Monday, April 26, 2010
சென்னை - ஐ பி எல்- சாம்பியன்
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது. மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் பூவா தலையான வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.இதன்படி முரளி விஜயும், மேத்யூ ஹைடனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 8வது ஓவரில் விஜய் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் 2 சிக்சர், பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த ஓவரில் ஹைடனும் ஆட்டம் இழந்தார்.அடுத்து ஆடவந்த தமிழக வீரர் பத்ரிநாத் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். 12 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 68 ரன்களே எடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் காணப்பட்டது.இந்த சூழலில் சுரேஷ் ரெய்னாவும், தோனியும் ஜோடி சேர்ந்தனர். அணியின் நிலைமையை உணர்ந்து ரெய்னா நாலாபுறமும் பந்துகளை விரட்டியடித்தார். சிக்சர்களும் பறந்தன. அவரது அதிரடியால் ஆட்டத்தில் சூடுபிடித்தது. சென்னை அணியின் ரன் வேகமும் மளமளவென உயர்ந்தது. ஸ்கோர் 139 ரன்களை எட்டிய போது, தோனி 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.தொடர்ந்து இறங்கிய அல்பி மோர்கல் தனது பங்குக்கு 15 ரன்கள் அணிக்கு பெற்றுத்தந்தார். இதற்கிடையே அரைசதத்தை கடந்த சுரேஷ் ரெய்னா கடைசி வரை களத்தில் நின்று சென்னை அணி சவாலான ஸ்கோரை எட்ட துணையாக நின்றார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 35 பந்தில் 57 ரன்கள் குவித்த ரெய்னா 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ஷிகர் தவானும், சச்சின் டெண்டுல்கரும் களம் புகுந்தனர். தவான் ரன் ஏதுமின்றி போலிஞ்சர் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் டெண்டுல்கரும், அபிஷேக் நாயரும் இணைந்தனர்.சென்னை அணியின் பவுலிங் தாக்குதலில் மும்பை அணியின் ஸ்கோர் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது. விரல் காயத்தையும் பொறுத்துக் கொண்டு களம் இறங்கிய தெண்டுல்கர் வழக்கம் போல் நேர்த்தியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 67 ரன்களாக உயர்ந்த போது, நாயர் 27 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்பஜன்சிங்கும் (1) அதே ஓவரில் வீழ்ந்தார்.இதை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் ஜகாதி ஒரே ஓவரில் இரட்டை விக்கெட்டை கைப்பற்றி மும்பையை நெருக்கடிக்குள் தள்ளினார். டெண்டுல்கர் 48 ரன்களிலும், சவுரப் திவாரி ரன் ஏதுமின்றியும் கேட்ச் ஆனார்கள். டுமினியும் வந்த வேகத்தில் நடையை கட்டினாலும், அதிரடி சூரர் பொல்லார்ட் களம் புகுந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு உருவானது. அதிரடியாக ஆடிய அவர் 10 பந்தில் 27 ரன்களில் ஆட்டம் இழந்ததும், ஆட்டம் முழுமையாக சென்னை வசம் ஆனது.கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட போது, மும்பை அணியால் 4 ரன்களே எடுக்க முடிந்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முதலாவது ஐ.பி.எல்-லில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. முதலாவது ஐ.பி.எல். கோப்பையை (2008ஆம் ஆண்டு) வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது கோப்பையை (2009) கில்கிறிஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Posted by
INDIA 2121
at
Monday, April 26, 2010
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment