பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?
அந்த அசுரனின் பெயர் இடும்பாசுரன். பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவரின் கட்டளைக்கு அசுரர்கள் செவிசாய்ப்பார்கள். அப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரண்டு பிரமாண்டமான மலைகளை தமிழகத்தின் தென்பகுதியில் அமைக்க இடும்பாசுரனை பணித்தார் அகத்தியர். இரண்டு மலைகளின் உச்சிகளையும் கயிற்றில் கட்டி, அவற்றினூடே ஒரு நீண்ட கழியைப் பொருத்தி காவடி தூக்குவதுபோல அநாயசமாகத் தூக்கிவந்தான் அசுரன். பழநிக்கு அருகில் அவற்றை வைத்தான். அதே தலத்தில் எதிரே குமரனும் மலைமீது நின்றிருப்பதை கவனித்தான். இதென்ன எங்கு போனாலும் தேவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதே என சீற்றம் கொண்டான். குழந்தை குமரனை சிறிய பாலகன்தானே என அலட்சியத்தோடு பார்த்தான். அடேய்... பாலகா என பாலமுருகனை விளித்தான். போருக்கு வருகிறாயா, அல்லது இப்பொழுதே பணிந்து விடுகிறாயா? என கேட்டான்.
போரிட்டுதான் பார்க்கிறேனே என்று பாலமுருகனும் போருக்கு நின்றான். தொடக்கத்திலிருந்தே சிறுவன் மிகப்பெரிய வீரனாக விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து இடும்பன் மிரண்டான். ஈசனின் ஞானாக்னியிலிருந்து உதித்தவன் எரிமலையாக வெடித்தது கண்டு தலைதெறிக்க ஓடினான். ஆஹா... இது இறையாயிற்றே தவறாக உரசிப் பார்த்து சூடு போட்டுக் கொண்டோமே என பயந்தான். பாலமுருகன் விடாது தொடர்ந்தான். இடும்பனின் மனைவி இடும்பி கந்தா... என் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள் என பாதம் பணிந்து கதறினாள். இடும்பனும் ஞானமே உருவான பாலமுருகனின் திருவடி பரவினான். தான் எப்போதும் உங்களை தரிசித்தபடியே இங்கேயே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான். முருகனும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.
இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.
பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.
இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
Thursday, April 29, 2010
ஆன்மிகம் -அசுரனுக்கும் ஓர் ஆலயம்
Posted by
INDIA 2121
at
Thursday, April 29, 2010
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment