. “ஸ்ரீரங்கநாதா” என்று கூறியபடியே கோயில் கருவறைக்கு ஓடுகிறாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி, வடிவாய் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கிறாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரமாகும்.
ஆண்டவனுடன் ஆண்டாள் இரண்டற கலப்பதற்குமுன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை நமக்கு அருளித்தந்துள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இதில் உணர்த்தியிருக்கிறார். இயற்கையின் தத்துவத்தையும் தன் தீஞ்சுவைத் தமிழில் நமக்கு அருளியுள்ளார். இதில் திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம், மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க அருள்புரிந்துள்ளார். நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்துப் பாடல்கள் திருமணப் பாடல்கள். திருப்பாவையையும், வாரணாமாயிரத்தையும் பக்தி சிரத்தையுடன் படிப்பதால் தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும். கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமணம் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.
பக்தியால் இறைவனை நெருங்கி உயர்வு பெற்ற ஆண்டாள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூர திருநாள். வாழ்வில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் இறைவன் அருளையும் பெற இந்நன்னாளில் அவள் பாதம் பணிவோமாக.

மனித இனமே கூண்டோடு அழியுமா?

 அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:
நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எனினும், மனித இனம் பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த சில நூற்றாண்டுகளில் பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கடந்த காலங்களில் சில சமயங்களில் மனித இனம் இனியும் தப்புமா? என்ற கேள்வி எழுந்ததும், அதிலிருந்து நூலிழையில் தப்பியதையும் அறிவோம். 1963ல் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இதுதவிர, 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரி க்கா அணுகுண்டு விசியதால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களிலும் அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது. இவற்றை எல்லாம் எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பூமி வெப்பமாதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை தடுக்க வேண்டும்.
இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இதிலிருந்து தவறினால் மனித இனமே கூண்டோடு அழியலாம்.
எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழ வேண்டுமானால், வேற்று கிரகங்களில் குடியேற்றுவது அவசியமாகிறது. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.

Tuesday, August 10, 2010

சென்னை சாலைகளில் பைக் ரேஸ்

 சென்னை சாலைகளில் சில நேரங்களில் காதைப் பிளக்கும் சத்தத்துடன், பயங்கர வேகத்துடன் மோட்டார் சைக்கிள்களும், ஆட்டோக்களும் பாய்ந்து செல்வதைப் பார்த்திருப்போம். ‘ஏதோ அவசரம் போல’ என்றுகூட நினைத்திருப்போம். ஆனால் சீப் த்ரில்லுக்காகவும் பரிசு பணத்துக்காகவும்தான் இப்படி உயிரைப் பணயம் வைத்து ரேஸ் விடுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை போலீஸ்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் பெரும்பாலும் இதுபோன்ற பைக், ஆட்டோ ரேஸ் நடக்கிறது. நண்பனுடன், காதலியுடன், மனைவியுடன் என பல பிரிவுகளில் நடக்கும் பைக் ரேஸ், பெரும்பாலும் பீச்சில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரங்களில் பரிசுத் தொகையும் சில நேரங்களில் 10 பவுன், 15 பவுன் செயினும் பரிசாக கிடைக்கும். ஆட்டோ ரேஸிலும் இப்படி பல பிரிவுகள் உள்ளன. இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சூதாட்டமும் நடக்கிறது. இதிலும் பல ஆயிரங்கள் புழங்குகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் பாதுகாப்புக்கு ஹெல்மெட்கூட அணிவதில்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமான வேகத்தில் பறப்பதால் ரேஸின் போது பல நேரங்களில் உயிர்ப் பலியும் நடக்கிறது. அதோடு எதிரே வந்தவர்கள், குறுக்கே வந்தவர்கள் என பலரும் பலியாகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் ஈசிஆர் சாலையில் நடந்த ஒரு விபத்தில் 20 வயது இளைஞன் ஒருவனும் 25 வயது இளைஞன் ஒருவனும் பலியானார்கள். இவர்கள் ரேஸில் பங்கேற்றவர்கள்.
சாலை விதிகளை மீறி இதுபோல் ரேஸ் நடத்துபவர்களை போலீஸ் எச்சரித்துள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வது, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது முதல் சிறைத் தண்டனை அளிப்பது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் போக்குவரத்துக்கு மட்டும்தான். ரேஸ் நடத்துபவர்கள் அதற்கென உள்ள மைதானங்களில்தான் நடத்த வேண்டும். சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிரோடு விளையாட யாருக்கும் உரிமை இல்லை. இதை ரேஸ் பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

 அடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக் இதோ:
கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி. (எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன)
ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர்.
அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார். பின் நம்பர் கேட்கும். பட்டனை அழுத்துவார். ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும்.
அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.
அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

Monday, August 9, 2010

காஷ்மீரின் சோகம்

 பட்ட காலிலேயே படும் என்பார்கள். காஷ்மீர் விஷயத்தில் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே வன்முறை, கலவரம், துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என ரணகளமாக இருக்கும் காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே மாவட்டம் பேய் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 600 பேரைக் காணவில்லை என லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் மிகவும் ரம்மியமான பகுதி லே மாவட்டம். இதனாலேயே எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். காஷ்மீரே பற்றி எரிந்தாலும் எந்தப் பிரச்னை இருந்தாலும் இந்தப் பகுதி மட்டும் அமைதியாக இருக்கும். இந்தப் பகுதியின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் சுற்றியே இருப்பதால், அவர்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் உள்ளூர் மக்கள் விரும்புவதில்லை. யார் கண் பட்டதோ திடீர் பேய் மழையில் சிக்கி சீரழிந்து விட்டது லே மாவட்டம். இந்தப் பகுதி முழுவதும் மண்ணால் கட்டப்பட்ட வீடுகள்தான். அதுவே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பனிக் கட்டியுடன் பெய்த பேய் மழையில் இந்த மண் வீடுகள் கரைய பல கிராமங்கள் சேற்றில் மூழ்கிவிட்டன. சாலைகளில் முழங்கால் அளவுக்கு சேறும் சகதியுமாய் இருக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதாலும் மீட்புப் பணிகள் முடங்கிப் போய் கிடக்கிறது. ஊரை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் அங்கேயே தங்கி மீட்புப் பணிகளில் மனித நேயத்துடன் உதவி வருவது நெகிழ்ச்சி தருகிறது.
தெருவெங்கும் சகதி. அதில் சிக்கித் தவிக்கும் லாரிகள், கார்கள், பஸ்கள். முழங்கால் ஆழம் உள்ள சேற்றில் தட்டுத் தடுமாறி புகலிடம் தேடி போகும் மக்கள் என எங்கு பார்த்தாலும் சோகம். ஒட்டுமொத்த கிராமமே சேற்றில் மூழ்கியதால் உயிர் பிழைத்தவரும் இல்லை, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவும் ஆளில்லை. கார்கில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களையும் காணவில்லை. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எல்லையில் இருந்த பாகிஸ்தான் வீரர்களும் இதில் பலியாகி இருக்கலாம் என்கிறார்கள். நாடுகளுக்குத்தான் எல்லை. இயற்கைக்கு இல்லை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 7, 2010

இந்த வார காமெடி:

 இந்த வார காமெடி:
HAPPY WEEK END

கார் இனி காற்றில் ஓடும்

 ஏறிவரும் பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை பாடாய் படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ஆம்..பெட்ரோலுக்கு பதில் காற்றை, எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட வைக்கலாம் என்கிறார்கள்.
மண்ணில் வாழும் ஒரு வித பாக்டீரியா உருவாக்கும் என்ஸைம் மூலம் காற்று எரிபொருளை தயாரிக்கலாம் என்று சொல்லும் விஞ்ஞானிகள் இந்த காற்று எரிபொருள் சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற காதுக்கு இனிய செய்தியையும் தருகிறார்கள். கார்பன் நியூட்ரல் கிரீன் எரிபொருள் எனப்படும் இந்த எரிபொருளை பயன்படுத்தி கார் இஞ்சினை இயக்கலாமாம்.
‘அசோட்டோபாக்டர் வினேலன்டி’ எனும் ஒரு வகை பாக்டீரியா தாவரங்களின் வேர்களை சுற்றியுள்ள மண்ணில் வாழ்கிறது. இந்த பாக்டீரியா ‘வனேடியம் நைட்ரோஜினேஸ்’ எனும் என்ஸைமை உருவாக்குகிறது. இந்த என்ஸைம் நைட்ரஜன் வாயுவிலிருந்து அம்மோனியாவை தயாரிக்கும். ஆனால் இப்போது புரோப்பேன் எனும் வேதிப்பொருளையும் உருவாக்குவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த புரோப்பேனை பயன்படுத்திதான் எரிபொருளை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மார்க்கஸ் ரிப்பே இதுபற்றி கூறும்போது, வனேடியம் நைட்ரோஜினேஸ் என்ஸைம், புரோப்பேனில் எளிய கார்பன் சங்கிலியை உருவாக்குகிறது. இந்த எளிய கார்பன் சங்கிலியை, நீளமான கார்பன் சங்கிலிகளாக மாற்றும் போது கிடைக்கும் வேதிப்பொருளை சிந்தட்டிக் எரிபொருளாக நாம் பயன்படுத்தலாம், எனவே காற்றுடன் பாக்டீரியாவை வினைபுரிய வைத்து புதிய வகை எரிபொருளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார்.
வாகனங்களில் பெட்ரோலை பயன்படுத்தும் போது கார்பன் மோனாக்ஸைடு வெளியாகி சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை காற்று எரிபொருளில் அந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் மார்க்கஸ்.

Friday, August 6, 2010

இந்தியா - பாகிஸ்தான் எல்லை

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தினம் காலை- மாலை இரு வேளையிலும்
நடக்கும் அற்புதமான நிகழ்வு


லஞ்சம்

 லஞ்சம் வாங்கியதாக சென்னையில் ஒருவரும் மதுரையில் மற்றொருவருமாக கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு போலீஸ் எஸ்.ஐ.க்கள் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பளம் போதவில்லை என காரணம் சொல்ல முடியாது. சொகுசு வாழ்க்கை, சின்ன வீடு, பினாமி பெயரில் நிலம் போன்ற ஆடம்பர விஷயங்களுக்காகத்தான் இப்படி லஞ்சத்தில் திளைக்கின்றனர் சில போலீசார்.
சென்னையில் சாதாரண மழை நீர் தகராறு. எதிர் வீட்டுக்காரர் புகார் தர, மாஜி ராணுவ வீரரை பேன்ட், சட்டையை கழற்றச் சொல்லி அடாவடி செய்திருக்கிறார் சென்னை எஸ்.ஐ. லோக்கல் போலீசின் பவர் தெரியுமா... என்ற ரீதியில் லெக்சர் அடித்ததோடு, வேலையை காலி செய்து விடுவேன் என மிரட்டி, கடைசியில் மாஜி ராணுவ வீரர் என்பதால் சாதா கேஸ் போட்டு விட்டு விடுகிறேன்... பத்தாயிரம் பணம் கொடு என கேட்டிருக்கிறார். ஏற்கனவே பேன்ட்டை கழற்ற சொன்னதால் நொந்து போயிருந்தவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ய, பணம் வாங்கும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அந்த எஸ்.ஐ.
மதுரையில் இடத் தகராறு. எப்ஐஆரில் உறவினர்கள் பெயரை நீக்கவேண்டும் என ஒருவர் கோரிக்கை வைக்க,3 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார் மதுரை எஸ்.ஐ. இதில் இவருக்கு 2 ஆயிரமாம். ஸ்டேஷன் செலவுக்கு ஆயிரமாம். பணம் கைமாறியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த எஸ்.ஐ. 2003ல் லஞ்சம் வாங்கியபோது கைதானவராம். இப்போது மீண்டும் கைதாகியிருக்கிறார்.
எந்த வேலை பார்த்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, போலீஸ் ஸ்டேஷன் போய் விட்டால் மரியாதையே கிடைக்காது. வாடா, போடா என ஏக வசனம். அரசியல் செல்வாக்கு இருந்தால் உட்கார சீட் கிடைக்கும். இல்லாவிட்டால் ஜட்டியோடு குத்தவைச்சு உட்கார வைப்பார்கள். நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற நிலை இருப்பதால்தான் போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அங்கு போகவே பயப்படுகிறார்கள். அதற்கு கட்டப் பஞ்சாயத்து தேவலை என்று நம்புகிறார்கள். மக்களின் பயத்தை போக்க வேண்டியது அவசியம். அது நேர்மையான போலீசாரால்தான் முடியும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் மக்களுக்கும் போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படும்.

Wednesday, August 4, 2010

ஆசிரியப் பணியிலும் பினாமியா?

 
  கோடிக்கணக்கில்சொத்து வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் வருமான வரிக்கு பயந்து பினாமி வைத்திருப்பார்கள். பினாமியாக இருப்பவருக்கு தன் பெயரில் எவ்வளவு சொத்து இருக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாது. பத்திரத்தில் கையெழுத்து போடுவதோடு அவர் வேலை முடிந்தது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் பினாமியாக ஒருவரை நியமித்து தனது வேலையை பார்க்க வைத்துள்ளார். அவருக்கு இவரே சம்பளமும் கொடுத்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் தரம் குறைவாக இருக்கிறது என்றும் தேர்ச்சி விகிதம் திருப்தியில்லை என்றும் அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர ஆசிரியர்கள் ஓரளவுக்கு முயற்சி எடுக்கிறார்கள். அதனால் தரமும் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அது ஆரம்ப பள்ளியாக இருந்தாலும் சரி மேல்நிலைப் பள்ளியாக இருந்தாலும் சரி... மாதத்தில் பாதி நாட்கள் பல ஆசிரியர்கள் வேலைக்கு வருவதில்லை. லீவு, லீவு, லீவுதான். விவசாயம், வட்டிக்கு விடுதல், நில புரோக்கர் என சைடு பிசினஸை கவனிப்பதில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அது போரடித்தால் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கினால், மாணவர்கள் கதி அவ்வளவுதான். இதில் ஒரு ஆசிரியர் ஒரு படி மேலே போய் தனக்கு பதிலாக வேறு ஒருவரிடம் தனது வேலையை பார்க்க சொல்லியிருக்கிறார். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் என்பதால் இவரின் சம்பளம் ரூ.40 ஆயிரம். இவர் கொடுத்தது வெறும்
ரூபாய்.2,500.தான் வேலை பார்க்காமலே ரூபாய். 37,000 சம்பாத்தியம்.
இப்படி ஒரு மாதமல்ல, இரண்டு மாதமல்ல. 24 மாதம் மோசடி செய்திருக்கிறார்.
இவர் வேலை பார்த்த கோபியில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 13 பேரும் இந்த ஆண்டு 16 பேரும் பெயில். மொத்த மாணவர்கள் எண்ணிக்கையே அந்த வகுப்பில் 30 பேர்தான். பாதிக்குப் பாதி பெயில். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் 2 படிப்பில் இப்படி ஒரு மோசமான ரிசல்ட். இதுபற்றி விசாரித்த போதுதான் பினாமி விஷயமே வெளியே தெரிந்திருக்கிறது. இன்னும் எத்தனை பள்ளிகளில் பினாமிகள் பாடம் நடத்துகிறார்களோ... பாவம் மாணவர்கள்.
ஆசிரிய பணி மிகவும் புனிதமான பணி,இதிலும் போலிகளா?

Tuesday, August 3, 2010

ஆடிக் கிருத்திகை

ஞானத்தின் வடிவான முருகப் பெருமான் ஞானப்பழத்துக்காக தாய், தந்தையருடன் சண்டை போட்டுக்கொண்டு திருப்பழநிக் குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் பெற்றது.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள், சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, செடில் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்திபாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.
அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் ஞான சக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்!

உயிருக்கு உலை வைக்கும் குவாரிகள்

 சென்னையை அடுத்த திரிசூலம் மலையில் உள்ள கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து தொழிலாளி ஒருவர் பலியாகி இருக்கிறார். பாறை விழுந்து மற்றொரு தொழிலாளியின் கால் உடைந்து விட்டது. எந்த நேரமும் பாறைகள் விழும் அபாயம் நிறைந்த பகுதியில் எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யப் படாததால் உயிர்ப்பலியும் படுகாயமும் நடந்திருக்கிறது.
குடும்பம், குடும்பமாக கூட்டிவந்து கொத்தடிமைகளாக நடத்துவது, குழந்தைத் தொழிலாளர்கள், தொழில் போட்டியில் எதிரிகளை வெடிவைத்து காலி செய்வது, ஒரு இடத்தில் குவாரி உரிமம் வாங்கிவிட்டு சுத்தி இருக்கும் பல மைல் பரப்புக்கு நிலத்தை ஆக்கிரமித்து சுரண்டுவது என குவாரி தொழிலில் பல தவறுகள் நடக்கின்றன. பண பலம், ஆள் பலம், அரசியல் செல்வாக்கு இருந்தால் மட்டுமே குவாரித் தொழில் செய்ய முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. சட்டத்தைக் காட்டி தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளின் சட்டைப் பையில் பணம் கொட்டப்படுவதால் அவர்களும் எதையும் கண்டுகொள்வதில்லை. கோடி கோடியாய் கொட்டினாலும் குவாரி தொழில் நடக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான குவாரிகள், சுரங்கங்களில் ஓரளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதால், அங்கெல்லாம் விபத்துகள் நடந்தாலும்  பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் சிறிய குவாரிகளில் எந்த  பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. எண்ணிக்கையில் இவைதான் அதிகம். அதனால்தான் உயிர் பலியும் அதிகமாக இருக்கிறது.
தொழிலாளர்கள் பணி நேரத்தில் ஹெல்மெட், தூசி, சிதறும் சிறு கற்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க கண்ணாடி, கைகளுக்கு உறை, கால்களுக்கு ஷூ போன்றவை அணிந்திருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த பாதுகாப்பு சாதனங்களும் குவாரிகளில் வழங்கப்படுவதில்லை. இதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகளில் உயிர் பலி ஏற்படுகிறது. விபத்து நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எந்த வகையிலும் முறையான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. குடும்பத் தலைவரை இழக்கும் அந்தக் குடும்பம் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. திரிசூலம் விபத்து சம்பவத்தில் பலியான தொழிலாளி ஹெல்மெட் அணிந்திருந்தால் ஒரு உயிர் பலியை தடுத்திருக்கலாம். இனியாவது இதுபோல் நடக்காமல் தடுக்க இது பாடமாக அமைந்தால் நன்றாக இருக்கும்.
Related Posts with Thumbnails
 

Blogger